ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2013

சுவாச நிலையைப் பற்றி திருமூலர் வெளிப்படுத்திய பாடல்

வாசிவா வென்று வாசியில் ஊடாடி
வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
-- திருமூலர்
1. வாசிவா வென்று வாசியில் ஊடாடி
கண்ணின் (புறக்கண்) நினைவைப் புருவமத்தியில் வைத்து, அகக்கண்ணான உயிரோடு ஒன்றி, நினைவாற்றலை விண்ணிலே செலுத்தி,  
விண்ணிலிருந்து வரும் பேராற்றலை
உயிர் வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

அதாவது, விண்ணிலிருந்து வரும் ஆற்றல்களைக் கவர்ந்து, இழுத்து நாம் சுவாசிக்க வேண்டும். அங்கிருந்து வரும் உணர்வலைகள் உயிரிலே மோதும் பொழுது பேரொளியாக அது மாறுகின்றது.

நம் சுவாசமானது இப்படி பூமி சமைத்ததை ஈர்க்காதபடி, நேரடியாக விண்ணிலிருந்து வருவதைச் சுவாசமாக்க வேண்டும்.
2. வாசியை அங்கங்கே வைத்து நீசாதித்தால்
அப்படி விண்ணிலிருந்து வரும் அருள் மகரிஷிகளின் ஆற்றல்மிக்க சக்திகளை உயிர் வழியாகச் சுவாசித்து, நம் உடலில் இருக்கும் அனைத்து அங்கங்களிலும் கண்ணின் நினைவைக் கொண்டு அந்த ஆற்றலை இணையச் செய்யவேண்டும்.

நம் உடலிலுள்ள அங்கங்கள்:
சிறு குடல், பெருகுடல்
கணையங்கள்
கல்லீரல், மண்ணீரல்
நுரையீரல்
சிறுநீரகங்கள்
இதயம்
சிறு மூளை, பெருமூளை
கண்களில் உள்ள கருமணிகள்
நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், விலா எலும்புகள்
குருத்தெலும்பு, எலும்புக்குள் உறைந்துள்ள ஊன்
தசை மண்டலம், தோல் மண்டலம்

மேலும் நம் உடல் அங்கங்கள் அனைத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கும் அணுக்களிலும், உயிர் வழியாகச் சுவாசித்த அந்த மகரிஷிகளின் அருள் சக்தியைச் சேர்க்க வேண்டும்.
3. வாசியும் ஈசனும் மருவியே ஒன்றாகும்
நம் உயிர் ஓ என்று ஜீவனாகி, ம் என்று உடலாக மாற்றுகின்றது. அதாவது, ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம், ஓமுக்குள் ஓம்.

உயிர் வழி சுவாசித்த அந்த அருள் சக்தி உயிரால் உருவாக்கப்பட்ட நம் உடலில் உள்ள கோடிக் கணக்கான அணுக்களிலும் சேர்கின்றது. அப்பொழுது, அனைத்து அணுக்களும் உயிரைப் போன்றே ஒளியாக மாறும் சந்தர்ப்பம் வருகின்றது.
நம் உடலிலுள்ள அனைத்து அணுக்களும்
உயிருடன் ஒன்றுகின்றது.
இது பேரருளாக, பேரொளியாக மாறுகின்றது.
4. வாசியை போல்சித்தி மற்றொன்றும் இல்லையே
இப்படி, உயிர் வழியாக நம் சுவாசநிலை அமைந்து, அண்டத்திலிருக்கும் ஆற்றலை, இந்தப் பிண்டத்திற்குள் சேர்க்கும் பொழுது ஒளியின் சரீரமாகி, பல இலட்சம் ஆண்டுகளுக்கு முன் விண் சென்ற அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, துருவ நட்சத்திரமான அதனுடைய ஈர்ப்பு வட்டத்தில் வாழும் சப்தரிஷி மண்டலத்தில் இணைந்து, பிறவியில்லா நிலை என்ற நிலையை அடைய முடியும்.

உயிர் வழி சுவாசம் ஒன்றுதான் மனிதனை தெய்வீக நிலை அடையச் செய்யும். மனிதன் முழுமை அடைய இதைத் தவிர வேறு மார்க்கம் இல்லை.