ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

January 21, 2016

மாடசாமி, சுடலை மாடன், கருப்பணச்சாமி – ஞானிகளின் விளக்கம்

அன்றாட வாழ்க்கையில் நாம் சுவாசிக்கும் ஒவ்வொரு உணர்வின் செயல்களை நாம் மனிதர்கள் அறியும் நிலைகளுக்காக இராமாயணம், மகாபாரதம், கந்த புராணம், சிவ புராணம், விநாயக புராணம், தேவி புராணம் என்ற நிலைகளை ஞானியர்கள் உருவாக்கினர்.

மனித வாழ்க்கையில் இதையெல்லாம் நாம் அறிந்துணர்ந்து தீமைகளை எவ்வாறு அகற்ற வேண்டுமென்று தான் அந்தக் காவியங்களைப் படைத்துள்ளார்கள்.

நம் உயிர் ஈசனாக இருந்து இயக்கி
நாம் எதை எண்ணுகின்றோமோ அதை உருவாக்கிவிடுகின்றது.

நாம் எதை எண்ணுகின்றோமோ
அதை நம் கண் வழி காட்டுகின்றது.

எண்ணியதை உயிர் இயக்குகின்றது.
அந்த உணர்வின் சத்தை உடலாக மாற்றுகின்றது.

இதைப் போன்ற நிலைகளை சாதாரண மனிதர்களூம் கண்ணுற்றுப் பார்த்தவுடன் அறிவதற்காகக் காரணப் பெயர்களை வைத்து தெய்வங்களாக இதைக் காட்டியுள்ளார்கள்.

தீய நிலைகளையும் அதன் செயலாக்கங்களையும்
தீய தெய்வங்களாகக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.
      ஆனால், நாம் உணர்திருக்கின்றோமா என்றால் இல்லை.

மாடசாமி, சுடலை மாடன், என்று காட்டியிருக்கின்றார்கள்.

அதாவது தீய உணர்வின் தன்மைகளை நாம் நுகரப்படும் போது நமக்குள் இருக்கும் நல்ல உணர்வுகளைப் பொசுக்கிவிடுகின்றது.

அதிலே கடும் நோயாக வேதனைப்படுகின்றது.
இதற்குப் பெயர் சுடலை மாடன்.

நம் வாழ்க்கையில் சந்திப்போர்கள் அவர்கள் வேதனைப்படுவதை நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் அவர் உடலிலே வேகும் வேதனை உணர்வை
நாம் நுகரப்படும்போது அது நமக்குள் வந்து
நம்மையும் வேக வைக்கின்றது - சுடலை மாடன்.

ஆகவே, அங்கே உற்றுப் பார்த்த நிலைகள் ஊழ்வினையாக மாறி நம்மை வேதனைப்படச் செய்து நமக்குள் வேதனையை உருவாக்கும் அதனின் செயலாக்கங்களை சுடலை மாடன் என்று பெயர் வைத்து உணர்த்துகின்றார்கள்.

அடுத்து கருப்பணச்சாமி என்று வைத்திருப்பார்கள். கருப்பணச்சாமி அருகிலே மோப்ப நாயைக் காண்பித்திருப்பார்கள்.

ஒருவர் என்ன செய்கிறார் என்று நுகர்ந்து பார்த்தால்
அதனின் உணர்வை நுகர்ந்தபின்
நம் அறிவின் தன்மை மங்கி நாம் செய்வதறியாது
பிறரைப் பழி தீர்க்கும் உணர்வையே உருவாக்கிவிடுகின்றது.

இதைப் போன்ற நிலைகள் நாம் நுகர்ந்த உணர்வுகள் நமக்குள் எவ்வாறு தெய்வமாகச் செயல்படுகிறது? என்ற நிலையைத் தெளிவாக் காட்டியுள்ளார்கள் ஞானிகள்.

ஆகவே, நமக்குள் உருப்பெரும் இத்தகைய தீமையான நிலைகளிலிருந்து நாம் மீண்டிடல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நாங்கள் பெறவேண்டும் என்று இதனை நமக்குள் இணைத்துவிட்டால் நல்ல உணர்வின் தன்மையாகத் தெளிந்த நிலைகள் கொண்டு நாம் சிந்தித்துச் செயல்பட முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் உணர்வுகள் நமக்குள் பெருகப் பெருக தீமைகளை அகற்றிடும் எண்ண உணர்வுகள் நமக்குள் வலுப் பெற்று தீமையான உணர்வுகள் நமக்குள் நெருங்காது நம்மைக் காத்திட முடியும். எமது அருளாசிகள்.