ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 13, 2016

“உயிரின் தணல்” (வெப்பத்தால்) கொண்டு தீமைகளைப் பிரிக்க முடியும் - தீமைகள் நம் அருகில் வராது தடுக்க முடியும்...! எப்படி...?

தெளிவற்ற நிலையில் இருக்கும் மக்களிடம் நாம் கலந்திருக்கும் வேளையில் அவர்கள் சொல்லும் துயரங்களையோ துன்பங்களையோ அவர்கள் சந்தித்த தீமைகளை நாம் பார்க்கும் நிலைகளில்
அது நம் ஆன்மாவாக மாறுகின்றது.
ஆன்மாவிலிருந்து நாம் சுவாசித்துத்தான் அறிகின்றோம்.

அப்படி நீங்கள் அதை அறிந்தாலும் அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று அதைச் சுத்தப்படுத்திடும் நிலையாக ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை உங்களுக்குக் கொடுத்துள்ளேன்.

வலு கொண்ட சக்தி உங்களுக்குள் ஆழப்பதிந்த பின் நினைவு கொண்டு அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று எண்ணி உங்களால் அந்தச் சக்தியை எடுக்க முடியும்.

எத்தகைய துயர் கொண்டோர் உணர்வுடைய நிலைகளைக் கேட்டுணர்ந்தாலும் அதைப் பார்க்க நேர்ந்தாலும் அது
உங்கள் ஆன்மாவில் கலப்பதற்கு முன்னாடியும் சரி,
அல்லது கலந்திட்டாலும் சரி, ஆத்ம சுத்தி செய்து
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று இரண்டறக் கலந்து நீங்கள் சுவாசிக்க வேண்டும்.

கரும்புச் சாற்றுக்குள் பொட்டாசியத்தைக் கலக்கப்படும்போது இரண்டறக் கலந்த அழுக்கினை நீக்கி தெளிந்த சர்க்கரையாக மாற்றுகின்றது.

கரும்புச் சாறுடன் பொட்டாசியத்தைக் கலந்தபின் அங்கே இருக்கும் அடுப்பின் தணலிலே அழுக்கினைப் பிரிப்பார்கள். அங்கே தணலைக் காட்டித்தான் பிரிப்பார்கள்.

அதே போல் தணல் ஊற்றிக் கொண்டிருக்கும் நம் உயிரின் தொடரில் பிறரில் விளைந்த தீமையின் உணர்வுகள் நமக்குள் அறிந்துணர உதவினாலும் அந்தத் தீமையான உணர்வுகள் நமக்குள் புகுந்திடாது இணைந்திடாது அதைத் தெளிவு செய்தல் மிகவும் அவசியம்.
அதுதான் ஆத்ம சுத்தி.
ஆத்ம சுத்தி செய்து உங்கள் ஆன்மாவைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இதனை இணைத்துவிட்டால்
உயிரான தணலில் அது சுழன்று
அதிலிருக்கும் நஞ்சினைக் கழிவுப் பொருளாகப் பிரித்துவிடும்.

பின் நம் மனம் கலங்காது நல்ல உணர்வின் தன்மையாகத் தெளிந்த நிலைகள் கொண்டு நாம் சிந்தித்துச் செயல்பட முடியும்.

அப்பொழுது மன பலத்துடன் நாம் செயல்பட்டு தீமைகளை அகற்றிடும் எண்ண உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று தீமையான உணர்வுகள் நமக்குள் நெருங்காது காத்திட முடியும்.

ஆறாவது அறிவின் தன்மை கொண்டு பிரம்மாவைச் சிறைபிடித்தான். மனிதனின் ஆறாவது அறிவின் எண்ணம் கொண்டு புறப் பொருள்கள் எத்தனையோ உருவாக்குகின்றோம்.

தங்கத்துடன் கலந்திருக்கும் மற்ற உலோகங்களையும் மிகக் கடினமான நிலைகளில் பிரித்து மற்ற மற்ற தனித்தன்மை கொண்டு இயங்கச் செய்கின்றான் மனிதன்.

இதைப் போன்று தீமைகளைப் பிரித்த அந்த அருள் ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் செலுத்தப்படும் போது
எதனுடன் எதனை இணைக்க வேண்டும்?
எதை எதைப் பிரிக்க வேண்டும்?
என்ற உணர்வின் நினைவு கொண்டு பிரித்திடல் முடியும்.

ஏனென்றால், மகரிஷிகள் தன் ஞானத்தின் உணர்வு கொண்டு அவர்கள் செய்தவர்கள். அவர்களுக்குள் விளைந்த ஆற்றல் மிக்க உணர்வின் சக்தியை நாம் பெறுவதற்குத்தான் இதை உபதேசிக்கின்றோம்.

அந்தத் தகுதியை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் தான் இந்தக் கூட்டு தியானம். கூட்டுத் தியானங்களைச் சீராகப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையில் எப்பொழுது இடையூறு வருகின்றதோ அச்சமயமெல்லாம் ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.

தீமைகளை உங்களுக்குள் புகாது தடுத்து நிறுத்துங்கள்.
உயர்ந்த ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் ஒன்றிடச் செய்யுங்கள்.

நட்சத்திரங்கள் சக்தி வாய்ந்ததாக மாறி பேரண்டத்தின் நிலைகளைத் தன்னிச்சையாக மாற்றுகின்றது. இந்தப் பிரபஞ்சத்திற்கு உகந்ததாக மாற்றி அனுப்புகின்றது.

இதைப் போலத்தான், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருளிய அந்த அருள் உணர்வின் துணை கொண்டு மற்ற மனிதர்களிடம் விளைந்த அவர்களை அறியாது சேர்ந்த நஞ்சான உணர்வுகள் நமக்குள் சேராது அதனைத் தெளிந்த நிலைகள் மாற்றிடல் வேண்டும்.