ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 17, 2016

செத்த பிற்பாடு என்ன ஆனால் என்ன? ஒன்றும் தெரியாது என்பார்கள் - தெரிந்து கொள்ளுங்கள்

சிலர் சொல்வார்கள், “இறந்த பிற்பாடு நான் என்னவாக ஆனால் என்ன? கண்ணிலே பார்க்கப் போகிறேனா..?”

ஆனால், பேயாகப் பிடித்து ஆட்டுவதைப் பார்க்கிறோம்.

ஒரு இடத்தில் அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே சண்டையாக இருக்கிறது. தம்பி அதிகாரத்தில் இருக்கிறார்.

“பாவிப் பயல்.., என்னை இப்படியே செய்து கொண்டிருக்கின்றாய். உன் குடும்பம் நாசமாகப் போகும். நான் செத்தாலும்.., உன்னை விட மாட்டேன்டா..,” என்று சொல்லிவிட்டு அண்ணன் இறந்து விட்டார்.

அடுத்து என்ன ஆனது? இறந்த பின் தம்பி சம்சாரத்தைப் போய்ப் பிடித்துக் கொண்டது. உடலுக்குள் போனதும் என்ன செய்கின்றது?

“டேய்.., எனக்குத் தோசை கொடுடா..”

தோசையைச் சுட்டுக் கொடுத்தவுடன், இந்தத் தோசை ஆகாது எனக்கு வேறு வேண்டும் என்கிறது.

அவருக்கு சம்சாரத்தின் மீது பற்று இருக்கின்றது. ஆனால் சம்சாரம் உடலில் அது பற்றிக் கொண்டது.

உடலுடன் இருக்கும் போது அண்ணனைப் பல வகையிலும் வேதனைப்படுத்தினார்.

தோசை இன்னும் வேண்டும், அதற்கு அடுத்து பழம் கொண்டு வந்தால் தான் நீ வேறு வேலை பார்க்க முடியும், “கொண்டடா..,” என்கிறது.

இந்த இடத்தில் இந்தப் பொருள் இருக்கிறது, போய் வாங்கிக் கொண்டுவா. அவர் எங்கே போய் காபி குடித்தாரோ அந்தக் கடையில் காபி தூள் வாங்கி வா. அதிலே காபி போட்டால் தான் நான் குடிப்பேன், நான் சொல்கிற மாதிரிப் பக்குவத்தில் இருந்தால் தான் சாப்பிடுவேன் என்று இப்படியே சொல்கிறது.

ஆனால், அவர் சம்சாரத்திற்கு இதெல்லாம் தெரியாது. அதே சமயத்தில் அவருக்கும் (தம்பிக்கும்) இது ஏன், எதனால் என்று தெரியாது.

இதைச் சரி செய்வதற்காக வேண்டி மந்திரவாதிகள் இரண்டு பேரைக் கூப்பிட்டுப் போய் ஒரு இலட்ச ரூபாய் வரை செலவழித்திருக்கின்றார்.

மூன்று சேவலை அடுப்பாக வைத்து அதிலே நெருப்பை வைத்து ஒரு வடைச் சட்டியை வைத்து இன்னொரு சேவலை அறுத்து அதன் மேல் வைத்துச் சமைத்து அந்தப் பிண்டத்தை எடுத்து “டுஸ்ஸ்” என்று வீசினால் அந்தக் கறியெல்லாம் காணாமல் போய்விடும். ஒன்று கூடக் கீழே விழுவதில்லை

இதைக் காவு கொடுத்தபின் அதைக் கேட்கின்றார்கள். இதையெல்லாம் வாங்கிக் கொண்டபின் நீ போய்விடுகின்றாயா? என்கிறார்கள்.

“ஓ.., வாங்கிக் கொண்டு நான் போய்விடுகிறேன்” என்று சொல்கிறது.

இதெல்லாம் செய்த பிற்பாடும் அந்த அமமாவை விட்டுப் போனபாடில்லை.

வீட்டுக்கு வந்தபின், “டேய்.., என்னையா இப்படிச் செய்கிறாய்..? கொண்டடா தோசையை.., இல்லாவிட்டால் நீ தொழில் செய்ய முடியாது என்று கேட்கின்றது.

இந்த அம்மாவைச் சரி செய்வதற்காக இராஜஸ்தான் வரையிலும் போயிருக்கின்றார்கள். அங்கேயும் பெரிய பெரிய மந்திர வேலைகளையெல்லாம் செய்து பார்த்திருக்கின்றார்க்ள். ஒன்றும் நடக்கவில்லை.

ஏனென்றால், போக முடியாது..! மூன்று மாதம் வரை இருக்கும். பிறகு மறுபடியும் திரும்பி விடும்.

எல்லாம் பார்த்துவிட்டு ஒன்றும் முடியவில்லை என்ற நிலையில் பிறகு எம்மிடம் அந்த அம்மாவை அழைத்துக் கொண்டு வந்தார்கள். விபரத்தைச் சொன்னார்கள்.

அந்த அம்மா பேச ஆரம்பித்தது, உண்மையெல்லாம் சொன்னது. பாவிப்பயல்.., இவன் சும்மா என்னைத் திட்டிக் கொண்டே இருப்பது, சாப்பாடு சாப்பிடும் பொழுதெல்லாம் வேதனைப்படுத்திக் கொண்டிருப்பான்.

ஆகையினால், உயிருடன் இருக்கும் போது என்னை எப்படி இம்சித்தானோ அதே போல அவன் அவஸ்தைப்பட வேண்டும். அதனால் தான் அவன் (தம்பி) சம்சாரத்தையே பிடித்துக் கொண்டேன்.

“இவன் அண்ணன் தான் நான்..,” என்று சொல்கிறது.

இவர் என்ன செய்தார்? எட்டிக்கட்டையைக் கொண்டு வைத்தால் நான் அது படி பார்ப்பேன் என்றார். எட்டிக்கட்டையைப் போட்டால் பேய் ஓடிவிடும் என்று சில மந்திரவாதிகள் எட்டியில் சில மந்திரத்தைச் சொல்லி அதை வீசுவார்கள்.  

அது என்ன சொல்கிறது? “அட.., கொண்டடா நான் இலேசாகப் பிடித்துக் கொள்கிறேன்” என்றது.

அப்புறம், “இரு நான் பார்க்கிறேன், மிளகாய்த் தூளைப் போட்டு என்ன செய்கிறேன் பார்..,” என்று நான் சொன்னேன்.

சொன்னவுடன், “மிளகாய்த் தூள் தானே.., நான் போகிறேனா? இவர்கள் போகிறார்களா? ஆனால், நீ இருப்பாய்” என்றது.

மிளகாய் வத்தலை சட்டி நிறைய வைத்து நெருப்பில் போட்டவுடன் என்ன ஆனது? நெடி தாங்காமல் எழுந்து ஓடிவிட்டார்கள். ஒருவர் கூட இல்லை அந்தக் காம்பவுண்டிலிருந்தவர்களும் ஓடிவிட்டார்கள்.

அவ்வளவு மிளகாயை நெருப்பில் போட்டால் என்ன ஆகும்? அந்த அம்மா உட்கார்ந்திருக்கின்றது. நானும் உட்கார்ந்திருக்கின்றேன். ஒன்றும் வேலை ஆகவில்லை.

ஒன்றும் செய்ய முடியாது, நீ உன்னுடைய வேலையெல்லாம் காண்பி.., நான் என் வேலையைப் பார்க்கிறேன்.

எல்லாக் கஷ்டத்தையும் அனுபவித்துவிட்டேன்,
அதை உன்னை (தம்பியை) அனுபவிக்க வைக்கின்றேன் பார்
நான் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றேன் என்று
அப்படியே அந்த உணர்வுகளைப் பேசுகின்றது.

இது நடந்த நிகழ்ச்சி. ஏனென்றால், இதை அனுபவபூர்வமாக உங்களுக்குச் சொல்கின்றேன்.

இறந்த பிற்பாடு என்ன செய்வோம்? போன பிற்பாடு யாருக்கு என்ன தெரியும்? என்று சொல்வார்கள். அனுபவத்தில் இதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

சில குடும்பத்தில் என்னென்ன அவஸ்தைப் படுகின்றார்கள்? இறந்தபின் நாம் போய்விடுகிறோம் என்று நினைப்பார்கள். இறந்தபின் இதைக் காட்டிலும் கஷ்டம் தான், ஜாஸ்திதான்.

சில பேர் என்ன செய்வார்கள்? இந்த வாழ்க்கையில் எப்படியாவது தொலைந்து போய்விட்டால் பரவாயில்லை என்று மருந்தைக் குடித்து இறப்பார்கள்.

அடுத்து ஒரு உடலுக்குள் சென்று அதே உணர்ச்சியைத் தூண்டி மருந்து குடித்த நிலைகளையே அந்த உடலையும் மயக்கிக் கொண்டிருக்கும். ஆக, இவர்கள் சாவதில்லை. உடல் தான் சாகின்றது.

உடலில் விளைய வைத்த உணர்வு
அத்தனை அவஸ்தையும் அனுபவித்துத்தான் தீரும்.
இதிலிருந்து மட்டும் யாரும் தப்ப முடியாது.

ஆகவே இதைப் போல இயற்கையின் நிலைகளில் நாம் தவறு செய்யாமலேயே பல நிலைகள் நமக்குள் இப்படி வந்து கொண்டிருக்கின்றது.

பல கோடிச் சரீரங்களிலிருந்து நம்மை மனிதனாக உருவாக்கிய உயிரை நாம் எப்படி மதிக்க வேண்டும்? இந்த உடலுக்குப் பின் எங்கே செல்ல வேண்டும்? என்று ஞானிகள் காட்டிய அருள் வழி சென்றால் இனி இன்னொரு பிறவி இல்லை என்ற நிலையை அடையலாம்.

அழியா ஒளியின் சரீரம் பெறலாம். என்றுமே உயிருடன் ஒன்றி ஏகாந்த நிலைகள் கொண்டு வாழ முடியும். அதுதான் நம் குருநாதர் காட்டும் விண் செல்லும் மார்க்கம்.