ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 15, 2016

மகரிஷிகளின் அருள்சக்தி பெறவேண்டும் என்று உயிரிடம் ஒப்படைத்தால் அவனே நம்மை மகரிஷிகளுடன் ஒன்றச் செய்கின்றான்

எங்கேயோ உள்ள மகரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் தகுதியை ஏற்படுத்திய குருவின் வழியில்
அதை உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்ற நினைவுடன் கலந்து
இங்கே யாம் நினைவின் அலைகளாகப் பரப்பப்படும் போது
நீங்களும் அந்த உணர்வின் துணையாக எடுக்க வேண்டும்.

டி.வி. யில் ஒளிபரப்புச் செய்யபடும் போது எந்த ஸ்டேஷனோ அதைத்தான் நாம் திருப்புகிறோம். அதனின் அலைகள் இங்கே பூமியில் படர்ந்தாலும் அலையின் நிலையில் நாம் வைக்கும் ஸ்டேஷனைத்தான் அது தெளிவாகக் காட்டுகின்றது.

இதைப் போலத்தான் நம் வாழ்க்கையில் வெறுப்பு, சஞ்சலம் மற்றும் இதைப் போன்ற நிலைகளை நம்முள் கலந்து அந்த உணர்வின் செயலால் நமக்குள் வெறுப்பின் உணர்வு கொண்ட ஸ்டேஷனைத்தான் நாம் திருப்புகின்றோம்.

வேதனை என்ற ஸ்டேஷனைத்தான் நாம் திருப்புகின்றோம். இவன் இப்படி செய்தானே எனக்கு இப்படிச் செய்தானே என்கிற நிலையில் இந்த உணர்வுகள் நம் உடலில் இயங்குகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட அருள்ஞான உணர்வினை நினைவு கொண்டு எடுங்கள். அதுவே உங்களுக்குள் சக்தி வாய்ந்ததாக இயங்கும்.  தீமைகளை அகற்றும்.

ஆக, உயிருடன் ஒன்றும் மகரிஷிகளின் அருளைப் பற்றுடன் பற்றச் செய்யும். அந்தப் பற்றுடன் நாம் வாழ்ந்தால் அருள்ஞானிகளின் ஈர்ப்பு வட்டத்தில் நாம் செல்ல முடியும்.

நம் உயிரின் தன்மை
அந்த அருள் ஞானியின் இடத்தில் இணைய வேண்டும்
என்ற நிலையை நாம் எல்லையாக வைக்க வேண்டும்.

நம் உயிருடன் ஒன்றிய நிலைகளில் இனி எதனை நாம் உயிருடன் ஒன்றச் செய்கின்றோமோ அதனின் எல்லைக்கே நம்மை அழைத்துச் செல்லும் நம் உயிர்.

ஆனால், இப்படிக் குரோதம் கொண்டு செயல்படுகின்றானே, எனக்கு வேதனை தருபவனை விடுவேனா பார் என்றால் அதனின் உணர்வின் எல்லையை இங்கே வகுத்து விடுகின்றோம்.

இந்த எல்லைக்குள்ளே கொண்டு போய் அவருடைய உடலில் சேர்ந்துவிட்டு நீ அதை அனுபவி என்று நம் உயிர் விட்டுவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகளிலிருந்து விடுபட கொடுத்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைச் சீராகப் பயன்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் தெளிந்திடுங்கள்.
அருள் ஞானிகளின் அருள் வட்டத்தில்
அந்த எல்லையின் நிலையிலேயே நீங்கள் செயல்படுங்கள்.
குரு காட்டிய வழிகளில் நீங்கள் செயல்பட்டால் தீமைகள் அகல உதவும்.

வாழ்க்கையில் நாம் திரைகடல் ஓடி திரவியம் தேடினாலும் கடல்களில் செல்லும் போது எத்தனை அலைகள் வருகின்றது. வாழ்க்கையில் இந்தப் பூமியில் வாழ்ந்தால் எத்தனை இடையூறுகள் வருகின்றது.

ஒரு வியாபாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால் சரக்கின் தன்மை உயர்த்தி நாம் வியாபாரம் செய்து பிழைக்க எண்ணுகின்றோம்.

இதைப் போலத்தான் வாழ்க்கையில் வரும் தீமைகளை நீக்கிவிட்டு ஞானிகளின் உணர்வை உயர்ந்த சரக்காக மாற்றி தெளிந்த உணர்வு கொண்டு சொல்லால் செயலால் நாம் செயல்படுவோம் என்றால் தீமையை அகற்றிய நிலைகள் கொண்டு நாம் வளர முடியும்.

உங்களை நீங்கள் நம்புங்கள்.
உங்களுக்குள் இருக்கக்கூடிய சக்தியை உணருங்கள்.
நீங்கள் எண்ணிய உணர்வின் தன்மை கொண்டு
உயிர் இயக்கும் என்று நம்புங்கள்.

அது நாம் எண்ணிய உணர்வுடன் நம்மை இணைத்துக் கொள்ளும் என்ற நிலையை நீங்கள் இதன் வழிகளிலே நடந்து அருள் மகரிஷிகளின் ஆற்றலை உங்களுக்குள் கொடுத்ததை அதனின் துணை கொண்டு சீர்படுவோம், உயிருடன் ஒன்றுவோம்.

நாம் எண்ணிய நிலைகள் கொண்டு அவனிடம் ஒப்படைத்தால் “உயிரான அவனிடம்” மகரிஷிகளின் அருள் சக்தி பெறவேண்டும் என்று ஒப்படைத்தால்
அவனே அழைத்துச் சென்று
அந்த அருள் மகரிஷிகளுடன் நம்மை ஒன்றச் செய்கிறான்.

இந்த எல்லையை வைத்து உங்கள் வாழ்க்கைப் பயணத்தைச் செயல்படுத்துங்கள். குரு அருள் உங்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்.

உங்கள் மூச்சும் பேச்சும் உலக மக்களைக் காத்திடும் நிலையாக அலைகளாகப் படரவேண்டும் தீமைகளை அகற்றிடும் உணர்வின் செயலாகப் படரவேண்டும் என்று வேண்டுகின்றேன்.