ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 28, 2016

“என்ன வாழ்க்கை?” என்று தற்கொலை செய்தால் மிருகமாகப் பிறப்பாய் போ..! குருநாதரிடம் பெற்ற அனுபவம்

நமது குருநாதர் அடிக்கடி எம்மைத் துயரத்தில் ஆழ்ந்திடச் செய்தார், உழலச் செய்தார், பல இன்னல்களைக் கொடுத்தார் அந்த இன்னல்களை நான் கண்டபின் குருநாதரிடமே வெறுப்பு கொண்டேன்.

“இப்படியெல்லாம் என்னைத் தொல்லைப்படுத்துகின்றாயே.., என்னைக் கஷ்டப்படுத்துகின்றாயே.., இதெல்லாம் எனக்கு வேண்டாம்.., நான் போகின்றேன்...,” என்று சொல்லிவிட்டு
இதைத் தாங்காது தற்கொலை செய்து கொள்ள முயற்சி எடுத்தேன்.
ஒரு முறை அல்ல பல முறை முயற்சித்தேன்.

அவர் கொடுக்கும் இம்சைகளிலிருந்து மீள முடியாத நிலையில் “என்ன வாழ்க்கை..?” என்று எண்ணினேன்.

என் மனைவியைக் காப்பாற்றினோம். சில நேரங்களில் மகிழ்ந்திடும் நிலைகள் பெற்றோம்.

ஆனால், ஒவ்வொரு நொடிக்கும் இத்தகைய இன்னல் வருகின்றதே
என்ன வாழ்க்கை என்ற நிலைகளை எண்ணி
பல முறை தன்னைத் தற்கொலை செய்யும் உணர்வுக்கே
என்னை அழைத்துச் சென்றது.

அப்பொழுதுதான் குருநாதர் சுட்டிக் காட்டுகின்றார்.

உன்னுடைய உணர்வின் தன்மை கொண்டு பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று எண்ணுகின்றாய்.

இதைப் போல அந்தத் தீமையின் உணர்வுகளை நீ உனக்குள் நுகரும் போது உன் நன்மையின் நிலைகளைச் செயலற்ற நிலைகளாக அது எவ்வாறு மாற்றுகின்றது?

இந்த உடலை அழித்துவிட வேண்டும் என்ற உணர்வுகளைச் செயல்படுத்துகின்றது.

எத்தனை உடல்களில் நீ உன்னைக் காத்திட வேண்டும் என்ற உணர்வின் நினைவு கொண்டாய். பரிணாம வளர்ச்சியில் இன்று நீ மனிதனாக ஆனாய்.

ஆனால், மனிதனான பின் இந்தச் சிறு குறைகளைத் தாங்காது இந்த உணர்வின் தன்மை உனக்குள் வளர்க்கப்படும் போது இதே எண்ணம் இந்த உடலை அழிக்கச் செய்கின்றது.

இந்த உடலை அழித்துவிட்டால்
இந்த உடலை அழித்துவிடும் உணர்வு கொண்டு இன்னொரு உடலை
அந்த உடலையும் அழித்திடும் நிலைகளுக்குச் சென்று
இதைப் போன்ற உடலை அழித்துப் புசித்திடும் உணர்வின் தன்மை கொண்ட நீ மிருகமாகப் பிறப்பாய் போ..,” என்ற நிலைகளில் சாபமிடும் நிலைகள் கொண்டு நீ சிந்தித்துப் பார்.

இந்த உணர்வின் அலைகள் உனக்குள் எவ்வாறு செயல்படுகின்றது? எதனை நீ அறிய வேண்டும் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்திக் காட்டினார் குருநாதர்.

ஆகவே, நாம் எதைக் கருத்தில் கொள்ள வேண்டும்? எதனை நமக்குள் பருக வேண்டும்? என்ற பேருண்மையை குருநாதர் அங்கே காட்டுகின்றார்.

இன்று பாட நூல்களில் காட்டுவது போல அனுபவ ரீதியில் குருநாதர் எமக்குக் கொடுத்ததைத்தான் உங்களுக்குச் சொல்கிறோம்.

  •              நீங்கள் அனைவரும் இதைப் பெற முடியும்
  • ·         உங்களால் தீமைகளை அகற்றும் சக்தி பெற முடியும்.
  • ·         தீமையற்ற உடலாக மாற்ற முடியும்
  • ·         தீமையற்ற நிலைகளை உங்கள் உடலுக்குள் விளைய வைக்க முடியும்.
  • ·         என்றும் பிறவா நிலை என்ற பெரு நிலைகளில் அடைய முடியும்
  • ·         உங்கள் பார்வையால் பேச்சால் பிறருடைய தீமைகளைப் போக்க முடியும்.
  • ·         உங்கள் குடும்பத்தில் வரும் சிக்கலை அகற்ற முடியும்
  • ·         உங்கள் வாழ்க்கையினுடைய நிலைகள் மன நிம்மதி பெற முடியும்
என்ற இந்த நிலைகளைத்தான் உங்களுக்குள் தெளிவாகக் காட்டுவதும் இதை உங்களுக்குள் போதிப்பதும்.

ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில் நீங்கள் அனைவரும் அந்தச் சக்திகளை எளிதில் பெற முடியும். வாழ்க்கையில் எதிர்படும் எத்தகைய சிக்கல்களையும் மாற்ற முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.