ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 25, 2016

நம் உயிருக்குள் செய்ய வேண்டிய யாகம்...!

இன்றைய விஞ்ஞான உலகில் பேரழிவு வந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் பல முறை இந்த உபதேசத்தைக் கேட்கின்றார்கள், படிக்கின்றார்கள்.

கேட்டாலும் கூட “நாங்கள் அந்த அருள் சக்தி பெறவேண்டும்.., அந்த அருள் ஒளி எங்களுக்குள் வளரவேண்டும்” என்று எவரும் கேட்பதில்லை.

இந்த வாழ்க்கையில் வரும் “குறைகளையும்.., தன்னை ஏமாற்றியவர்களையும்.., ஏமாற்றப்பட்டதையும்தான்..,” எண்ணிக் கொண்டுள்ளார்கள்.

அதை எம்மிடமும் பாய்ச்சத் தொடங்கிவிடுகின்றார்கள். நூற்றுக்கு ஒன்று இரண்டு தான் தப்பித் தவறி அந்த “அருள் ஞானம் பெறவேண்டும்..,” என்ற நோக்கில் எம்மை அணுகுகின்றார்கள்.

குருநாதர் எமக்கு எவ்வளவு பெரிய சக்தி கொடுத்திருந்தாலும் நீங்கள் விடும் மூச்சலைகள் சங்கடத்தையும் வேதனையும் இங்கே என்னிடம் வெளிப்படுத்தினால் அதை ஜீரணிப்பதற்கே எனக்கு நேரம் போதாது போலிருக்கிறது.

இதிலிருந்து மீண்டுதான் நான் அந்த உயர்ந்த சக்தியை எடுக்க வேண்டும்.

நான் எந்த அளவிற்கு உபதேசித்து மக்கள் கூடுகின்றனரோ மக்கள் மத்தியிலே விளைந்த அவர்களுடைய வேதனையும் வெறுப்பு உணர்வுகளும் குறைகளும் குறையின் உணர்வுகளைத்தான் என் மேல் பாய்ச்சப்படுகின்றது.

ஆக, “நான் உணர்த்திய மெய் உணர்வை எடுத்து வளர்க்கும் தன்மை.., இன்னும் வளர்ச்சி அடையவில்லை”.

உடல் இச்சையின் உணர்வே வளர்கின்றது. “ஆயிரம் ஆண்டுகள் வாழ்கின்றோம்.., வாழ்வோம்..,” என்ற நம்பிக்கையில் வாழ்வது போல் தெரிகின்றது.

இன்றைய நிலைகளில் விபத்துக்களும் விபரீதங்களும் தீவிரவாதச் செயல்களும் உலகெங்கிலும் நடந்து கொண்டிருக்கின்றது.

மத பேதம் இன பேதம் மொழி பேதம் என்று உலகில் பெரும் சக்தியாகப் பரவி மனிதனை மனிதன் இரக்கமற்றுக் கொன்று புசிக்கும் நிலையும் அதைக் கண்டு ரசித்து வாழும் நிலைகள் தான் அதிகரித்து வருகின்றது.

இந்த உணர்வுகளை நாம் நுகரப்படும்பொழுது நாம் பெறும் உயர்ந்த சக்தியும் பெற முடியாத நிலைகள் தடைப்படுகின்றது.

“சாமி செய்வார்.., சாமியார் செய்வார்.., ஜோதிடம் செய்யும்..,” என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம். யாகத்தைச் செய்து பாவத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் இன்னமும் இருக்கின்றோம்

நமது உயிர் "நெருப்பாக..," இருக்கின்றது. துருவ நட்சத்திரத்தின் அருள் உணர்வை உயிர் என்ற யாகத்தீயில் போட்டவுடன் அதனின் உணர்ச்சிகள் நமக்குள் வருகின்றது.

புற யாகத்தில் பல பொருள்களை யாகத்தீயில் போட்டவுடன் புகை வருகின்றது. அதை அடக்குவதற்கு நெய்யை ஊற்றுகின்றோம்.

அதைப் போன்று, வேகமான உணர்வு வந்ததென்றால் அந்த நெடியான உணர்வு இயக்கும் பொழுது, அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை இயக்கினால் அந்த நெடியை அடக்கும்.  அந்த உணர்வின் தன்மை கொண்டு நமக்குள் மகிழ்ச்சியூட்டும்.

ஆகவே, உங்களை தீமையான உணர்வுகள் இயக்கிவிடக் கூடாது. அந்தச் சந்தர்ப்பத்தில் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நெடியை அடக்கிவிடும் தன்னிலை அடையலாம்.

இப்படி எந்த நேரத்திலும் நாம் துருவ நட்சத்திரத்தின் உணர்வைச் சேர்த்து, சர்வ தீமைகளைலிருந்தும் விடுபட முடியும்.

ஆகவே, அந்த மெய்ஞானிகள் பெற்ற உயர்ந்த சக்திகள் அனைத்தும் உங்களுக்குள் அதைப் பெறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன். அந்த எண்ணத்தில் தான் உங்களுக்குள் ஆழமாகப் பதியச் செய்கின்றேன்.

எவரொருவர் “கூர்ந்து உற்று நோக்கி..,” அதைப் பெறவேண்டும் அது எங்களுக்குள் வளரவேண்டும் நஞ்சினை வென்றிட வேண்டும் அருள் ஒளி எங்களுக்குள் பெறவேண்டும் என்ற உணர்வை எடுக்கின்றார்களோ அவர்களுக்குள் அச்சக்தி நிச்சயம் கிடைக்கின்றது.