ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 20, 2016

மெய்ஞானத்தைப் பெறும் தகுதியை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம், பயன்படுத்திக் கொள்ளுங்கள்

“திரும்பத் திரும்பச் சாமி சொல்கிறார்.., எனக்கு அர்த்தமாகவில்லை..,” என்பார்கள். அர்த்தமாவதற்காக வேண்டித் திருப்பிச் சொன்னால் சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார் என்பார்கள்.

ஆனால், தெரிந்தார்களா..,? இல்லை.

தெரிந்து கொண்டீர்களா? இல்லை.

“சாமி திருப்பித் திருப்பிச் சொல்கிறார்..,” என்று சொல்பவர்களிடம் திருப்பிக் கேட்டால் தலையைச் சொறிவார்கள். இதைத் தான் தெரியும்.

சொல்லும் பொழுது கேட்பார்கள். அடுத்த கணம் கேட்டால் தெரியவில்லை.

ஆனால், சாமி சொன்னதையே திருப்பிச் சொல்கிறார் என்று சுருக்கத்தில் சொல்லிவிடுவார்கள். சாமி என்ன சொன்னார்..,? என்று கேட்டால் தெரியவில்லை.

எத்தனையோ தடவை திருப்பிச் சொல்கிறேன். ஆனால், இதை லேசாக நினைத்து உடனே சாமி இப்பொழுதுதான் சொன்னார் மீண்டும் திருப்பிச் சொல்கிறார் என்பார்கள்.

இது எதற்கு?

ஒரு பொருளின் (அர்த்தம்) தன்மை தனக்குள் வரவில்லை என்றால் திரும்பப் படித்துத்தான் அதை மீண்டும் தெரிந்து கொள்ள முடியும்.

ஒரு தடவை படித்துவிட்டேன் என்று வைத்துவிட்டால் நீங்கள் தெரிந்து கொள்வீர்களா? தெரிந்து கொள்ள முடிகின்றதா?

நான் சொன்னதை நானே திருப்பிச் சொல்ல வேண்டும் என்றாலும் கூட சிறிது சங்கடம் தான். சொன்ன பாதையிலேயே மீண்டும் முழுவதும் சொல்ல வேண்டும் என்றால் முடியாது.

நான் சொல்வதை நீங்கள் கேட்டு முழுவதும் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால்.., முடியுமா?

ஒரு விஷயத்தைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள். அப்படிச் சொன்னபின் சொன்னதையே மீண்டும் தப்பில்லாமல் நீங்கள் சொல்லிவிடுங்கள்.., பார்க்கலாம்.

முடியுமா..,? என்றால் முடியாது.

அந்த இயற்கையின் உணர்வுகள் நுகரும் பொழுது உணர்வின் எண்ணங்களாகத் தான் அது இயங்குமே தவிர அவ்வப்பொழுது இயக்கும் இயக்கத்தின் உணர்வுகள் நுகரும் பொழுது உயிர் அதன் உணர்வாக நம்மை இயக்கும், அதன் சொல்லாக வெளிப்படும்.

ஒருவர் வேதனைப்படுவோரைப் பற்றிக் கேட்கும் பொழுது அது பதிவாகி மீண்டும் அதை நினைவாக்கி அந்த வேதனை உணர்வு உங்களுக்குள் வளர்ந்த பின் அந்த வேதனையான உடலை விட்டுப் பிரிந்த ஆன்மா உங்கள் உடலுக்குள் வந்து புகுந்து விடுகின்றது.

இதைப் போலத்தான் அருள் ஞானிகளின் உணர்வை நீங்கள் வளர்த்துக் கொண்டால் இந்த வலுவின் தன்மை கொண்டு நம்மை அங்கே அழைத்துச் சென்று அதற்குள் புகுத்திவிடும்.

ஒரு புலி வலிமையாக இருக்கப்படும் பொழுது புலியின் உணர்வுகள் ஒரு மானின் உடலுக்குள் பட்டபின் புலியின் உணர்வுகள் மானின் உடலுக்குள் வலிமையாகி மானின் உயிரான்மா அந்தப் புலியின் ஈர்ப்புக்குள் அழைத்துச் சென்று மானைப் புலியாக மாற்றுகின்றது.

இதைப் போன்று தான் அருள் ஞானிகளின் உணர்வைத் தனக்குள் வளர்த்துக் கொண்டால் இந்த உடலை விட்டு அகன்ற பின் அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் செல்லும்.

உடல் பெறும் உணர்வுகளை அங்கே கரைக்கும். ஒளி பெறும் சரீரம் நிச்சயம் பெற முடியும்.

ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் உங்களுக்குள் அந்த மெய்ஞானத்தைப் பெறும் தகுதிகளை மீண்டும் மீண்டும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.