ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 18, 2016

மீண்டும் ஒரு உடலுக்குள் செல்கிறாயா...? அல்லது விண்ணுலகம் செல்கிறாயா...?

அணுவின் ஆற்றலும், அணுவின் வளர்ச்சியும்
அணுவின் வளர்ச்சியால் மனிதனின் நிலையும் உருவத்தின் ஆற்றலும்
நாம் எவ்வாறு பெற்றோம் என்ற உண்மையை
நாம் அறிந்து கொள்வதற்குத்தான்
“ஆதிமூலம்” என்று உயிருக்குப் பெயர் வைத்தனர்.

அது எடுத்துக் கொண்ட உணர்வின் தன்மை கொண்டு பல கோடிச் சரீரங்கள் எடுத்தாலும் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் போட்டு யானையின் தலையை மனித உடலில் பொருதினான் ஞானி.

யானைக்கோ வலுவின் தன்மை
உடலின் வலிமை அதிகமாக இருக்கின்றது.
மனித உடலிலோ
எண்ணத்தின் வலிமை அதிகமாக இருக்கின்றது.

இந்த உண்மையினுடைய நிலைகளை நாம் உணர்ந்திடச் செய்வதற்குத்தான் அன்று மகா ஞானிகள் ஆதிமூலம் என்று உயிருக்குப் பெயரை வைத்து அதனின் முன் சேர்த்துக் கொண்ட வினைகளுக்கு நாயகனாக மனித உடலைப் பெற்றோம் என்ற நிலையை அந்த ஞானிகள் சொன்னது.

நம் உடலிலிருக்கக்கூடிய கணங்களுக்கெல்லாம் ஈசனாக நம் உயிர் இருக்கின்றது என்ற நிலையும்
கணங்களுக்கெல்லாம் ஈசா கணேசா என்று
நம் உயிரை வணங்கும்படிச் செய்தார்கள்.

மூஷிகவாகனா, நாம் எந்தக் குணத்தை எண்ணுகின்றோமோ அதைச் சுவாசித்து அதுவே நம்மை வாகனமாக வழி நடத்துகின்றது. நாம் எந்தக் குணத்தின் நிலையைச் சுவாசிக்கின்றோமோ அதுவே நம் உடலுக்குள் உள்ள கணங்களுக்கெல்லாம் அதிபதியாகச் செயல்படுத்துகின்றது.

இன்று நான் கோவிக்கின்றேன் என்றால் அதைச் சுவாசிக்கும் போது ஒருவரை உதைக்க வேண்டும் என்ற உணர்வு கொண்டு வருகின்றேன்.

அப்பொழுது அதைச் சுவாசிக்கும்போது வாகனமாக வந்து
அவனைத் தேடிச் சென்று
உதைக்க வேண்டும் என்று அழைத்துச் செல்கின்றது.
எனக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்களையெல்லாம் அந்தக் கோபமான குணங்கள் அதிபதியாக இருந்து அழைத்துச் செல்கிறது.

அதைப் போல வெறுப்படைந்து “என்ன வாழ்க்கை” என்று சுவாசிக்கும் போது அதே சுவாசத்தை எனக்குள் சுவாசிக்கும் போது அது மூஷிகவாகனா.

என்னைத் தற்கொலை செய்வதற்காக அதைச் சுவாசித்து அந்த குணங்களுக்கு அதிபதியாகி மற்றதை ஒடுக்கி என்னுடைய உடலை விட்டே பிரிந்து செல்லும் நிலைகளுக்கு உருவாக்குகின்றது.

இதுதான் கணங்களுக்கு அதிபதி கணபதி.

இந்தப் பிள்ளை யார்?
என்ற கேள்விக் குறி போட்டு
முச்சந்தியிலே வைத்து
நம்மைச் சிந்திக்கும்படிச் செய்தான் அகஸ்தியன்.

உயிரணுவாகத் தோன்றி பல உணர்வுகள் பல எத்தனையோ துன்பங்களாகி அந்த உணர்வின் தன்மையிலிருந்து விடுபட்டு இன்று மனிதனாக உருவாக்கிய உயிரின் தன்மையை நீ எப்படி மதிக்க வேண்டும்? இந்தப் பிள்ளை யார் என்று கேள்விக் குறி போட்டு
இந்த மனித உடலிலிருந்து உன்னுடைய ஆசை பேராசை
விருப்பு வெறுப்பு உணர்வுகளை உனக்குள் சேர்த்து
இதனின் நிலைகளில் இங்கே செல்கின்றாயா?

அல்லது

உன்னை அறியாத நிலைகள் கொண்டு இதை வென்று இன்று எந்த ஒளியின் தன்மையை உயிர் விண்ணிலே தோன்றி அது பூமிக்குள் வந்து அது ஒளியாக நின்று உருவாக்கிய இந்த நிலைகள் கொண்டு அது ஒளியாகியதோ இதைப் போல
இந்த உணர்வின் தன்மை ஒளியாகி
அந்த உயிருடன் ஒன்றி என்றும் நிலையான சரீரம் பெற்ற
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் நீ செல்கின்றாயா?
இந்தப் பிள்ளை யார் (நீ யார்)? என்ற கேள்விக் குறி போட்டு
முச்சந்தியிலே அமைத்தார்கள் ஞானிகள்.