ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 6, 2016

“ஓ...ம் ஈஸ்வரா... குருதேவா..!” என்று சொல்லும் பொழுது நம் நினைவு எங்கே இருக்க வேண்டும்...?

நமது உயிர் நம் உடலுக்குள் “ஓ...” என்று இயங்கிக் கொண்டயுள்ளது. "ம்..." என்று உடலாக ஆக்கிக் கொண்டேயுள்ளது.

நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ அவை அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றி அதையும் “ஓ...” என்று இயக்கிக் கொண்டயுள்ளது. இது தான் ஓம் நமச் சிவாய, ஓம் நமச் சிவாய.

ஓம் நமச் சிவாய என்றால் ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.

ஒன்றின் துணை கொண்டு ஒன்று இயக்குகின்றது. ஒன்றின் துணை கொண்டு ஒன்று இயங்குகிறது என்ற நிலையைத் தெளிவாக்குவதற்குத்தான் நமது சாஸ்திரங்கள் அனைத்தும் காரணப் பெயரை வைத்துச் சுட்டிக் காட்டுகின்றன.

ஆகவே, ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுதெல்லாம் அவரவர்கள் உயிரை ஈசனாக மதித்தல் வேண்டும். அவர்கள் எண்ணிய எண்ணத்தை இறைவனாக மதித்தல் வேண்டும்.

நாம் எதை எண்ணுகின்றோமோ அது இறையாகி அதன் உணர்வு செயலாகும் போது அதுவே தெய்வமாகின்றது.

ஆகவே, நாம் எதை எண்ண வேண்டும்? உயிருடன் எதை இணைக்க வேண்டும்?

எதை ஜீவ அணுவாக மாற்ற வேண்டும்? எதை உடலாக மாற்ற வேண்டும்? என்ற நிலையை நமது சாஸ்திரங்களில் தத்துவங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

ஆகவே, தத்துவப்படி நாம் எப்படி இயக்க வேண்டும்? நாம் இயங்க வேண்டும்? எதனை எவ்வாறு இயக்க வேண்டும் என்பதுதான் அதிலே உள்ளது.

நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அருள் மகரிஷிகளை எண்ணி துருவ நட்சத்திரத்தின் உணர்வலைகளை உயிரிலே இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம் உயிர் அணுவாக உருவாக்கிவிடும். உடலுக்குள் மகரிஷிகளின் அருள் உணர்வுகள் விளையத் தொடங்கும்.

அந்த ஒளியான உணர்வுகள் உயிருடன் சேர்க்கப்படும் போது கல்கி, அழியா ஒளிச் சரீரம் பெறுகின்றோம். சாஸ்திரங்களில் காட்டப்பட்டுள்ள பேருண்மை இது.