ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 7, 2016

நெருப்பைக் கொண்டு காய்களை வேக வைப்பது போல மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு தீமைகளை வேக வைக்க வேண்டும்

நாம் எத்தகையை உணவை உட்கொண்டாலும் அதிலே சிறிதளவு நஞ்சிருந்தாலும் அந்தச் சிறிதளவு நஞ்சினை நீக்கிடும் செயலாக நம் உடல் அமைந்துள்ளது.

நாம் உணவாக உட்கொள்ளும் உணவிற்குள் மறைந்துள்ள நஞ்சினை நம் உடல் மலமாக மாற்றிவிடுகின்றது, அது நாற்றமாகின்றது.

நல்ல உணர்வினை உடலாக்கி அந்த உடலிலிருந்து வரக்கூடிய நல்ல எண்ணங்களைக் கொண்டுதான் அந்த வலுக் கொண்டு
நம் உடலிலே சேர்க்கும் நஞ்சினைப் பிரித்திடும்
அந்த எண்ணங்கள் நமக்குள் உருவாகி
அதனின் செயலாகச் செயலாக்கி
நஞ்சைப் பிரித்து அதை அடக்கி
மனிதனுக்குள் உணவாக உட்கொள்கின்றோம்.

அதே சமயத்தில் நஞ்சு கொண்ட மனிதர்கள் பேசும் உணர்வினை பிறர் செய்யும் தீமையின் உணர்வுகளை நாம் நுகர்ந்தறியப்படும் போது அந்த உணர்வின் தன்மை நமக்குள் நஞ்சாகக் கலந்துவிடுகின்றது.

ஆனால், அதை நீக்கும் செயலற்றுவிட்டால் அவர்கள் பேசும் நஞ்சான உணர்வு நல்ல குணங்களுக்குள் கலந்து நம் உடலுக்குள் நல்ல உணர்வுகள் அனைத்தும் வேதனைப்படும் செயலையே செயல்படுத்தும் நிலை ஆகிவிடுகின்றது.

நாம் காய்கறிகளுக்குள் இருக்கும் நஞ்சினை நம நமப்பு, காரல் கசப்பு போன்ற விஷத்தன்மையைக் களைந்துவிட்டு நாம் காய்கறிகளைப் பக்குவமாகச் செய்து சுவை மிக்கதாகப் படைக்கின்றோம்.

இதைப் போல மனித வாழ்க்கையில்
ஒருவர் வெறுப்புடன் பேசுவார்,
ஒருவர் சலிப்புடன் பேசுவார்,
ஒருவர் சஞ்சலத்துடன் பேசுவார்,
ஒருவர் கோபத்துடன் பேசுவார்,
ஒருவர் ஆத்திரத்தை வெளிப்படுத்துவார்,
ஒருவர் பொறாமைப்படுவார்.

இவை அனைத்தையும் நாம் நெருப்பைக் கொண்டு காய்கறிகளை வேக வைப்பது போல
நஞ்சினை வென்ற அந்த மகரிஷிகளின் அருள் சக்தி கொண்டு
தீய நிலைகளை வேக வைக்க வேண்டும்.

ஏனென்றால், இதைப் போன்ற தீமையான உணர்வின் தன்மைகளை ஒடுக்கியவர்கள், நஞ்சினை அடக்கி உணர்வின் ஒளியாக மாற்றியவர்கள் உயிருடன் ஒன்றிய ஒளியின் சரீரமாகப் பெற்றவர்கள் மகரிஷிகள்.

அவர்கள் இன்று துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள சப்தரிஷி மண்டலத்துடன் இணைந்து சுழன்று கொண்டுள்ளார்கள்.

அந்த மகரிஷிளால் வெளியிடப்பட்ட நஞ்சினை வென்று உணர்வை ஒளியாக மாற்றிய அந்த உணர்வுகள் அனைத்தும் சூரியனின் காந்த சக்தியால் கவர்ந்து நமக்கு முன் இந்தப் பூமியில் படர்ந்து கொண்டுள்ளது.

அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் நுகர்வோம்
மகரிஷிகளின் அருள் சக்தி பெற நம் உயிரான ஈசனிடம் வேண்டுவோம்.
உயிருடன் ஒன்றுவோம்,
நுகரும் உணர்வை ஒளியாக மாற்றுவோம்.

எமது அருளாசிகள்.