ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 16, 2016

நம்மை இயக்கும் உயிரைக் கடைசியில் பொய்யாக்கிவிட்டுப் பொய்யான உலகத்திற்குப் போவது சரியா....?

ஞானிகள் கொடுத்த சாஸ்திரங்கள் பொய் அல்ல. இன்றைய வாழ்க்கையில் சாங்கிய சாஸ்திரத்தைச் செய்து நாம் உண்மையான சாஸ்திரத்தைப் பொய்யாக்கிவிட்டோம்.

ஆக, பொய்யான உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். பொய்யின் நிலையையே அடைகின்றோம்.

மனிதனின் உணர்வையே இன்றைக்குப் பொய்யாக்குகின்றோம். மனிதனின் நிலையையே பொய்யாக்கப்படும் பொழுது நாம் எந்த உண்மையின் நிலையை அறியப் போகின்றோம்?

“அவன் பொய்யன்..,” என்று உயிரையே பொய்யாக்குகின்றோம். ஆக, இருள் சூழ்ந்த நிலைகள் கொண்டு மறைக்கப்படும் பொழுது உயிரின் இயக்கத்தை மறைக்கச் செய்கின்றது.

கடவுள் - அவன் எங்கேயோ தனித்திருக்கின்றான் என்ற நிலையில் உயிரையே நாம் பொய் என்று நாம் நினைக்கும் அளவிற்கு வருகின்றது.

எண்ணிய உணர்வை உருவாக்கும் ஈசனாக நம் உயிர் இருந்தாலும் நமக்குள் கடவுளாக உள் நின்று அவன் இயக்குகின்றான்.

அந்த ஞானிகள் காட்டிய நிலை இது. அதையே நாம் பொய்யாக்குகின்றோம்.

நமக்குள் எண்ணிய குணங்கள் எதுவோ நம் உள் நின்று இயக்கப்படும் பொழுது அந்த உணர்வின் தன்மை நமக்குள் கடவுளாகத்தான் இயக்குகின்றான். தனித்து ஒருவன் கடவுளாக இல்லை.

இது ஞானிகள் காட்டிய அருள் நெறிகள்.

உயர்ந்த பண்பின் தன்மை கொண்டு நமக்குள் எதை எடுக்க வேண்டும்? அருள் மகரிஷிகளின் அருள் உணர்வை நமக்குள் எப்படிச் சேர்க்க வேண்டும்? என்று காட்டினார்கள் ஞானிகள்.

அவர்கள் காட்டிய அருள் நெறிப்படி விநாயகரின் நிலையை உருவமாகக் காட்டப்பட்டு அந்த அருவ நிலையை எண்ணத்தால் எண்ணி நாம் நுகர்ந்து எடுக்கப்படும் பொழுது விசிஷ்டாத்வைதம். அப்பொழுது அருள் ஞானிகளின் உணர்வை நம் உடலாக்கப்படும் பொழுது துவைதம்.

இந்த உடலிலே தீங்கினை நீக்கி அந்த உணர்வை எவெரொருவர் பற்றுடன் பற்றுகின்றனரோ அவர்கள் அங்கே செல்ல முடியும்.

ஆகவே இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்ற வேண்டுமென்றால் அருள் ஞானிகள் காட்டிய அருள் வழியைப் பின்பற்றுங்கள்.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறவேண்டும் ஈஸ்வரா என்று சதா அதைச் சுவாசித்துத் தீமைகளை அகற்றப் பயன்படுத்துங்கள்.