ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 8, 2016

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் அனைத்தும் நம் காவியப் படைப்புகளுக்குள் உண்டு

ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும்போதெல்லாம் அவரவர்கள் உயிரை எண்ணுதல் வேண்டும்.

நம் உயிர் “ஓ” என்று இயக்கி (ஈசனாக இருந்து) நாம் எதையெல்லாம் எண்ணி ஏங்குகின்றோமோ அவை அனைத்தையும் அந்தந்தக் குணத்திற்குத் தகுந்த அணுவாக மாற்றி “ம்” என்று உருவாக்கி நம் உடலாக மாற்றுகின்றது.

நம் உடலுக்குள் அந்த அணுக்கள் எத்தனை வகை குணங்கள் இருக்கின்றதோ இவை அனைத்திற்கும் நமது உயிரே குருவாக (குருதேவா) இயங்குகின்றது, இயக்குகின்றது.

அது தான் ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்வது.

நமது ஞானிகள் தன்னைத்தான் கண்டுணர்ந்து பெற்ற சக்திகளை இராமயாணம், மகாபாரதம், கந்தப்புராணம், சிவபுராணம், விநாயக புராணம் என்று காவியங்களாகத் தொகுத்து வெளிப்படுத்தியுள்ளார்கள்.

அந்தக் காவியங்களில் கூறப்பட்டுள்ள மூலக்கூறுகளை நாம் சீராகப் பயன்படுத்தினால் இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

இந்த உயிர் தோன்றி பல கோடிச் சரீரங்கள் பெற்றபின் தான் மனிதனாக உருவாக்குகின்றது.

மனிதனானபின் இந்த உடலை விட்டு நாம் அகன்றால் எங்கே செல்வது? நமது எல்லை எது? என்ற நிலையைத் தன்னில் அறிந்தவன் அகஸ்தியன்.

பின் அணுவின் ஆற்றலின் இயக்கத்தைக் கண்டுணர்ந்தான். நம் புவியின் நிலைகளில் இருந்து வான்வீதியை உற்று நோக்கினான்.

வானில் நடக்கும் வானஇயல் தத்துவத்தையும் கண்டான் அகஸ்தியன். அவ்வாறு வானில் விளைந்த உணர்வுகளைத் துருவப் பகுதியின் வழியாக நமது பூமி கவர்ந்து புவிஇயலாக மாற்றுவதையும் கண்டுணர்ந்தான் அகஸ்தியன்.

இங்கே புவிஇயல் நிலைகளில் விளைந்த சத்தினை உயிரியலாக உயிர் அணுக்கள் மாற்றிப் பல கோடிச் சரீரங்கள் எடுத்த பின் மனிதனாக உருவானோம் என்பதையும் அறிந்துணர்ந்தவன் அகஸ்தியன்.

மனிதனான பின் நாம் இந்த உடலை விட்டுச் சென்றால் எங்கே செல்ல வேண்டும் என்ற தன் அனுபவத்தில் பெற்ற நிலையை தன்னுள் விளைந்த சக்தியை இன்று அகஸ்தியன் தெளிவாகக் கூறியுள்ளார்.

அகஸ்தியன் கண்டுணர்ந்த பேருண்மைகள் அனைத்தும் இராமயாணம், மகாபாரதம், கந்தப்புராணம், சிவபுராணம், விநாயக புராணம் போன்ற காவியங்களுக்குள் உண்டு.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியின் துணை கொண்டு அவைகள் அனைத்தையும் நாம் ஊடுருவிப் பார்ப்பது நல்லது.

தான் யார் இந்தப் பிள்ளை யார்? என்ற நிலையில் தன்னைத் தான் அறிதல் என்ற நிலையில் நாம் அகஸ்தியன் கண்ட வான இயல், புவி இயல், உயிரியல் அனைத்தையும் நாமும் காண முடியும்.

அகஸ்தியன் சென்ற பாதையில் நாம் சென்றால் வேகா நிலை எனும் கல்கி என்ற நிலையை அழியா ஒளியின் சரீரம் பெற முடியும்.