ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 26, 2016

பதிவு இல்லையென்றால் நினைவு ஏது? துருவ நட்சத்திரத்தைப் பதிவு செய்தால் உங்கள் நினைவின் ஆற்றல் அங்கே எளிதில் செல்லும்

அடிக்கடி உங்களுக்குச் சொல்லியுள்ளேன். மீண்டும் மீண்டும் உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கொண்டே வருகின்றேன்.

ஏனென்றால், சொன்னதைத் திரும்பச் சொல்லும் போது “சொன்னதைத்தான் சொல்கின்றார்..,” என்ற நினைவு வந்துவிடும். “சரி.., அப்புறம் பார்க்கலாம்” என்று கேட்பதையும் மறந்துவிடும்.

ஒரு செடி கசப்பின் தன்மை அந்த உணர்வை நுகர்ந்துவிட்டால்
மீண்டும் அதை நுகர்ந்தால் தான்
அந்தக் கசப்பின் உணர்வைக் கொண்டு
அந்த மரத்தின் தன்மை விளைய முடியும்.

ஒரு ரோஜாச் செடி நல்ல நறுமணத்தின் தன்மை மறந்துவிட்டோம் என்று அது மீண்டும் மீண்டும் நுகர்ந்தறிந்தால் தான் அந்த ரோஜாப்பூவின் நறுமணம் அங்கே வரும்.

ஒரு ஆடோ மாடோ எந்த உணர்வைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொண்டதோ
அதை மீண்டும் நினைவு கொண்டால்தான்
தன் இனத்தை எதனால் உடலாகி
நோயற்ற நிலைகளில் விளைகின்றதோ அது விளையும்.

அந்த தாவர இனத்தைப் புசித்த அந்த மாடு
மாற்றுத் தாவர இனத்தை மீண்டும் சாப்பிடும் என்றால்
இந்த உணர்வுக்கு எதிர் நிலையாகி
அந்த மாட்டிற்கே நோய் வரும்.

ஆக, நுகர்ந்து பார்த்துத் தன் இனம் அல்ல அன்று நகர்ந்து வெளியில் செல்கின்றது.

இதைப் போன்றுதான், நமக்குள் தீமை என்ற நிலைகளை நாம் கேட்டறிந்தாலும் அந்தத் தீமையின் உணர்வுகள் நமக்குள் எவ்வாறு செயல்படுகிறது என்ற நிலைகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

அவ்வாறு விடுபட வேண்டுமென்றால் அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை தனக்குள் புகுத்துதல் வேண்டும். அவ்வாறு புகுத்திவிட்டால் தீமையை அடக்கிடும் சக்தியாக மாற்றிட முடியும்.

ஏனென்றால், சூட்சமத்தில் மறைந்திருக்கும் உண்மைகளை நாம் அறிய முடியவில்லை. இதனை நாம் எளிதில் கண்டுணர்வதற்குத்தான் அந்த மகரிஷிகள் தெளிவான நிலைகளில் நமக்குள் தெளிந்த மனம் பெறுவதற்காகக் காட்டியுள்ளார்கள்.

இந்த மனித வாழ்க்கையில் தீமைகளை எவ்வாறு எளிதில் அகற்ற முடியும் என்ற நிலைகளை அது உருவமாக்கி அது கதைகளாக்கி காவியமாகப் படைத்துள்ளார்கள்.

அவைகளை நமக்குள் எண்ணத்தால் பதியச் செய்து எண்ணத்தின் துணை கொண்டு அவன் காட்டிய உண்மையின் வழிப்படி நாம் காற்றிலே மிதந்து கொண்டிருக்கும் உணர்வினைத் தனக்குள் பதியச் செய்யவேண்டும்.

எதையுமே பதிவு செய்யாதபடி நினைவுக்குக் கொண்டு வர முடியாது.
பதிவு இல்லையென்றால் நினைவு ஏது?

ஒருவர் நம்மைத் திட்டினார் என்று பதிவு செய்து கொண்டால் அது மீண்டும் நினைவு வரும். உதாரணமாக, ட்ரெயினில் வரப்படும் போது நல்லவராகப் பேசிக் கொண்டு வருகின்றார். அவரை உற்றுப் பார்க்கின்றோம்.

திடீரென்று அவரின் உள் உணர்வுகள் ஏதோ எதிர்பாராத பய உணர்வால் துடிக்கின்றார் என்று அந்த உணர்வின் தன்மையைப் பதிவாக்கிவிட்டால் என்ன நினைப்போம்?

நல்லபடியாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். பார்த்தால் திடீரென்று துடித்துப் போய்விட்டார். “ஐயோ.., நல்ல மனிதனுக்கு இப்படி வந்துவிட்டது” என்று நாம் சொல்வோம்.

ஆக, பதிவு இல்லையென்றால் நினைவு இல்லை. பள்ளியில் நீங்கள் படிக்கும் பாடங்களின் பதிவு இல்லையென்றால் நினைவு இல்லை. இதைப் போன்று பதிவின் நினைவே நமக்குள் வருகின்றது.

அதனால் தான், நீங்கள் மறந்தாலும் மகரிஷிகளின் அருளாற்றல் மிக்க சக்திகளை எமது குருநாதர் எமக்குள் பதியச் செய்த அதே முறைப்படி திரும்பத் திரும்ப உங்களுக்குள் யாம் பதியச் செய்து கொண்டேயிருக்கின்றோம்.

ஒரு வேப்ப மரம் தன் கசப்பை மீண்டும் மீண்டும் எடுப்பது போல்,
ஒரு ரோஜாச் செடி தன் நறுமணத்தை மீண்டும் எடுப்பது போல்
நீங்கள் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை மீண்டும் மீண்டும் எடுத்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

உங்கள் நினைவின் ஆற்றல் துருவ நட்சத்திரத்துடன் சுழன்று கொண்டே இருக்கும். அதனின் ஈர்ப்பு வட்டத்தில் நீங்கள் அனைவரும் வாழ்ந்திட வளர்ந்திட எமது அருளாசிகள்.