ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 23, 2019

நாம் இயங்குகிறோமா...? பிறிதொன்றால் நாம் இயக்கப்படுகின்றோமா...? என்பது பற்றி அறிந்து கொள்ளுங்கள்


கோலமாமகரிஷி “ரிஷி நிலையை” எப்படிப் பெற்றார் என்று உணர்வதற்காக மங்களூர் அருகில் உள்ள கொல்லூரில் யாம் (ஞானகுரு) ஆறு வருடம் தியானமிருந்து வந்தோம். மழைக் காலம் வரும் பொழுதெல்லாம் அங்கே செல்வோம்.

கோள்களின் இயக்கத்தைத் தெரிந்து கொண்டவர் அதனால் தான் அவரைக் கோலமாமகரிஷி என்பது. அவர் கண்டறிந்த உண்மைகளை அறிவதற்காக குருநாதர் அங்கே என்னை அனுப்பி வைத்தார்.

இரவும் பகலும் அந்தக் கோள்களின் இயக்கங்களை அங்கிருந்து தியானித்தேன்.

இதை எல்லாம் பார்த்து அறிந்து உணர்வதற்காக வேண்டி மங்களூரில் ஒரு நண்பர் வீட்டில் தங்கியிருப்பேன். அப்பொழுது, அங்கிருந்து இன்னொரு வீட்டிற்குப் போய் வருமாறு குருநாதர் கூறினார். அங்கு போனோம்.

அந்தக் குடும்பத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. பையன் பிறந்த பின் சந்தர்ப்பத்தால் பையனுடைய அப்பாவும் அம்மாவும் இறந்து போனார்கள்.

இரண்டு பேரும் இறந்தவுடன் பையனுடைய பாட்டி என்ன செய்கிறது...? நீ பிறந்ததும் அப்பாவையும் அம்மாவையும் தூக்கி விழுங்கி விட்டாய்... நாசமாகப் போகிறவனே...! எங்கேயாவது தொலைந்து போடா...! என்று அவனைப் பார்க்கும் பொழுதெல்லாம் திட்டிக் கொண்டே இருக்கிறது.

ஆனால் அந்தப் பையனுடைய அக்காவோ... ஏன் பாட்டி...! பிறந்ததிலிருந்து அவனுக்கு என்ன தெரியும்...? அதற்காக வேண்டி அவனைத் திட்டுகிறாயே,..! என்று சொல்கிறது.

உனக்கு ஒன்றும் தெரியாது. இவன் பிறந்த நேரத்தில் தான் எல்லோரையும் விழுங்கி விட்டான்... இந்தக் கழுதையை எங்கேயாவது குப்பையில் போடு..! என்று பாட்டி பேசிக் கொண்டே உள்ளது.

இதெல்லாம் நடக்கும் பொழுது நான் அவர்கள் வீட்டிலே போய் அவர்களுடன் இருந்து கொண்டிருக்கின்றேன். அங்கே என்ன... ஏது... அது எப்படி நடக்கின்றது...? என்பதை அறிந்து கொள்வதற்காக குருநாதர் சொன்ன வழியில் அங்கே சென்று கொண்டிருக்கின்றேன்.

அங்கே சென்று அவர்களுடன் பழகிக் கொண்டிருக்கும் பொழுது இந்தப் பையன் பேசுவதும்... அந்தப் பாட்டி பேசுவதும்... இப்படியே போராடிக் கொண்டே இருந்தார்கள்.

அந்தப் பாட்டி இறந்தது. ஆனால் தன் பேத்தி மீது பற்றாக இருந்தது. ஏனென்றால் அந்தப் பாட்டி தான் குடும்பத்தை முழுவதுமாக ஆதரித்து வந்தது.
1.தன் பேத்தி மீது மிகவும் பிரியமாக இருந்ததால்
2.இறந்த பின் பாட்டியின் உயிராத்மா பேத்தியின் உடலுக்குள் வந்து விட்டது.

பேத்தியின் உடலுக்குள் பாட்டியின் உயிராத்மா சென்றபின் பாட்டி பையனை எப்படித் திட்டிப் பேசினார்களோ அதே போன்று பையனின் அக்காவும் பேசத் தொடங்கினார்கள்.

தன்னுள் பாட்டியின் உயிராத்மா இணைந்துள்ள நிலையில் தம்பியைப் பார்த்து, “தொலைந்து போகிறவனே.. எல்லோரையும் தூக்கி வாரி விட்டாய்... நாசமாகப் போடா...!” என்று சொன்னாள். அதன்படியே தம்பியை விரட்டி விட்டாள்.

இது நடந்த நிகழ்ச்சி...!

1.ஒரு உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் மற்றொரு உடலுக்குள் சென்ற பின் அது எப்படி இயக்குகிறது...?
2.உடலுடன் இருக்கும் பொழுது இந்த உணர்வுகள் மாறியதும்
3.அவர்கள் எப்படி இயங்குகின்றனர்...? என்பதை அனுபவபூர்வமாக என்னால் அங்கே அறிய முடிந்தது.

இந்த மாதிரி குருநாதர் காட்டிய வழியில் மூன்று இலட்சம் பேரைச் சந்தித்து அனுபவங்கள் பெற்ற பின் தான் உங்களுக்கு இதை எல்லாம் சொல்கிறேன்.

ஒவ்வொரு வீட்டிற்கும் பிச்சை எடுப்பது மாதிரி வேஷ்டியும் துண்டும் மட்டும் தான் போட்டுக் கொண்டு போவேன்.
1.அங்கங்கே என்ன நடக்கிறது...
2.அந்த உணர்வுகள் எப்படிச் செயல்படுகிறது...?
3.சாப அலைகள் என்ன செய்கிறது...?
4.நோயின் உணர்வுகள் எப்படி வருகிறது...? இறக்கச் செய்கிறது...? என்று
5.எல்லாவற்றையும் அறிந்து கொள்வதற்குத்தான் காட்டிற்குள்ளும் நகரத்திற்குள்ளும் குருநாதர் அனுப்பினார்.

பாட்டி இறந்த பின் அந்தப் பெண் குழந்தையிடம் நான் சொன்னேன்...!

ஏம்மா...! பாட்டி தான் உன் தம்பியைத் திட்டிக் கொண்டிருந்தது. இப்பொழுது நீ உன் தம்பியைத் திட்டுகிறாயே...! என்றேன்.

அட... நீ... போய்யா....! என்று இப்படி என்னைச் சொல்கிறது.

அந்தப் பாட்டி எப்படிச் சொல்லுமோ அதே மாதிரி என்னிடமும் “அட போய்யா...!” என்கிறது.

கூட வந்த நண்பர் அந்தப் பெண்ணிடம் “சாமியை நீ இப்படிப் பேசலாமா...?” என்று கேட்டார்.

சாமியாவது... பூதமாவது...? என்று இப்படியே “வெடுக்..” என்று பேசுகிறது. அந்த உணர்வுகள் அதே மாதிரி வேலை செய்கிறது. 

ஏனென்றால் ஒரு உடலுக்குள் இந்த உணர்வுகள் எதை வளர்த்ததோ அதே உணர்வின் செயலாக எப்படிச் செயலாக்குகிறது என்பதை யாம் அறிந்து கொள்ளவே குருநாதர் எம்மை அந்த வீட்டிற்கு அனுப்பினார்.

இன்னின்ன நிகழ்ச்சிகள் நடக்கும்... இதனுடைய நிலைகளை நீ பார்...! என்று சொல்லியிருந்தார் குருநாதர். அவர் சொன்னது போன்றே நடந்தது.