ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 15, 2016

காசைக் கொடுத்துக் கஷ்டத்தைப் போக்கத்தான் விரும்புகின்றோம் – குருநாதர் எனக்குக் கொடுத்தது என்ன?

ஒவ்வொரு அணுவின் தன்மையும் எவ்வாறு செயலாக்குகிறது என்று குருநாதர் எனக்குத் தெளிவாக உணர்த்தினார்.

அவர் காட்டிய அருள் வழியில் எனக்கு எதையெல்லாம் போதித்து உணர்வினைப் பதிவு செய்தாரோ அவை அனைத்தையுமே உங்களிடம் ஒவ்வொரு ஆண்டும் குரு பூஜை அன்று (வைகுண்ட ஏகாதசி) தெளிவாகக் காட்டிக் கொண்டே வருகின்றேன்.

எனக்கு ஆறே மாதத்தில் எல்லாவற்றையும் காண்பித்தார் குருநாதர். அதே போல் ஆறு மாதத்தில் உங்களுக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றால் “நீங்கள் எங்கே..?”

இந்த வாழ்க்கையில் “அது அப்படி இருக்கிறது.., இது இப்படி இருக்கின்றது..,” மனைவி இப்படிப் பேசுகின்றது கணவர் இப்படிப் பேசுகின்றார், பையன் இப்படிச் செய்து கொண்டிருக்கின்றான் வியாபாரத்தில் கொடுத்தவன் கொடுக்க மாட்டேன் என்கிறான் என்று பல உணர்வில் இருக்கின்றீர்கள்.

இந்த உணர்வை எடுத்துத் தியானத்திற்குச் சென்றால் “நீ தியானமிருந்தால் சாமியாராகப் போய்விடுவாய்..,” என்று மனைவியோ கணவரோ ஒருவரை ஒருவர் சொல்லத் தொடங்கிவிடுகின்றார்கள்.

உட்கார்ந்து தியானித்துக் கொண்டிருந்தால் “என் அப்பாவிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது..,” என்று பையன் பேசுகின்றான் என்று சொல்பவர்களும் இருக்கின்றார்கள்.

“நீங்கள் இவ்வளவு தூரம் உபதேசிக்கின்றீர்கள். நானும் கேட்டேன்.., ஆனால், என்னால் முடியவில்லை..,” என்று இப்படித்தான் நம் வாழ்க்கை சென்று கொண்டிருக்கின்றது.

ஏனென்றால், கோவிலுக்குச் சென்று சாமிக்கு தேங்காய் பழம் உடைத்து அதற்கென்று அங்கிருக்கும் பூசாரிக்கு காசைக் கொடுத்து இரண்டு அபிஷேகத்தைச் செய்து நம் நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் பாவமெல்லாம் போய்விடும் என்று செய்கின்றோம்.

நமக்காக வேண்டி காசைக் கொடுத்திருக்கின்றான். அதற்காக அங்கே ஒலிகளை எழுப்புகின்றார் பூசாரி.

அப்பொழுது அவர் செய்யும் அர்ச்சனை நேரடியாக ஆண்டவனுக்குப் போய் அவர் அதற்காக மனமிரங்கி வந்து நம் கஷ்டத்தை எல்லாம் போக்குவார் என்று இந்த நம்பிக்கையைத்தான் ஊட்டி வைத்திருக்கின்றார்கள்.

ஆனால், “நம்மை ஆள்பவன்… யார்…?” இதைத்தான் குருநாதர் காட்டினார்.

இந்த உடலுக்குள் பல கோடி உணர்வுகள் பல கோடிச் சரீரங்களை எடுத்து வந்தாலும் இதை ஆண்டு கொண்டிருப்பது நம் உயிரே ஆண்டவன்.

நாம் எண்ணும் எண்ணங்கள் அனைத்தும் இரையாகி, உணர்வின் செயலாக உடலாக்கி, அதனின் உணர்வின் செயலாகத்தான் நம்மை உயிர் இயக்குகின்றான் என்ற நிலையை “நீ எதை எண்ணுகின்றாயோ நீ அதுவாகின்றாய்..,” என்று கீதையில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

நமது குருநாதர் மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் வாழ்ந்த காலத்தில் அவருடன் அணுகியவர்கள் அனைவரும் இந்த உடலின் இச்சைக்கும் ஏதோ சாம்ராஜ்யத்தை ஆளப்போவது போலவும் பலரும் “தவறான வழியில்” சென்று கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், அவர் விண்ணுலகில் பேரானந்தப் பெருநிலையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

குருநாதர் காட்டிய அருள் வழியில் அவரின் உணர்வின் துணை கொண்டு அவர் பெற்ற உணர்வினை இந்த உபதேசத்தின் வாயிலாக இப்பொழுது உங்களிடம் பதிவு செய்யும்போது உங்கள் நினைவாற்றல் விண்ணுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர் பால் எளிதில் செல்லும்.

அதன் வழி கொண்டு அந்த மகரிஷியின் ஆற்றலை நீங்கள் எளிதில் பெற முடியும். உங்கள் வாழ்க்கையில் அறியாது சேர்ந்த தீமைகளை அகற்ற இது உதவும்.