ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 2, 2013

ஜாதகம் பார்த்து நம் துயரங்களை நீக்க முடியுமா?

1. பிற ஆன்மாக்கள் பெண்களுக்குள் இயக்கும் நிலை
நாம் தவறு செய்யவில்லை. பிறிதொரு ஆன்மா, நம்முள் வந்து இயக்குகின்றது. அதைவிட்டு (உயிரின் பாகம்) நகர்ந்து விட்டால், இரத்த நாளங்களில் எந்த பாகத்தில் செல்கின்றதோ, அந்த பாகத்தில் வலியும், குடைச்சலும் ஏற்பட்டு, ஐயோ, கை வலிக்கின்றதே, கால் குடைச்சலாக இருக்கின்றதே என்பது போன்ற வேதனைகளைத் தூண்டும். 

இது போன்ற பிற ஆன்மாக்களை ஈர்க்கும் சக்தி, பெண்களுக்கே உள்ளது. ஏனெனில், பெண்களிடம் அன்பும், பரிவும், பாசமும் அதிகமாக இருப்பதனால், பெண்களிடம் கவரும் ஆற்றலும், அதிகமாக உள்ளது.

உதாரணமாக, குடும்பத்தில் பெண்கள் மிகப் பாசமாக இருப்பார்கள். ஒருவர் இறந்துவிட்டால்,  ஐயோ... பாவமே...,  குடும்பத்தில் இத்தனை பேரை விட்டுவிட்டுச் சென்றுவிட்டாரே என்று எண்ணினால், இவர்களுடைய உடலில் அந்த ஆன்மா வந்துவிடும்.

இப்படி, பிறிதொரு ஆன்மா இவர்களுடைய உடலில் வந்துவிட்டால், தான் மனித உடலில் வாழ்ந்த காலத்தில், என்னென்ன துயரத்தை அந்த ஆன்மா அனுபவித்ததோ, அவைகளையெல்லாம் இங்கே விளைவித்து, இவர்களுடைய உடலில் கைவலி, கால்வலி போன்ற நோய்களை உருவாக்குகின்றது.

இப்படி, பெண்களிடம் பாசத்தின் தன்மை இருப்பதனால், பிற ஆன்மாக்களை கவர்ந்து, அதன்வழி செல்லப்படும் பொழுது, குடும்பத்தில் விஷத்தின் தன்மைகள் அதிகமாகப் பரவுகின்றன. இதைப் போன்று, நம்மை அறியாமலே துயர் கொள்ளும் நிலைகள் வருகின்றன.
2. ஜாதகம் பார்த்து நம் துயரங்களை நீக்க முடியுமா?
நம்மை அறியாது வரும் துயரங்களை நீக்குவதற்கு,
ஜோசியமும்,  வாஸ்து சாஸ்திரங்களும் பார்த்தால் போய்விடுமா

வாஸ்து சாஸ்திரம் பார்த்து, வீட்டின் நிலையையும், வாசல்படியையும் மாற்றி வைத்துவிட்டால்,
அனைத்தும் சரியாகி விடுமா
உங்களைக் காக்குமா
என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

மனிதர்களுக்கு ஜாதகமில்லை எத்தகைய தீமைகளையும் மாற்றி அமைக்கும் தன்மை பெற்றவர்கள், மனிதர்கள்.

இன்று வாழும் வாழ்க்கையில், எவ்வளவோ மாற்றங்களை செய்துள்ளனர். விஞ்ஞான அறிவு கொண்டு, எத்தனையோ சாதனைகளைச் செய்கின்றனர்.

விமானம் பறப்பதற்கு, ஜாதகமா பார்க்கின்றனர்? விஞ்ஞான அறிவு கொண்டு, மேகங்களின் அடர்த்தி அதிகமாக இருக்குமானால், விமானத்தை விடவேண்டாம் என்று உணர்கின்றனர். இப்படி விஞ்ஞான அறிவு கொண்டு, மனிதர் தம்மைக் காத்துக் கொள்கின்றனர்.
3. தீமை செய்யும் அணுக்களுக்கு, ஆகாரம் இல்லாது தடைப்படுத்த வேண்டும்
ஆனால், மெய்ஞானிகள் காண்பித்த அருள் வழியில் நாம் செயல்பட்டால், நம்முள் பகைமை உணர்வுகள் வராது காக்கலாம்.

நாம் உடல் அழுக்கைப் போக்க, சோப்புப் போட்டுத் தேய்த்துக் குளிக்கின்றோம். இதே போன்று, நமது ஆன்மாவில் அறியாது சேர்ந்த அழுக்கை நீக்க வேண்டுமென்றால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் இணைக்க வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வை, நம்முள் செலுத்தும் பொழுது, நமது ஆன்மாவில் தீமைகள் சேராது தடுத்து, ஆன்மாவில் பட்ட அழுக்கை நீக்குகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி நான் பெறவேண்டும், என் உடல் முழுவதும் படரவேண்டும், என் உடலிலுள்ள ஜீவ ஆன்மாக்கள், ஜீவ அணுக்கள் அனைத்தும் பெறவேண்டும். 

எனது வாழ்க்கையில், நான் யார், யாரையெல்லாம் பார்த்தேனோ, அவர்களுடைய குடும்பம் எல்லாம் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியும் பெறவேண்டும். அவர்களின் குடும்பத்தில், அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும் என்ற, இந்த உணர்வின் எண்ணங்களை, நமது உடலில் பதிவாக்குதல் வேண்டும். 

அதிகாலை 4.00 மணியிலிருந்து 6.00 மணிக்குள், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் அருள் உணர்வினை நாம் நுகர்தல் வேண்டும்.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியின் உணர்வுகளை நம்முள் இணைக்கும் பொழுது,
நம் உடலில் அறியாது சேர்ந்த
தீய உணர்வின் அணுக்களுக்கு,
ஆகாரம் செல்லாது தடுக்கப்படுகின்றது.

இப்படி, தீமைகளை நம்முள் புகாது தடைப்படுத்திவிட்டால், அவைகளைச் சூரியனின் காந்தபுலனறிவுகள் கவர்ந்து, மேலே கொண்டு சென்றுவிடும். நமது ஆன்மா சுத்தமாகிவிடும்.

ஆகவே, துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, பற்றுடன் பற்றுங்கள். உடலின் பற்றைப்  பற்றற்றதாக்குங்கள்.
அருள் ஞானத்தைப் பற்றுடன் பற்றுங்கள்.
பகைமையற்ற வாழ்வு வாழ்ந்திடுங்கள்.
இருளான உணர்வுகளை நீக்கி,
மெய்ப்பொருள் காணும் திறன் பெறுங்கள்.
மெய் வாழ்க்கையாக வாழ்ந்திடுங்கள். 

இதன் வழி. அருள்ஞானம் பெறவேண்டும் என்று ஏங்கி இருப்போர் அனைவருக்கும், எமது குரு அருளும், எமது அருளும், என்றும் உறுதுணையாக இருக்கும்.