ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

July 14, 2013

யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டுக் கருக்குவதால் பலன் இல்லை - ஞானகுரு

மகிழ்வான உணர்வுகளை நாம் எடுத்துச் சுவாசிக்கும் பொழுது, அந்த நல் உணர்வின் தன்மை நம்மை மகிழச் செய்கின்றது. நம் உடலான சிவம் ஆனந்த நடனமாடுகின்றது.

ஆனால், வெறுப்பான உணர்வுகளை நாம் சுவாசிக்கும் பொழுது, ஈசனான உயிரிடம் போகும் பொழுது உயிர் எரிச்சலடைகின்றது.

அந்த வெறுப்பின் உணர்ச்சிகள் நம் உடலுக்குள் அமைந்திருக்கும் நல்ல குணமான தெய்வங்களிடம் பட்டவுடனே, அந்தத் தெய்வங்கள் துடிக்கின்றன. அவை அனைத்துமே ஒடுங்க, இந்த உடலான சிவம் ருத்ர தாண்டவம் ஆடுகின்றது, “ஹா ஹா” என்று அலறுகின்றது.

இவையெல்லாம் வடிவமைத்துக் காட்டினான் அன்று மெய்ஞானி. நம் உடலுக்குள் இயக்கும் உணர்வின் சிற்றலையின் தன்மை, நாம் எந்த உணர்வின் தன்மையை எடுக்கின்றோமோ, அதனுடைய உணர்வின் செயலாற்றல்தான் என்று மெய்ஞானிகள் தெளிவாகக் காட்டினார்கள்.

ஆனால், அதை அனைத்துமே நம்மை நாம் அறியாதபடி
எவெரோ கொடுப்பார்,
எவரோ எடுப்பார் என்ற நிலைகள் கொண்டு
பிறருக்குப் பொருள் கொடுத்து
அவரிடத்தில் நாம் பெறவேண்டும் என்று எண்ணுகின்றோம்.

அதற்காக வேண்டி, பல யாகங்கள் செய்து, அதிலே பல பொருள்களைத் தீயிலே இட்டுக் கருக்கினால் அதைப் பெறுவோம் என்ற ஆசையை ஊட்டி, நம்மைத் திசை திருப்பிவிட்டார்கள்.

யாகங்களுக்காக வேண்டிப் பணம் பெற்றவனும் நல்லதைக் கண்டதில்லை. நாமும் கண்டதில்லை.

ஆக, நல்ல உணர்வின் தன்மைகளை தீயிலே நாம் எரிப்பதைக் காட்டிலும், அதாவது, விறகுக் கட்டைக்குள் மறைந்திருக்கக்கூடிய இந்தத் தைலச் சத்தின் நிலைகள் நாம் எரித்தவுடனே, கட்டைகள் கருகி அதிலிருக்கக் கூடிய சத்துக்கள் சுடராகி, நாம் சமைக்கும் அந்தப் பொருளின் தன்மை சுவை கொண்டதாக ஆகின்றது.

இதைப் போன்று,
நமக்குள் இருக்கும் அசுத்தத்தின் தன்மையை
அதற்குள் மறைந்து ஈர்க்கும் சக்தியினுடைய நிலைகளை
நாம் எரிக்கும் பக்குவம் கொண்டு
நமக்குள் எடுக்கும் உணர்வின் தன்மையை
சரியான நிலைகளில் நாம் சமைத்து,
நமக்குள் நல் வழியின் நிலையை நாம் உருவாக்கிக் கொள்ளலாம்.
உணர்வின் தமையை ஒளியாக்கிக் கொள்ளலாம்.