ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 15, 2016

"விழுதாக இருந்து" நம்மை மனிதனாக உருவாக்கிய தாய் தந்தையரை சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும்

நம் தாய் தந்தை சூரிய ஒளி போன்று இருந்து நம்மை உருவாக்கினார்கள். ஆகவே, அவர்களால் உருவாக்கப்பட்ட அவருடன் இணைந்து இந்த உணர்வின் உடலை நாம் நமக்குள் பெருக்க வேண்டும்.

இதைப் போல எண்ணி நாம் இணைந்து வந்தால் இந்த உடலை விட்டுத் தாய் தந்தையரின் உயிரான்மா பிரிந்தால் எளிதில் அவர்களை விண் செலுத்த முடியும்.

ஏனென்றால், அவரின் உணர்வுகள் நாம் எதைக் கொண்டு எண்ணினோமோ இதனின் வலுக் கொண்டு எந்த மகரிஷியின் உணர்வைப் பெற்றோமோ அந்தச் சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்தல் வேண்டும்.

சப்தரிஷி மண்டலத்துடன் இணையச் செய்து உடல் பெறும் உணர்வுகளைக் கரைத்து என்றும் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் என்று அங்கே உருவாக்கப்படும் பொழுதுதான் நம்முடைய தாய் தந்தையர்கள் உண்மையான கடவுளாகின்றது.

ஒரு மரத்திற்குச் சரியான நிலையில் விழுது இருந்தால் தான் விளையும், இல்லையென்றால் விளையாது. ஆகவே, அன்னை தந்தையின் உணர்வால் விழுதாக நாம் விளைந்தோம்.

அருள் ஞானத்தின் உணர்வின் தன்மையைத் தெளிவாக்கி இந்த முறைப்படி நாம் செயல்படுத்த வேண்டும் என்று அன்று அகஸ்தியன் விநாயத் தத்துவத்தில் தெளிவாகக் காட்டினான்.

அகஸ்தியன் எவ்வாறு விண்ணுலக ஆற்றலைப் பெற்று இன்றும் ஒளியின் சுடராக வாழ்கின்றானோ அவனின் உணர்வை நமக்குள் சேர்த்தல் வேண்டும்.

இதற்காகத் தான் வழியினை அமைத்தான் உருவத்தை அமைத்தான், உணர்வினைக் காவியமாகப் படைத்தான் அதனின் உணர்வை நமக்குள் நுகர்ந்து உணர்வை இயக்கும்படிச் செய்தான் “மூஷிகவாகனா”. 

இந்த வாழ்க்கையில் அந்த அருள் மகரிஷியின் உணர்வைச் சுவாசிக்கும் பொழுது அது வாகனமாக வந்து தீமைகளிலிருந்து நம்மை விடுபடச் செய்யும், தீமைகளைக் கண்டாலும் நமக்குள் வராது தடுக்கும் சக்திகள் வருகின்றது.