ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2013

அகஸ்தியனைப் போன்று, நாமும் நம் பூமித் தாயைக் காக்க வேண்டும்

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று, அந்தத் தெற்கிலே தோன்றிய அகஸ்தியன் தான் இன்று துருவ நட்சத்திரமாக இருக்கின்றான்.
அதை நாம் பேசும் முறையில் எந்நாட்டவரும் அதைப் பெற்றால்,
அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் பூமிக்குள் படர்ந்தால்
மனிதனின் நிலைகள் தீமை அகற்றி
பூமியும் காற்று மண்டலமும் நன்றாக இருக்கும்.

ஏனென்றால், நமது பூமி எத்தனையோ நிலைகளிலிருந்து பல நல்ல சரக்குகளை எடுத்து, உயிரணுக்களை வளர்ப்பதற்கு தாவர இனங்களைக் கொடுத்து, நம்மை மனிதனாக உருவாக்கியது இந்தப் பூமித் தாய்தான்.

இதிலே பிறந்த நாம், பூமித் தாயைப் பரிசுத்தப்படுத்துவதற்கு, ஒளியின் உணர்வாகப் பெற்ற அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் அனைவரும் நமக்குள் எடுத்து, அந்த ஒளியான உணர்வலைகளை மூச்சலைகளாக இந்த பூமி முழுவதும் படரச் செய்ய வேண்டும்

எந்தத் தாயின் இதயத்தில் தோன்றினோமோ, அந்தத் தாயைத் தீங்கற்ற தாயாக நாம் உருவாக்க வேண்டும்.

ஒரு தாயின் கருவிலிருந்து பிறந்தால், அந்தத் தாய்க்குத் தீங்கு வரும் பொழுது, அந்தத் தீமையிலிருந்து தாயைக் காப்பதற்கு நாம் என்னென்ன முறைகளைச் செய்வோமோ, அதைப் போலத்தான் பூமித் தாய்க்கு நம்முடைய சேவைகள் இருத்தல் வேண்டும்.

ஆக, இதிலிருந்து உருவானவர்கள் தான் நாம் அனைவருமே. நம்மை உருவாக்கி, வளர்த்து, உணவும் கொடுக்கின்றது. இதில் நாம் எடுத்துக் கொண்ட உணர்வுக்கொப்ப நம்மை வளர்க்கின்றது.

இந்தப் பூமியிலிருந்துதான் வளர்ந்தோம் என்ற இந்த அறிவின் ஞானத்தால்,
தீமைகளை நீக்கி,
அருளைப் பெருக்கி,
இனி ஒரு பிறவியில்லை என்ற நிலை அடைவதே நல்லது.

ஏனென்றால், உயர்ந்த உணர்வுகளை எடுக்கப்படும்பொழுது, நம் பூமி அந்தச் சக்தி பெறுகின்றது. பூமியின் மண்ணுக்குள்ளும் படர்கின்றது. நம் வீட்டிலும் நாம் வாழும் இடங்களிலும் இது படர்கின்றது.

இது நமக்கும் நல்லதாகும், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லதாகும். இது நம்முடைய தலையாகக் கடமையாகும்.