ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 21, 2013

மகரிஷிகளின் ஆற்றலை சுவாசித்துத்தான் யாம் பெற்றோம், பாட நிலைகளில் அல்ல - ஞானகுரு

மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் எமக்கு அருளிய அந்த அருள் சக்தி கொண்டு, பல வருட காலம், பல இம்சைகளுக்கு மத்தியிலேதான் யாம் கற்றுணர முடிந்தது. ஆக,
உணர்ந்த சக்தியின் ஆற்றலை
யாம் அறிந்து கொள்ள முடிந்தது.
பாட நிலைகளிலும் அல்ல, படித்தும் அல்ல.
             
பாடங்களாலே படித்து இதை நாம் தெரிந்து கொண்டு செயல்படுவதற்கு, நமக்கு ஆயுள் பத்தாது.

நமது குருநாதர் காட்டிய அருள் வழிகொண்டு, அவர் காட்டிய அருள்நெறி கொண்டு
அந்த உணர்வின் எண்ணங்களைப் பார்த்து
இந்த உணர்வான நிலைகளை யாம் சுவாசித்து”,
எம் உடலுக்குள் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அனுபவத்தையும்
இந்த உணர்வாலே
மாற்றியமைக்கும் ஆற்றல்கள்
எவ்வாறு பெறவேண்டும்? என்று
நமது குருநாதர் காட்டிய அந்த அருள் வழி நெறியைக் கொண்டுதான்
யாம் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

எவ்வழிகளிலே, இந்த உணர்வின் ஆற்றலை யாம் பெற முடிந்ததோ,
எந்த மெய்ஞானியின் அருள் சக்தியைப் பெறமுடிந்ததோ,
அவை அனைத்தையும் நீங்கள் பெறமுடியும் என்ற இந்த நம்பிக்கையில்தான் இதை உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

அப்படி உபதேசித்து, உணர்த்தி
உங்கள் செவியின் புலனறிவை ஈர்க்கச் செய்து,
உங்கள் புலனறிவிற்குள் ஈர்ப்பதை
சத்தான உமிழ்நீராகச் சுரக்கச் செய்து,
உடலான சிவத்திற்கு அமுதாக ஊட்டி,
இந்த அமுதின் சத்தினுடைய நிலைகள்
மெய்ஞானியினுடைய அருள் சக்திகள் உங்களுக்குள் விளைந்து,
உங்களையறியாமல் உங்களுக்குள் துன்பப்படுத்திக் கொண்டிருக்கும்
உணர்வின் சக்தியினுடைய நிலைகளை மாற்றி,
அந்த மெய்வழியினுடைய நிலையை நீங்கள் சுவாசித்து,
உணர்வை ஒளியாக மாற்றி,
நீங்கள் விண் செல்லவேண்டும் என்ற அந்த ஆசையில்தான்
உங்களிடம் யாம் இதை உபதேசிக்கின்றோம்.

ஆகவே, மெய்யை நாடும் மெய் அன்பர்களே, இந்த மெய் உணர்வின் தன்மையினை நாம் பெறுவோம். மெய்ஞானியின் அருள் சக்தியினை நமக்குள் கூட்டுவோம்.
இந்த மெய் உலகான நிலையில்,
ஒளிச் சரீரம் பெறுவோம் என்று உறுதி கொண்டு,
நாம் ஒவ்வொருவரும் தியானம் இருப்போம்.