ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 19, 2019

சொர்க்கவாசலைப் பற்றி நாம் அறிந்திருக்கின்றோமா...?


இந்த வாழ்க்கையில் வாழும் நாம் நம் குழந்தையை எண்ணி.. நான் சம்பாரித்து வைத்திருக்கின்றேன்... அவன் எனக்குப் பின்னாடி அதை என்ன செய்யப் போகின்றானோ...? சொத்தை எல்லாம் காப்பாற்றுவானா..? என்ற நிலைகளில் எடுத்துக் கொண்டால் என்ன ஆகும்...?

அவன் உணர்வை நமக்குள் வளர்த்து நாம் மடிந்த பின் அவன் நினைவாகவே வெளி வந்தால் அவன் உடலுக்குள் தான் செல்வோம்.

அங்கே சென்ற பின் உடலுடன் இருக்கும் பொழுது நாம் எப்படிக் கலக்கப்பட்டோமோ இந்த உணர்வு அவனுக்குள் இயக்கப்பட்டு
1.நாம் தேடிச் சம்பாரித்த சொத்தையும் அவன் கலக்கத்துடன் அழித்திடும் நிலை தான் வருமே தவிர
2.அவனைக் காத்திடும் நிலை வருவதில்லை.

ஆகவே கடைசியில் நாம் என்ன ஆகின்றோம்..? என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். குழந்தை மேல் இந்த மாதிரிப் பாசமாக இருந்தால் இப்படி ஒரு நிலை வந்துவிடுகின்றது.

ஆக அந்த உணர்வுக்குள் பட்ட பின் இந்த உடலில் எந்தெந்த நோய் வந்ததோ அந்த நோய் அங்கே விளையும். அந்த நோய் விளைந்த பின் அந்த உடலையும் வீழ்த்தி விடுகின்றது.

ஆனால் பத்தாவது நிலை என்றால் என்ன...?
முதலிலே சூரியன்...
இரண்டாவது உயிர் விஷ்ணு..
மூன்றாவது எண்ணங்கள் இராமன்...
நான்காவது கண்கள் கண்ணன்.

துவாராகயுகத்தில் கூர்மையாகப் பார்த்து உடலின் அமைப்பு அவதாரம் ஆகி இப்படிப் பல தீமைகளை நீக்கி நீக்கி அவதாரங்களாக மாற்றி தீமைகளை நீக்கிடும் தன்மை பெற்றவன்.

கண்கள் தோன்றிய பின் கூர்மையாகப் பார்க்கின்றது ஐந்தாவது நிலை இந்தக் கூர்மை அவதாரம்

ஆறாவது நிலை - வராகன் அந்த வலிமை மிக்க நற்சக்தி பெற்றுப் பன்றி என்ன செய்கிறது...?

1.சாக்கடைக்குள் இருக்கக்கூடிய நாற்றத்தைப் பிளக்கின்றது.
2.அதற்குள் மறைந்த நல்ல உணர்வுகளை நுகர்கின்றது.
3.பின் பன்றியின் உடலில் தொக்கியுள்ள நஞ்சினை நீக்கிவிட்டு நஞ்சினை நீக்கிடும் உணர்வுகள் விளைகின்றது.
4.அடுத்து மனிதனாகப் பிறக்கச் செய்கின்றது... பரசுராம்...! ஏழாவது நிலை. பல தீமைகளைச் சமப்படுத்தும் நிலை வருகின்றது.

பின் பலராம் (எட்டாவது நிலை) பலருடைய எண்ணங்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

அடுத்து நரசிம்மா... (ஒன்பதாவது நிலை). தீமை என்ற நிலை வந்த பின் நம் உடலுக்கு:ள் புகாது தடுத்து நிறுத்தும் நிலை தான் நரசிம்மா.

தீமைகள் நமக்குள் புகாது நாம் தடுக்கவில்லை என்றால் அதனால் நாம் எண்ணும் வேதனை என்ற உணர்வுகள் உடலுக்குள் இரண்யனாகின்றது,

ஆக இரண்யனான பின்
1.மற்றதைக் கொல்லும் நிலைகளை நாம் மாற்றி விட்டால் கல்கி.
2.இந்த உயிர் ஒளியானது. அதே ஒளியின் உணர்வின் தன்மை அந்தப் பத்தாவது நிலை ஆகும் பொழுது தான் கல்கி.
3.இந்தப் பூமியின் ஈர்ப்பை விடுத்து அது விண்ணுலகம் செல்கிறது... பறந்து செல்கிறது...
4.தன்னை எதுவும் தடுக்காது குதிரை மீது சென்று வாளை வீசித் தப்பித்துச் செல்வதாக உருவ அமைப்பைக் கொடுத்து
5.அந்த அருவத்தின் சக்திகளை நாம் எப்படிப் பெறுவது...? என்று தெளிவாக்கியுள்ளார்கள் ஞானிகள்.  

வான்வீதியில் தோன்றிய உயிர் மனிதனாக ஆன பின் இனிப் பிறவியில்லாத நிலைகள் அடைவதே கடைசி நிலை. அப்படி அடைந்தவன் தான் அகஸ்தியன் துருவ நட்சத்திரம்.

அந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் பற்றுடன் பற்றி இந்த வாழ்க்கையில் வரும் தீமைகளைப் பற்றற்றதாக மாற்றி நம் வாழ்க்கையில் அதைப் பற்றுடன் பற்றும் பொழுது அங்கே செல்கின்றோம்.

இப்படி நமக்குள்
1.மகிழ்ச்சி என்ற உணர்வு வரும் பொழுது சொர்க்கலோகம்...!
2.இதை உருவாக்குவது யார்..? உயிர்.
3.நமக்கு வாசல் எது...? உயிர்.
4.ஆகவே இது சொர்க்கவாசல்.

இந்த உடலிலே உணர்வை எல்லாம் ஒளியாக மாற்றினால் அந்த ஒளியின் தன்மை கொண்டு இந்த வாசல் வழி கொண்டு நாம் என்றும் ஏகாந்த நிலை என்ற ஏகாதசி... பத்தாவது நிலை எதுவுமே எதிர்ப்பில்லாத நிலைகள் கொண்டு ஒளியின் சரீரமாக நாம் பெற முடியும்.

இது தான் ஏகாதசி பத்தாவது நிலை என்பது.