ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 25, 2013

ஹரி ஓம் நமோ நாராயணா...!

1. விஷத்துக்குள் தான் அனைத்துமே வளர்ச்சி
ஆதிசேஷன் என்பது விஷம். இந்த விஷத்துக்குள் தான் அனைத்துமே வளர்ச்சி.

சாதாரணமாக, ஒரு குடம் பாலுக்குள் ஒரு துளி விஷம் பட்டவுடனே, அந்த பாலின் சத்துக்கள் செயலிழந்து விஷத்துக்குள் அடங்கிவிடுகின்றது. ஆனால், அந்தப் பாலை யார் ஒருவர் குடித்தாலும், அது மாய்த்துவிடும்.

விஷம் அதற்குள் கலந்திருந்தாலும், அதனுடன் மேலும் அதிகமான அளவில் பாலைச் சேர்க்கப்படும் பொழுது, அந்த விஷத்தின் தன்மையை, அது குறைத்து விடுகின்றது.

இவ்வாறுதான், விண்ணிலே தோன்றிய விஷத்தின் தன்மைகளுக்குள், நல் உணர்வின் ஆற்றல்களைத் தனக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்து அந்த உணர்வின் ஒளி நிலைகள் கொண்டு ஒளியாக மாறி,
விஷத்தை மாற்றி,
நல்லதை உருவாக்கும் நிலைதான்
ஆற்றல்மிக்க அணுக்களின் தோற்றம்.
         
அந்த நிலையைக் காட்டுவதற்குத்தான், “ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான் நாராயணன்” என்றார்கள். நாராயணன் என்பது சூரியன். சூரியன், விண்ணிலிருந்து வரும் விஷத்தை அடக்கி, ஒளிக்கதிராக மாற்றி, தன் உடலுக்குள் அணுகாத நிலைகள். அதை “அல்ட்ரா வயலட், ULTRA VIOLET” என்றும் சொல்கின்றோம்.
இந்தப் பிரபஞ்சம் அனைத்துமே விஷம். அதற்குள்தான் சூரியன் படுக்கையை வைத்திருக்கிறது. அதன் மேல் பள்ளி கொண்டு, மிதந்து கொண்டிருக்கின்றான் என்ற தத்துவத்தைக் காட்டுவதற்குத்தான், நச்சுத்தன்மையான பாம்பைக் காட்டி, நாராயணன் விஷத்தின் தன்மையான ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டான், என்று காட்டினார்கள்.
2. ஹரி ஓம் நமோ நாராயணா
விஷத்தின் ஆற்றலுக்குள் மிதந்து கொண்டு
பள்ளி கொண்டிருக்கின்றான், ஸ்ரீமன் நாராயணன்.
ஹரி ஓம் நமோ நாராயணா.

அதாவது, ஒளியாக நம் கண்ணிலே
புலனறிவுகளிலே தெரிவதற்கும்,   
அந்த உணர்வின் அலையே நமக்குள் இயக்கி,
நாம் அறியச் செய்யக்கூடிய ஆற்றலும்,
வளரச் செய்யக்கூடிய ஆற்றலும்
அந்த சூரியனின் ஒளிதான்.

அவ்வாறு அது வளர்ந்த பின் தான், அந்த உணர்வின் இயக்கத்தாலே, இன்று நாம் இயங்கிக் கொண்டிருக்கின்றோம். கண்ணாலே பார்க்கின்றோம், செயல்படுகின்றோம், அதை நாம் அறிவதற்கு, நாம் அதனுடன் மோதும் நிலைகள் கொண்டுதான் ஓம் -- பிரணவம் ஜீவனாகி, ஹரி ஓம்.

அந்தச் சூரியனின் ஒளி வட்டத்திற்குள் நாம் மோதி, அந்த மோதும் நிலைகள் கொண்டுதான், இந்த உடலும் நம் எண்ணமும் ஜீவனாகின்றது,

ஹரி ஓம்,. அதனுடன் இணைந்த நிலைகள் நமோ அந்த வெப்பத்தின் தன்மை நமக்குள் இருந்து அதுவாக இருந்து நமக்குள் அது இயக்கும். நமோ நாராயணா, அதனுடைய தொடர் வரிசையில்தான் நாம் சுழன்று கொண்டிருக்கின்றோம் என்ற இந்தத் தத்துவத்தை ஒரு சொல்லுக்குள் அடக்கி, அன்று மெய்ஞானிகள் தெளிவுற உணர்த்தினார்கள்.

ஆதிசேஷன் மேலே பள்ளி கொண்டான் என்று இதை யார் காட்டியது? ஒன்றுமறியாத அந்த மீனவனான வியாசன் தான் இதைக் காட்டினான். ஆக இந்த வியாசனுக்கு எங்கிருந்து இந்த ஞானம் வந்தது?

அன்று ஆதியிலே தோன்றிய மகரிஷிகள், பேரண்டத்தின் உண்மையினுடைய நிலைகளை அறிந்துணர்ந்தவர்கள். அவர்கள் சப்தரிஷிகள்.

சூரியனிலிருந்து வரக்கூடிய நிறங்கள் ஏழு. அந்த ஏழு உணர்வுகளையும் தனக்குள் அடக்கி, உணர்வின் ஒளியாக ஒளிரச் செய்து, தன் அடக்கத்திற்குள் செயல்படுத்திய அந்த ரிஷிதான் சப்தரிஷி ஏழு.

ஏழையும் தனக்குள் அடக்கி ஒளியாக இயக்கும் ஆற்றல் பெற்றது. அதிலிருந்து வெளிவரும் நிலைகள் தான் ரிஷியின் மகன் நாரதன். அந்த ரிஷித்தன்மையான நிலையில் விளையப் பெற்ற அந்த அணுவின் தன்மை, வியாசனின் உடலிலே சேர்க்கப்படுகின்றது.

அப்படி வியாசனுக்குள் சேரும் பொழுதுதான் அந்த மெய் ஒளியின் சுடரின் தன்மை அங்கே அறிய முடிந்தது.
அத்தகைய சந்தர்ப்பத்தைத்தான்,
யாம் இப்பொழுது உங்களுக்கும்
இந்தத் தியானத்தில் ஏற்படுத்துகின்றோம்.