ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 3, 2019

யாம் கொடுக்கும் “ஆத்ம சுத்தி...” என்ற ஆயுதத்திற்குள் மறைந்திருக்கும் ஆற்றல்களும் சக்திகளும்...!


நான் (ஞானகுரு) பேசுகிறேன் என்றால் காவிய நிலைகளிலிருந்து படித்துவிட்டுப் பேசவில்லை. குருநாதர் (ஈஸ்வரபட்டர்) காட்டி உணர்த்திய உணர்வின் நிலைகளிலிருந்தே குரு காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.

1.உன்னுடைய நல்ல உணர்வின் தன்மை எப்படி மாறுபடுகிறது...?
2.அதனின் நிலை கொண்டு உடலின் நிலைகள் எவ்வாறு இயங்குகிறது..?
3.இதிலிருந்து நீ எப்படி மீள வேண்டும் என்ற நிலையைத்தான் காட்டுக்குள் அழைத்துச் சென்று காட்டினார்.

ஆரம்பத்தில் என் மனைவியை நோயிலிருந்து எழுப்பிவிட்டு ஒவ்வொரு உண்மையையும் நேரடியாகத் தான் செய்து காட்டினார்.

1.காட்டுக்குள் அச்சுறுத்தும் இடங்களிலேயும்...
2.பெரும்பகுதி என்னை சாக்கடை... நாற்றமான பொருள்கள் இருக்கக்கூடிய இடத்திலேயும்..
3.என்னைத் தனித்திருக்கும்படியான அச்சமடையைச் செய்யும் இடங்களிலும் தான் என்னைக் கொண்டு போய் வைப்பார் குருநாதர்.

அங்கே வைத்துத் தான் அவருடைய உபதேசங்களைக் கொடுப்பார் குருநாதர்.

மிருகங்கள் இருக்கக்கூடியதைக் காட்டும் பொழுது அந்த அசுர உணர்வுகள் தாக்கப்படும் பொழுது இன் நினைவுகள் அங்கே அதன் வழி சென்றால் மெய்ப் பொருளை உன்னால் எப்படிக் காண முடியாமல் போகிறது..?

மெய் பொருளைக் காணும் நிலையில் நான் உனக்கு உபதேசித்தாலும்
1.நீ சுவாசித்த அச்ச உணர்வுகள் உனக்குள் அதை எப்படித் தடுக்கிறது...?
2.அப்பொழுது மெய்யை வளர்க்க நீ என்ன செய்ய வேண்டும்...?
3.அதை நீ எப்படிச் செயல்படுத்த வேண்டும்...? என்று தான் அங்கே வைத்துக் காட்டினார்.

அசுர சக்திகள் கொண்ட காட்டு மிருகங்கள் வாழும் இடங்களில் இந்த நினைவலைகளைப் போதிக்கும் பொழுது அவைகள் தன் உணவுக்காகத் தேடி வந்து.. தன்னைக் காத்திட.. தான் வாழ... அது என்ன செய்கிறது..? என்ற நிலையையும் காட்டுகின்றார்.

காட்டுக்குள் இருந்து நகருக்குள் வரும் பொழுது ஒரு சமயம் என்னைப் பொள்ளாச்சிக்குள் வரச் செய்தார் குருநாதர். பஸ் ஸ்டாண்டு அருகே வரும்போது வேகமாக வந்து கொண்டிருக்கும் பஸ்ஸுக்குக் குறுக்கே என்னை இழுத்துச் சென்றுவிட்டார்.

திடீரென்று அவர் விலகிக் கொண்டார். ஆனால்.. பஸ் நின்றுவிட்டது.

எப்படி “பிரேக்…” ஆனது..? என்று தெரியவில்லை. இல்லை என்றால் நாங்கள் இரண்டு பேரும் அங்கே சக்கரத்திலே நசுங்கியிருப்போம்.

அந்த மாதிரி இழுத்துக் கொண்டு போய் விபத்தில் அது எப்படி அந்த உணர்வுகள் இயக்குகின்றது…? என்று இயக்கிக் காட்டுகிறார்.

அதே சமயத்தில்…
1.ஒரு ரிமோட் கன்ட்ரோல் (REMOTE CONTROL) போல தன் சக்தியின் துணை கொண்டு
2.அது எப்படி பிரேக் போட வேண்டும்…? என்று என்னை பஸ்ஸுக்குள் வலுக்கட்டாயமாக இழுத்துத் தள்ளிவிட்டார் குருநாதர்.

அப்பொழுது பஸ்ஸில் பிரேக் எப்படி அணைக்கின்றது…? மனிதனின் உணர்வுகள் எண்ணங்களுக்கு அது எப்படி இருக்கின்றது…?

இயந்திரத்திற்குள் இருக்கக்கூடிய “மேக்னட்…!”
1.மனிதனின் உணர்வுகள் அவன் எண்ணி அங்கே பாய்ச்சப்படும் பொழுது
2.அதே உணர்வின் துணை கொண்டு இது எவ்வாறு பஸ்ஸை நிறுத்துகின்றது என்று இதை உணர்த்துகின்றார்.

ஏனென்றால் இதை எல்லாம் அனுபவபூர்வமாக எனக்குக் கொடுத்தார் குருநாதர்.

1.இதைப் போன்ற பல பல அனுபவங்கள் மூலமாகத் தீமைகளை நீக்கும் \சக்திகளைப் பெற்று வளர்த்துத் தான்
2.உங்களுக்குச் சக்திவாய்ந்த ஆயுதமாக ஆத்ம சுத்தியை வாக்காகக் கொடுக்கின்றோம்.

அந்த ஆயுதத்தை எடுத்துப் பயன்படுத்தினால் உங்கள் வாழ்க்கையில் அவ்வப்பொழுது வரும் தீமைகளை நீங்கள் தடுக்க முடியும். அதே சமயத்தில் உங்களுக்குள் அருள் சக்திகள் கூடிக் கொண்டே வரும். உங்கள் உணர்வுகளை எல்லாம் அது ஒளியாக மாற்றிக் கொண்டே வரும்.