ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 29, 2016

குடும்பத்தில் ஒற்றுமை ஏற்பட ஆத்ம சுத்தி செய்யும் முறை

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

பின் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று கண்களைத் திறந்து விண்ணை நோக்கி ஏங்கி இருக்க வேண்டும்.

கண்களை மூடி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்தநாளங்களில் கலந்து இரத்தநாளங்களில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவ ஆன்மாக்கள் அனைத்திலும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்ற உணர்வை உடல் முழுவதும் படரவிட்டு ஒரு நிமிடம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.

இவ்வாறு தியானித்த பின்பு துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இல்லம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்கள் வீட்டில் உள்ள தரை, சுவர்கள் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அலைகளைப் படரச் செய்யுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் குடும்பம் முழுவதும் படர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று வீட்டிலுள்ளோரை நினைவுக்குக் கொண்டு வந்து அவர்கள் உடல் முழுவதும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி படரவேண்டும் என்ற உணர்வைப் பாய்ச்சுங்கள்.

பின்பு, துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியால் எங்கள் குடும்பத்திலுள்ளோர் அனைவரும் சகோதர உணர்வுடன் பற்றும் பாசமும் பரிவுடன் பண்புடன் வாழ்ந்திடும் நிலை பெறவேண்டும் என்று ஏங்கித் தியானியுங்கள்.

எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் உடல் நலத்துடன் மன மகிழ்ச்சியுடன் ஒற்றுமை உணர்வுடன் வாழ்ந்து வாழ்ந்து வளர்ந்திட அருள்வாய் ஈஸ்வரா என்று உங்களால் முடிந்தவரை துருவ நட்சத்திரத்துடன் உணர்வுகளை வலுக்கூட்டித் தியானியுங்கள்.

தவறு யாரும் செய்வதில்லை. சந்தர்ப்பங்கள் நமக்குள் குறை காணும் சூழ்நிலைகளை உருவாக்கி விடுகின்றது. ஆகவே, குறைகள் வளராது தடைப்படுத்த வேண்டும்.

பெண்களிடம் தான் சக்தியின் நிலைகள் துரித நிலையில் பெறுகின்றது. குடும்பத்தில் உள்ள பெண்கள் இதனைக் கருத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். பெண்கள் முழுமையாகக் கடைப்பிடித்து குடும்பத்தின் நிலைகளை உயர்த்த வேண்டும்.

அடிக்கடி ஆத்ம சுத்தி மூலம் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்திகளை நினைவு கொள்ளும் பொழுது துருவ நட்சத்திரத்தின் அருள் வட்டத்தில் நம் பற்று ஓங்கி வளர்கின்றது.

அதன் துணை கொண்டு இந்த மனித வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக்கி அருள் மகரிஷிகளின் உணர்வுகளைப் பற்றுடன் பற்றி அவர்கள் அருள் வட்டத்தில் மகிழ்ந்து வாழ்ந்திட முடியும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு நாம் சிந்தித்துச் செயல்பட்டு வழியறிந்து பொருளறிந்து செயல்படும் திறன் பெற்று பிறவா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறலாம்.