ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2013

கீதா உபதேசம் செய்வது யார்? உபதேசித்த உண்மைத் தத்துவம் என்ன?


1. “கீதா உபதேசம்” செய்வது யார்? நமது கண்களே
நமது கண் தான், நாம் எண்ணிய நிலைகளை அது கவர்ந்து அலைகளை எடுத்து “கீதா உபதேசம்” என்ற நிலைகளில் உபதேசிக்கின்றது.

பிறர் தவறு செய்கின்றார் என்றால், அந்தத் தவறான உணர்வைக் கண் கவர்ந்து, இழுக்கப்பட்டு, உயிரில் பட்டு அவன் தவறு செய்கின்றான் என்று உபதேசிக்கின்றது கண்.

ஆனால், தவறு செய்கிறான் என்று காட்டினாலும், அந்த உணர்வின் நிலைகள் நமக்குள் அது பதிவாகின்றது.
தவறு செய்கின்றான் என்று உணர்த்துகின்றது.
தவறில் இருந்து விடுபடவும் வழி செய்கின்றது.
தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும்
என்ற உணர்வும் தோன்றுகின்றது.

நாம் தவறிலிருந்து விலகிச் செல்ல வேண்டும் என்று எண்ணும் பொழுது, அந்தத் தவறான உணர்வுகள் நமக்குள் அதிகமாக விளைவது இல்லை.

தவறு செய்பவனைத் தண்டிக்க வேண்டும் என்று எண்ணும் பொழுது, இந்த உணர்வு நம் கண்ணின் நிலைகளுக்கு வந்து,
நாம் எப்படியெல்லாம் வளைத்துப் பார்க்க வேண்டும்?
எந்த நிலைகளில் மறைமுகமாக இருக்க வேண்டும்? என்று
நாம் எடுத்துக் கொண்ட கண்ணின் உணர்வலைகள், ஞானத்தின் நிலைகொண்டு அவனைத் தாக்கும் நிலையே உருவாக்கும்.

அல்லது அவனை ஏசும் உணர்வு கொண்டு, அவன் யாரிடம் எதைச் சொன்னான்? அது என்னவாகும்? என்று எண்ணும் பொழுது, அவனுடன் பழகிய நிலைகள் கொண்டு,
அதை நினைவிற்குக் கொண்டு வரச் சொல்லி,
அவன் சொன்னதை, அவனிடம் சொல்லி
எப்படியும் மடக்க வேண்டும் என்ற நிலையில்
ஞானத்தை ஊட்டுவது கண்.
2. கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் செல்கின்றான் - விளக்கம்
எந்தெந்த நிலைகளில் நாம் எண்ணங்களை எண்ணுகின்றோமோ, அவற்றை இயக்கிக் காட்டுவது கண். கண்ணன் அர்ச்சுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று காவியமும் உண்டு.

அர்ச்சுனன் என்பது,
நாம் புழுவிலிருந்து மனிதனாக உருப்பெரும் நிலைகளில் விளைந்த
ஒவ்வொரு எண்ணமும் வலுப்பெற்று,
பரிணாம வளர்ச்சியில் வளரச் செய்தது.
அர்ச்சுனனுக்குக் கண்ணன் சகலகலா வித்தைகளையும் கற்றுக் கொடுத்தான் என்று காவியங்கள் உண்டு.

புழுவிலிருந்து மனிதனாக வரும் வரையிலும், இந்தக் கண்ணே அந்தந்த நிலைகளில்
எதிரியைக் காணும் பொழுது,
அதிலிருந்து தப்பிக்கும் நிலையும்,
எதிரி நெருங்கிவிட்டால் எப்படித் தாக்க வேண்டும் என்ற நிலையும்
எதிரி தன்னை நெருங்கித் தாக்க வரும் பொழுது,
அந்தத் தாக்கும் உணர்வின் உணர்ச்சியைக் கவர்ந்து, இழுத்து,
ஓடும் உபாயத்தைக் காட்டி,
தப்பித்து ஓடும் வேகத்தைக் கொடுக்கின்றது, கண்கள்.

இருப்பினும், எதிரி வலு கொண்டு தாக்கும் நிலை வந்துவிட்டால், எதிர்த்து நீ தாக்கு என்ற இந்த உணர்வை ஊட்டி, அந்த எதிரியைத் தாக்கச் செய்கின்றது.
ஆக, எதிரியைக் கூர்ந்து கவனித்து,
அதைத் தாக்க வேண்டும் என்ற
எண்ணத்தின் வேகத் துடிப்பைத் துடிக்கச் செய்து,
எதிரியைத் தாக்கச் செய்கின்றது கண்.

ஆனால், எதிர் நிலை அதிகமாகும் பொழுது, எதிரி தன் வலு கொண்டு
இதை அழித்துவிட்டால்,
இதன் உடலில் இருந்த உயிரான்மா எதிரியின் உணர்வைக் கவர்ந்து,
அதனின் வலு பெற்று, வியூகத்தைத் தகர்த்து,
அதன் உடலுக்குள் சென்று,
வலிமை இழந்த இந்த உயிர் உட்புகுந்து,
அதனின் உணர்வை அது கவர்ந்து,
அதனின் நிலை பெறும் என்று
கீதையிலே கண்ணான கண்ணனின் செயல்களை, கீதா உபதேசம் என்று (கீதாச்சாரம்) இதையெல்லாம் அன்று மெய்ஞானிகள் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள்.