ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 28, 2013

உயிர் உடலில் இல்லையென்றால், "நான்..," என்ற சொல் ஏது?

1. குருநாதர் இட்ட கட்டளை
நான் ஏதோ சொல்கின்றேன்,
நான் கல்வி அறிவு இல்லாதவன்
என்று எண்ண வேண்டாம்.

குருநாதர் காட்டிய அருள் வழியில், விண்ணுலக ஆற்றல் னைத்தும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றது.

நமது குருநாதர் எம்மிடம் சொன்னது:
அந்த உணர்வின் ஆற்றலை விண்ணிலே நீ வீசு,
உணர்வின் ஆற்றலை நீ நுகர்ந்து அறி.
அந்த உணர்வின் தன்மையை உனக்குள் வளர்த்துக்கொள்.
தீமையற்ற நிலைகளாக ஆக்கு,
தீமைகள் இருக்கும் மனிதனுக்கு, தீமைகள் நீக்க அது உதவட்டும் என்று என் குருநாதர் இட்ட கட்டளைப்படிதான் இதைச் செய்து கொண்டிருக்கின்றேன். உங்களிடத்தில் புகழ் தேவைக்கோ, பொருள் தேவைக்கோ அல்ல.

எனக்குப் பொருள் ஒன்றும் தேவை இல்லை.
புகழும் தேவை இல்லை.
நீங்கள் மகிழ்ந்திருக்கவேண்டும்.
உங்களையறியாது சேர்ந்த இருள்கள் நீங்க வேண்டும்.

உங்களின் மகிழ்ச்சியான உணர்வுகள், மற்றவர்களை மகிழ்ச்சி பெறச் செய்யும் சக்தியாக மலர வேண்டும், அதைக் கண்டு எனக்குள் மகிழ்ச்சி தோன்ற வேண்டும். இது குருநாதர் இட்ட கட்டளை.

2. “உயிர்” நம் உடலில் இருக்கும் வரைதான் எல்லா மதிப்பும் மரியாதையும்
இந்த உடல் சதமற்றது, ஆனால், நிலையாக இருப்பது உயிர்.
என்னை சாமி என்று பல பேர் கூப்பிட்டாலும்,
உயிர் சென்றுவிட்டால்.., என்னவென்று அழைப்பார்கள்?
சவத்தை எப்பொழுது அடக்கம் செய்வார்கள்என்று தான் கேட்பார்கள். 

எனக்குள் இருக்கும் உயிரைத் தான் மதிக்கின்றார்கள். எல்லோரும் உயிரைத்தான் மதிக்கின்றார்கள்,

ஆகவே, நீங்கள் இப்பொழுது உடலில் இருக்கும் உயிரை மதித்து நடந்து பாருங்கள், அந்த ஞானியின் உணர்வைச் சேர்த்துப் பாருங்கள், இந்த உடலின் தன்மை தூசியாகும்.

3. உடலை மதிக்க வேண்டும், ஆனால் பற்று வைக்கக் கூடாது
ஆனால், இந்த உடலுக்குள் நின்றுதான் மெய்ஞானியின் உணர்வை வளர்க்க முடியும். இதில் வளர்த்துத்தான் உயிருடன் ஒன்றச் செய்யமுடியும்.
உடலை மதிக்கவேண்டும்,
ஆனால், உடல் மீது பற்று வைக்கக்கூடாது.

உடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, என்னைக் கேவலமாகப் பேசிவிட்டானே, இரு, உன்னைப் பார்க்கின்றேன் என்று சொன்னால் போதும், உடலுக்கு முக்கியத்துவம் வந்துவிடுகின்றது.

அவனின் உணர்வை உங்களுக்குள் வளர்த்துக் கொள்கின்றீர்கள், அவர்கள் சொன்ன வழியில் சென்று, இந்த சரீரத்தைக் காக்கும் திறன் இழந்துவிடுகின்றீர்கள்.

இதிலிருந்து விடுபட, அந்த மெய்ஞானிகளின் அருளைப் பெற தியானித்து, தீய வினைகளை நீக்கி, மெய் ஒளி பெறும் தகுதி நீங்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்கே இதை உபதேசிக்கின்றேன். 

நீங்கள் அனைவரும் மெய்யொளி பெறும் தகுதி பெறவேண்டும் என்று ஆசைப்படுகின்றேன்,
தியானிக்கின்றேன்,
வேண்டுகின்றேன்,
பிரார்த்திக்கின்றேன்.

உங்களை அறியாது சேர்ந்த இருள் நிலையைப் போக்கிடுவீர்.
அருள் ஞானியின் அருள் ஒளியைப் பெற்றிடுவீர்,
ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் வாழ்க்கையினைப் பெற்றிடுவீர்,
மகரிஷிகளின் அருள் வட்டத்தில் இணைந்திடுவீர், 
உயிருடன் ஒன்றிய உணர்வின் ஒளியாகிடுவீர்,
என்றும் அழியா ஒளிச் சரீரம் பெற்றிடுவீர்.