ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 27, 2016

“பிறவிக் கடனை அற்றுச் சென்ற” மகரிஷிகளின் ஆற்றல் மிக்க சக்திகளை நாம் பெறக்கூடிய வழி

ஒரு கோவிலில் தேரை இழுக்கிறோம் என்றால் பல ஆயிரம் பேர் ஒன்று சேர்ந்துதான் அதை இழுக்கின்றோம்.

மிகச் சக்தி வாய்ந்த மகரிஷிகளின் உணர்வுகளை நீங்கள் எப்படியும் கவர வேண்டும் என்பதற்காகவே யாம் உபதேசிக்கின்றோம்.

மகரிஷிகள் காட்டும் உணர்வுகளை உங்கள் உடல்களில் உணர்ச்சிகளை உந்தச் செய்கின்றோம். அதைப் பெறவேண்டும் என்ற ஏக்கத்தை உங்களுக்குள் உந்தச் செய்கின்றோம்.

அந்த உணர்வின் வலிமை கொண்டு நாம் ஏங்கித் தியானிக்கும்போது நமக்கு முன் படர்ந்திருக்கும் இந்தச் சக்தியை நாம் அனைவரும் ஏகோபித்த நிலையில் கவர்ந்தால் தான் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாம் கவர முடியும்.

ஏனென்றால், அந்த மகரிஷிகள் பிறவிக் கடனை அற்றுச் சென்றவர்கள்.

அந்த எண்ணத்திற்குள் நம் எண்ணம் வலுவற்றது.
“சுட்டுப் பொசுக்கிவிடும்” அவர்களின் நிலைகள்

அத்தகையை நிலைகளில் அவர்கள் இருப்பினும் அவர் இந்த உடலை விட்டுப் பிரிந்து செல்லும் போது மனித உணர்வுக்குள் சிக்கியிருந்தால் பிறவி நிலைக்கே வந்திருப்பார்.

பிறவிக் கடனை அகற்றி
எந்த மனிதனும் இதை இழுக்காதபடி
விண்ணின் ஆற்றலின் வலுக் கொண்டு சென்றவர்கள் மகரிஷிகள்.

அந்த மகரிஷிகளின் உணர்வுகள் இங்கே படர்ந்திருக்கும் போது அவர்களின் உணர்வுகளை நமக்குள் வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

வலுப் பெறச் செய்ய வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்?

மகரிஷிகள் காட்டிய அருள் வழிப்படி யாம் உபதேசிக்கும்போது அந்த உணர்வின் தன்மை பதிவு செய்து எண்ணத்தை வலுக் கூட்டிக் கொள்ள வேண்டும்.

வலுக் கூட்டிய எண்ணத்தின் துணை கொண்டு ஆயிரக்கணக்கானோர் ஒன்று சேர்ந்து காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளைக் கவர வேண்டும்.

கவர்ந்து உலக மக்கள் எல்லோரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்ற உணர்வின் ஏக்கம் கொண்டு அதை இழுத்துச் சுவாசித்து அந்த மூச்சலைகளைப் படரவேண்டும்.

அனைவருக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்ற நிலை வரும்போது
நம் ஈர்ப்பிற்கு அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
(ஒவ்வொருவருக்கும்) அது எளிதில் கிட்டும்.

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளால் எல்லா மகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் கிடைக்கப் பெறச் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் இவைகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

மகரிஷிகள் சென்ற பாதையில் சென்றால்
இந்த உடலுக்குப் பின் இன்னொரு பிறவி என்ற நிலை இல்லாது
என்றுமே அழியாத நிலைகள் கொண்டு
சப்தரிஷி மண்டலத்துடன் ஒன்றி வாழ முடியும்.
எமது அருளாசிகள்.