ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 16, 2016

யாம் சொல்வதைச் சீராகக் கடைப்பிடிப்பவர்களுக்கு யாம் கொடுக்கும் பாதுகாப்பு


குடும்பத்தில் குழந்தை நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். ஆனால், அவன் சந்தரப்பம் நோய்வாய்ப்படுகின்றான் என்று வைத்துக் கொள்வோம்.

அதனால் அவன் வேதனைப்படுகின்றான். குழந்தை வேதனைப்படுவதைப் பார்த்து நாமும் அதைச் சுவாசித்து வேதனைப்படுகின்றோம். வேதனைப்பட்டு அழுகின்றோமே தவிர வேதனையை நீக்கும் உபாயம் இல்லை.

மருந்தைக் கொடுக்கலாம், காசைக் கொடுக்கலாம், ஆனால் முழுமைக்கும் வேதனைப்படுகின்றோம்.

அந்த மகரிஷிகளை எண்ணி மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெறவேண்டும். எங்கள் உடலில் இருளை நீக்கும் அருள் சக்தி பெறவேண்டும். அதே போன்று குழந்தையும் மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும்,

அறியாது சேர்ந்த அந்த இருள் நீங்கி அவன் தெளிவான நிலைகளில் வரவேண்டும் என்று நீங்கள் அந்த உணர்வலைகளைக் கொஞ்சம் பாய்ச்சிப் பாருங்கள்.

இப்படிச் செய்தால் அது உங்களைக் காக்கும். குழந்தையையும் காக்கும். இந்த நிலைக்கு வரவில்லை என்றால் அது உங்களுடைய இஷ்டம்.

குருநாதர் காட்டிய நிலையில் காடு மேடெல்லாம் சுற்றினேன், கஷ்டப்பட்டேன். அந்த அருள் மகரிஷிகளின் ஆற்றல்களையெல்லாம் நீங்கள் பெறவேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன்.

அந்த ஆசை நிறைவேறும் என்ற நிலைகளில்தான் கூடுமான வரையிலும் நான் நேரம் காலம் பார்க்காமல் உபதேசித்து வருகிறேன். மற்ற மார்க்கங்களிலோ மற்றவர்களோ இந்த நேரத்திற்குத்தான் வரவேண்டும், அப்பொழுதுதான் பார்க்க முடியும் என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனால், நீங்கள் எந்த நேரத்தில் கேட்டாலும் ஆறுதல் சொல்லக்கூடிய அளவிற்கு அந்த மகரிஷிகளின் ஆற்றலை எடுக்கக்கூடிய சந்தர்ப்பத்தை உங்களுக்கு ஏற்படுத்துகின்றோம்.

அப்படி ஏற்படுத்தினாலும், அதைக் கேட்பார் இல்லை. தலை வலியும் மேல் வலியும் தான் நான் கேட்க வேண்டியுள்ளது.

எனக்கு பிழைப்பதற்கு ஒரு நல்ல உபாயம் வேண்டும்,
அந்த அருள் கொடுங்கள்,
அந்த ஞான சக்தி கொடுங்கள்
என்று கேட்பார் யாரும் இல்லை. நீங்களே எண்ணி நீங்களே தான் வளர்க்க முடியும்.

ஆகவே, வேதனையையும், நோயையும் வளர்ப்பதற்கு நீங்கள் என்னிடம் கேட்க வேண்டாம்.

அதனால் தான் நீங்கள் எந்நேரம் வந்தாலும் அந்த அருள் வாக்குகளைக் கொடுக்கின்றோம் என்று சொன்னால் அதை நீங்கள் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆனால், அப்படிச் செய்யாமல்
எனக்கும் அந்த வேதனயைத் தான் தூண்டுகின்றீர்கள்.

வேதனையை நீக்குவதற்கு மணிக்கணக்கில் நான் இப்படி உபதேசிக்கின்றேன். அதை எடுக்க வேண்டுமா இல்லையா..?

ஒரு நாளைக்கு எனக்கு என்று ஒரு நான்கு மணி நேரம் தான் இருக்கிறது. தினசரி வாழ்க்கையில் எப்படி நாம் உடுத்தும் துணிகளில் உள்ள அழுக்கை சோப்பைப் போட்டு வெளியேற்றுகின்றோமோ அதே மாதிரி பல மகரிஷிகளின் அருளை நான் எடுக்கின்றேன்.

அந்த மகரிஷிகள் எதெனதன் வழிகளில் எடுத்தார்களோ அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எடுத்து என் ஆத்மாவைச் சுத்தப்படுத்திக் கொள்கின்றேன்.

இல்லாமல் போனால் உங்களை மாதிரி என் உடலில் பல நோய் வரும். ஏமாந்தேன் என்றால் கரணம் தப்பினால் மரணம் என்கிற மாதிரி சர்க்கஸில் விளையாடுகிற மாதிரி
பிறருடைய உணர்வு அதிகமாகிவிட்டால்
அவர்களின் உணர்வுகள் என்னைத் தாக்கத்தான் செய்யும்.

இதே போல நான் சொன்னபடி கேட்டு வழி நடக்கும் மற்ற தியானவழி அன்பர்கள் அருள் வழியில் பெற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். அவர்கள் போகும்போது அவர்களிடமும் இதே போன்று கஷ்டம், வேதனை என்று சொல்கின்றார்கள்.

தியான வழி அன்பர்கள் இத்தகைய நிலையைச் சந்திக்கும் நிலையில் அவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையில் நான் அந்த மகரிஷிகளின் அருளைப் பிரார்த்திக்கின்றேன்.

இல்லையென்றால், நானே இப்படி இருக்கின்றேன் என்றால் அவர்களுடைய நிலை எப்படி இருக்கும்?
அவர்களையும் காக்கப்பட வேண்டும்
நல்லதை மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்ல வைக்க வேண்டும்,
நல்லதை அவர்கள் செயல்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான்
தியான வழி அன்பர்கள் இதைப் பெறவேண்டும் என்று
ஊக்கத்தை நான் கொடுக்கின்றேன்.

ஆர்வத்துடன் அவர்கள் மற்றவர்களுக்கு நல்லதைச் சொல்லும் நிலையில் கஷ்டத்தையெல்லாம் அவர்களிடமும் சொல்லும்போது என்ன ஆகும்?

ஆக, அவர்களைக் காப்பாற்றுவதற்கு நான் அதைச் செய்யவில்லை என்றால் தியான வழி அன்பர்களும் இரண்டு நாள் சொல்லிவிட்டு பின் சோர்வடைந்துவிடுவார்கள்.

நல்லது செய்யவேண்டும் என்று எண்ணினால் அந்த வலுவை அவர்களுக்குக் கொடுத்து அவர்களுக்காக வேண்டிப் பிரார்த்தனை செய்து யாம் அந்த வலுவை ஏற்றிக் கொண்டேயிருக்க வேண்டும்.

குருநாதர் காட்டிய அருள் வழியைக் கடைப்பிடிக்கும்போது எனக்கு குருநாதர் எப்படிப் பாதுகாப்பு கொடுத்தாரோ அந்த நிலையில்தான் யாமும் செயல்படுகின்றோம்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டிய அருள் வழியினை நீங்கள் கடைப்பிடியுங்கள். அவருடைய துணை கொண்டு எல்லா மாமகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறுங்கள். தீமைகளிலிருந்து விடுபடும் பேராற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள்.

உயிருடன் ஒன்றிடும் உணர்வுகளை ஒளியாக மாற்றுங்கள். பெற்ற அருள் சக்திகளை எல்லோரும் பெறவேண்டும் என்று தவமிருங்கள், அந்த உணர்வை உங்ககள் மூச்சலைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யுங்கள்.

அதன் வழி நடந்தால் விண்ணும் மண்ணும் போற்றக் கூடிய நிலையில் அந்த மாமகரிஷிகளைப் போன்று ஆவீர்கள். எமது அருளாசிகள்.