ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 5, 2016

உயிரின் துணை கொண்டு அனைத்துச் சக்திகளையும் பெறும் தகுதி உங்களுக்கு உண்டு

இன்று நாம் சாமியை நம்புகின்றோம், சாமியாரை நம்புகின்றோம், மந்திரங்களை நம்புகின்றோம், மாயங்களை நம்புகின்றோம்.

ஆனால், அனைத்துச் சக்திகளையும் பெறும் தகுதி உங்களுக்குள் உண்டு. அதை உருவாக்கும் உயிரால் உண்டு.

யாம் உபதேசிக்கும் போது ஆறாவது அறிவால் இப்பொழுது கேட்டுணர்ந்த உணர்வுகள் உங்களுக்குள் உருப்பெறும் சக்தியாக வருகின்றது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நீங்கள் பெற்றால் உங்களுக்குள் அருள் ஞானம் வருகின்றது. வாழ்க்கையில் இருளைப் போக்கும் அருள் சக்தி உங்களுக்குள் வளர்கின்றது.

நீங்கள் தான் உங்கள் உணர்வின் தன்மை கொண்டு உங்களுக்குள் வளர்த்துக் கொள்ள முடியுமே தவிர மற்றவர்கள் உங்களுக்குள் வளர்த்திட முடியாது.

ஆனால், உங்களுக்குள் இப்பொழுது உபதேசிக்கும் உணர்வுகள் பதிந்திடும் பொழுது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஏங்கினால் அதை நீங்கள் எளிதில் பெறமுடியும்.

இன்று டி.வி.க்களில் எப்படி அலை வரிசையிலே அனுப்பும் பொழுது அந்தந்த அலை வரிசைகளை எடுக்கும் பொழுது வருகின்றதோ இதைப் போல உங்களில் அருள் ஞான சக்தி பெறவேண்டும் என்று அருள்ஞான வித்தினைப் பதிவு செய்து கொண்டேயிருக்கின்றோம்.

ஆக, பதிவு செய்து கொண்ட பின் ஒவ்வொரு நிமிடமும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று எங்கி அந்த உணர்வினை உங்களுக்குள் வளர்த்துக் கொள்தல் வேண்டும்.

ஒவ்வொரு நொடியிலேயும் இதை நீங்கள் பெற்று துன்பங்களைப் போக்கும் இந்த அருள் மகரிஷிகளின் உணர்வை நீங்கள் நுகர்ந்தால் உங்களுக்குள் துன்பங்கள் விளைவிக்கும் உணர்வை அது மாற்றும்.

இப்பொழுது உபதேசித்த உணர்வை நீங்கள் எப்பொழுது எண்ணினாலும் கிடைக்கும். அதே சமயம் இந்த உணர்வுகள் உங்களுக்குள் பதிவாகி இருப்பதனால் அதை எளிதில் நீங்கள் பெற யாம் உதவ முடிகின்றது.

இங்கே தபோவனத்திற்கு வந்தவர்களும் இதைக் கேட்டுணர்ந்தோர் அனைவரும் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும். அவர்கள் குடும்பங்கள் நலம் பெறவேண்டும் அவர்கள் மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ வேண்டும் இந்த வாழ்க்கையில் பேரின்பப் பெருவாழ்க்கை வாழ வேண்டும் என்று அடிக்கடி நான் (ஞானகுரு) தியானித்து அந்த அலைகளை தவமாக உங்களுக்குத் கிடைக்க வேண்டும் என்று இதைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

அதே போல் நீங்களும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெறவேண்டும் எங்கள் உடல் முழுவதும் படரவேண்டும் எங்கள் ஜீவான்மா பெறவேண்டும் என்று தியானித்தல் வேண்டும்.

தியானித்துவிட்டு அந்த்த் துருவ மகரிஷிகளின் அருள் சக்தி உங்கள் சார்புடையோருக்கும் கிடைக்க வேண்டும் அவர்கள் நலம் பெறவேண்டும் என்ற இந்த இணைப்பு வந்தால் நமக்குள் நலம் பெறும் சக்திகள் வளர்கின்றது.

தீமைகள் அகலுகின்றது. மெய்ப்பொருளைக் காணும் திறன் பெறுகின்றது. பிறவியில்லா நிலைகள் அடைகின்றீர்கள். இதைப் பெறுவீர்கள் என்று பிரார்த்திக்கின்றேன்.