ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 22, 2016

பல கடவுள்கள் இன்று இருக்கின்றது, ஏன்? - விளக்கம்

நாராயணன் என்ற நிலைகள் சூரியன் என்றாலும் சர்வேஸ்வரன் - சர்வத்தையும் உருவாக்கும் உணர்வுகள் அதனின் தொடர் வரிசையாக வருகின்றது.

நமக்குள் உயிர் ஈசனாக இருந்து அதனால் வளர்க்கப்பட்ட நிலைகள் கொண்டு நாம் பேசினாலும் இந்த உணர்வைச் சூரியனின் காந்தசக்தி கவர்கின்றது.

என் உடலுக்குள் அந்த உணர்வின் தன்மை பதிவானாலும் இதன் உணர்வைத் தனக்குள் உணவாக்குவதற்கு சூரியனின் இயக்கமே எனக்குள் அது உருவாக்குவதற்கும் காரணமாக இருக்கின்றது.

ஆனால், அதற்குள் என் உயிர் ஈசனாக இருந்து என்னை எப்படி இயக்குகிறது என்ற நிலையைத் தெளிவாகச் சாஸ்திரங்கள் காட்டுகின்றது.

சர்வேஸ்வரன் என்றும் நாராயணன் என்றும் இந்தப் பிரபஞ்சம் எப்படி உருவானது? என்றும் மனிதனானபின் எப்படி ஈசனாக இருந்து மனிதனாக உருவாக்கி இந்த உணர்வின் தன்மை சர்வத்தையும் அறியும் தன்மை வருகின்றது என்று கண்டவன் அந்த மெய் ஞானி.

ஆக, சூரியன் சர்வேஸ்வரனாக இருப்பினும் நமது உணர்வின் தன்மை உயிரின் துணை கொண்டு சர்வத்தையும் உணரும் தன்மை வருகின்றது.

மனிதனான பின் நாம் எண்ணத்தால் அந்தச் சந்தர்ப்பத்தை உருவாக்கி நாம் முழுமையான நிலையில் உருவாக்கும் தன்மை பெற்றவர்கள்.

அப்படி உருவாக்கிய நிலையை உண்மையை அறிந்தபின் தான் அரசர்கள் அவர்கள் இஷ்டத்திற்குத் தக்கவாறு மதங்களை உருவாக்கி விட்டார்கள்.

மதத்தின் நிலை கொண்டு அந்த உணர்வின் நிலையைப் பதியச் செய்து அந்த உணர்வின் வழியிலே நமக்குள் கூர்மையாக எண்ணத்தைச் செலுத்தச் செய்து அதை நமக்குள் உருவாக்கிவிட்டார்கள்.

பதிந்த உணர்வின் வழிப்படி “இந்த மதம்.., இது தான் எங்கள் கடவுள்..,” நமக்குள் பதிந்த உணர்வுகள் நமக்குள் விளையத் தொடங்கிவிட்டால் “இது எங்கள் கடவுள்.., எங்களுக்குச் சொந்தமாகின்றது”.

அந்த மதத்திற்குள்ளேயே இன்னொருவர் அதாவது ஒரு அரசனின் மக்களில் இரண்டு பேருக்குள் போர் முறைகள் வந்து பிரிந்து கொண்டால் அவர் சொன்ன கடவுள் எனக்குத் துரோகம் செய்துவிட்டது.

என் தந்தை அவர் வணங்கிய கடவுளுக்குத் துரோகம் செய்துவிட்டார்  இன்னொரு மகனுக்கு அதிகமாகவும் எனக்குத் தாழமையாகவும் கொடுத்தார்.

ஆகையினால் அந்தக் கடவுள் பொய்யான கடவுள் என்று அதிலே சிறிது பிரித்துவிட்டு இந்தச் சட்டத்தை மாற்றி இதற்குள் இந்த உணர்வின் தன்மை தனக்குள் பதிய வைத்து இவர் ஒரு கடவுளை உருவாக்குவார்.

இப்படி மதத்திற்குள் இனமாக இன்றும் ஒவ்வொரு மதத்திலும் நடக்கும் போர் முறைகளைப் பார்க்கலாம்.

ஆக, மனிதனால் உருவாக்கிய உணர்வுகள் தான் கடவுளாக நம் உயிர் உருவாக்கி அந்த உணர்வின் செயலாக எப்படி உருவாக்குகிறது என்ற நிலையைத் தெரிந்து கொண்டால் நல்லது.

நாம் மனிதன் எதன் மேல் இச்சைப்படுகின்றோமோ அந்த உணர்வின் தன்மை நம் உயிர் அந்த இச்சைக்கொப்ப உணர்வை நுகர்ந்து அதன் வழி இந்த உடலை அழைத்துச் செல்கின்றது – மூஷிகவாகனா.

நாம் சுவாசித்த உணர்வுகள் வாகனமாக அமைந்து அந்தந்த வாழ்க்கையிலே அமைக்கின்றது.

இதிலே எந்தெந்த குணங்கள் அதிகமாகச் சந்திக்கும் சந்தர்ப்பமாகி வளர்கின்றதோ அது கணங்களுக்கு அதிபதியாகி அதன் உணர்வின் ரூபமாக நம்மை மாற்றுகின்றது என்ற நிலையையும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

உயிரான ஈசனுக்கு மதமுமில்லை, இனமுமில்லை.

நமக்குள் உள் நின்று இயக்கும் சக்தி கடவுள். எந்த குணத்தின் தன்மையை நுகர்கின்றோமோ அதை நம் உயிர் இயக்கி அந்த உணர்வின் செயலே தெய்வமாக நம்மை இயக்குகின்றது என்பதே ஞானிகள் உணர்த்திய பேருண்மைகள்.

மனிதன் தன்னைத் தான் அறிந்து விண் செல்லும் நிலை பெறச் செய்வதற்கே அன்றைய ஞானிகள் காவியங்களைத் தீட்டி காரணப் பெயர்களைக் கொடுத்தார்கள் சாஸ்திர வடிவில். 

நாம் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.