ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 10, 2012

கருவுற்றிருக்கும் தாய் நுகர வேண்டிய அருள் உணர்வுகள்


அகஸ்தியன் தாயின் கருவில் பெற்ற பூர்வ புண்ணியம்

பல லட்சம் ஆண்டுகளுக்குமுன் வாழ்ந்த, புலஸ்தியர்கள், தன் புலனறிவால் அறிந்த, விஷத்தை முறித்திடும் வேர்களையும், மூலிகைகளையும், மின்னலின் வீரியத்தைத் தணித்திடும் வேர்களையும், மூலிகைகளையும், அவர்கள் வாழும் குகைகளின்முன், வாசலில் கட்டி வைத்திருப்பதனால், விஷ வண்டுகளோ, விஷப் பாம்பினங்களோ, மிருக இனங்களோ, யானைகளோ இவர்கள் இருக்கும் பக்கம் வராது விலகிச் சென்று விடுகிறது.

விஷத்தை முறித்திடும் மணத்தை நுகர்ந்து, அவைகள் விலகிச் சென்று விடுவதால், புலஸ்தியர் குடும்பத்தினர் பயமின்றித் தூங்கி விடுவார்கள்.

இவ்வாறு, புலஸ்தியர் வம்சத்தில், பரம்பரையாக நுகர்ந்து அறியும் சக்தி பெற்றார்கள். ஆனால், இந்தப் பரம்பரையில் கணவன் மனைவியும் சேர்ந்து ஒருவருக்கொருவர், புலனால் அறிந்ததை, கணவன் தன் மனைவிக்குச்  சொல்லியும், மனைவி தனக்குத் தெரிந்ததைக் கணவனுக்குச் சொல்லியும், ஒருவருக்கொருவர் மூலிகைகளின் இரகசியங்களை அறியும் சக்தியை வளர்த்துக் கொண்டு, குகைகளில் புலஸ்தியர் குடும்பம் வாழ்ந்து வந்தார்கள், என்று குருதேவர் விளக்கமாகக் கூறினார்.

இவ்வாறு குகையில் வாழ்ந்துவரும் காலத்தில், புலஸ்தியரின் மனைவி கர்ப்பமாகின்றாள். கர்ப்பிணியின் கையில் கட்டியுள்ள விஷமுறிவு வேரின் மணத்தையும், மின்னலின் வீரியத்தைத் தடுத்திடும் வேர்களிலிருந்து வெளிப்படும் மணங்களையும், கர்ப்பிணி சுவாசிக்க நேருகின்றது. குகையில் வைக்கப்பட்டுள்ள, நோய்களைப் போக்கிடும் மூலிகைகளின் மணங்களையும், கர்ப்பிணி சுவாசிக்க நேருகின்றது.

கர்ப்பிணி நுகர்ந்த மணங்களின் உணர்வுகள், இரத்தத்தில் கலந்துவிடுவதால், அந்தத் தாயின் கருவில் வளரும் சிசுவின் உடலிலும், அது இணைகின்றது.

அதனால்,  சிசுவின் உடலில் விஷத்தை முறித்திடும் சக்தியும், நோய்களை நீக்கிடும் சக்தியும், மின்னலின் வீரியத்தைத் தணித்திடும் சக்தியும், அந்தச் சிசு பெறுகின்றது.  இதைப் போன்று கருவில் வளரும் சிசு, பத்து மாதமும் இந்தச் சக்தியைப் பெற்று வளர்கின்றது என்பதை, குருதேவர் விளக்கமாகச் சொல்லி வந்தார்.

குழந்தை (அகஸ்தியன்) பிறந்தபின், அந்தக் குழந்தையின் அருகில் ஈ, எறும்பு, மற்றும் விஷப் பூச்சிகள் வராது விலகிச் சென்று விடுகின்றன. இதைப் பார்த்த தாய், ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டே இருக்கிறாள். புலஸ்தியரும், குழந்தையைப் பார்த்து அதிசயப்படுகின்றார்.

குழந்தையின் வளர்ச்சியில், மற்ற குழந்தைகளைக் காட்டிலும், பார்வையிலும் செயலிலும் வித்தியாசமாகக் காணப்படுவதை, புலஸ்தியரும், அவர் மனைவியும் உணர்கின்றனர்.

இவ்வாறு குழந்தை வளர்ந்து வரும் பொழுது, மூன்று வயதில் ஒரு நாள் காணாமல் போய்விடுகின்றான். அவனைக் காடுகள், மற்றும் நீர் இருக்கும் இடங்கள் எல்லாம் தேடிப் பார்க்கிறார்கள், எங்கும் காணவில்லை.

கடைசியில் குழந்தையைக் கண்டுபிடித்தார்கள். ஓநாய்கள் இருக்கும் இடத்தில், ஓநாயைப் பிடிக்கப் போகின்றான், அது விலகிச் சென்று விடுகின்றது. இப்படி, அவன் செயல்களைப் பயத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்க்கின்றனர் புலஸ்தியரும், அவர் மனைவியும், இந்த நிலையில் குழந்தையைக் கூப்பிட்டு வந்துவிடுகிறார்கள். இதை எனக்குக் காட்சியாக, அதாவது, படமாகக் காணும்படி செய்தார், குருதேவர்.

புலஸ்தியர் வாழ்ந்த காலங்களில், அவர்கள் பேசிய பேச்சும், அவர்கள்  உடலில் இருந்து வெளிப்பட்ட உணர்வுகள், இன்றும் நம் பூமியில் பரவி உள்ளது. 

இந்த உணர்வுகளைத்தான் உன்னை நுகரும்படி செய்து, அன்று நடந்த நிகழ்சிகளை (பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்) காட்சியாக, படமாகக் காணும்படி செய்தது என்றார் குருதேவர்.

தினமும், குழந்தை அகஸ்தியன் வளரும் பருவத்தில், ஒவ்வொரு அற்புதச் செயல்களைச் செய்து கொண்டிருப்பான். மலை வாழ் மக்களுக்கு, நோய்களுக்கொப்ப மூலிகைகளைப் பறித்து வந்து, அதைக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவான்.

காட்டுக்குள் போகும்போது தனியாகப் போவான், வரும்போது ஏதாவது விஷப் பாம்பைப் பிடித்து வருவான், அதை வைத்து மற்ற குழந்தைகளுக்கு வேடிக்கை காட்டுவான். பின் அதைக் காட்டில் விட்டு வந்து விடுவான் என்று குருதேவர் விளக்கமாகச் சொல்லி, காட்சியாகவும் காணச் செய்தார்.

அகஸ்தியன், நான்கு வயதுக் குழந்தைப் பருவத்தில், ஒரு செடியில் இருந்து வெளிப்படும் மணத்தை நுகர்ந்து அறிகின்றான், மாறுப்பட்ட செடியின் மணத்தையும், நுகர்ந்து அறிகின்றான்.  இரு மணத்தின் உணர்வுகள் சேர்ந்து, தன் உடலின் உணர்ச்சிகள் எப்படி இயக்குகின்றது என்று,  தன் அகத்தின் இயக்கத்தை அறிவாக உணர்கின்றான்.
  
கருவுற்றிருக்கும் தாய் நுகர வேண்டிய அருள் உணர்வுகள்
குருநாதர், காடு மேடாக எம்மை அழைத்துச் சென்றார். அன்றைய காட்டுவாசிகளான அகத்தியரின், தாய் தந்தையரின் காட்டு வாழ்க்கைகளையும், அங்கே உணர்த்தினார், குருநாதர்.

காட்டுவாசிகளான அகத்தியரின், தாய் தந்தையர் ஆங்காங்கு, எந்த உயிரினங்கள் அதிகமாக அங்கே வசிக்கின்றதோ, அதற்குத்தக்க பச்சிலைகளை  அரைத்து, தங்களுடைய உடலில் பூசிக் கொள்வதை பழக்கமாக மேற்கொண்டனர். அவர்களுடைய உடல்களில் இருந்து வெளிப்படக்கூடிய, மூலிகைகளின் மணத்தை முகரும் விஷ ஜந்துக்களோ, கொடிய மிருகங்களோ, அவர்களின் அருகில் வருவதில்லை.

அவர்கள் பூசிய மூலிகைகளின் மணம், தங்களை மிருகங்களிலிருந்தும், விஷ ஜந்துக்களிடமிருந்தும் காப்பதாக எண்ணினார்கள். ஆனால், அவர்களுடைய உடல்களில் பூசிக் கொண்ட மூலிகைகளின் மணம், அவர்களிடம் வரும் விஷத்தை அடக்கும் சக்தியாக இருந்தது.

இந்த நிலையில், அவர்கள் காலையில் சூரியனை உற்றுப் பார்த்து, சூரியனின் காந்த புலன்களை, தங்களுக்குள் கவரும் சந்தர்ப்பம் அவர்களுக்குக் கிடைத்தது. 

காரணம், அக்கால மக்கள், சூரியனை தங்களுடைய கடவுளாக வணங்கினார்கள். மற்ற உயிரினங்களுக்கு, வெளிச்சம் ஆகாது. ஏனென்றால், பெரும்பாலும் உயிரினங்கள் இரவில்தான், தங்களுடைய இரையைத் தேடும். சூரியனின் ஒளியைக் கண்டதும், தங்களுடைய இருப்பிடங்களுக்குத் திரும்பிவிடும்.

ஆகையால்,  அந்தக்கால மக்களுக்கு, சூரியன் தங்களுக்கு பாதுகாப்பு தருவதாகக் கருதி, சூரியனைக் கடவுளாக வணங்கினார்கள்.

ஆக, அந்தக் காட்டுவாசிகள், தங்களுடைய உடலில் பூசிக்கொண்ட மூலிகை முலாம்களால், இவர்கள் சூரியனை, நேரடியாகப் பார்க்கும் தன்மை பெற்றார்கள்.  நேரடியாக சூரியனைப் பார்க்கும் பொழுது, அவர்களுக்கு கண்கள் கூசுவதில்லை.

இதன்வழி கொண்டு, பிரபஞ்சத்தில் உருவாகின்ற உணர்வுகளையும், கோள்கள் நஞ்சின் தன்மைகளை வெளிப்படுத்துவதையும், நட்சத்திரங்கள் நஞ்சின் தன்மைகளை உமிழ்வதையும், இவர்கள் உடலில் உள்ள, விஷத்தன்மையால், அறியும் ஆற்றல் பெறுகின்றார்கள், என்ற நிலையை குருநாதர் தெளிவாக எமக்குக் காண்பித்தார்.

காட்டுவாசிகளின் நிலையில், பெண்கள் தாம் கர்ப்பமாக இருக்கும்பொழுது, கரு உருவானபின், தொண்ணூறு நாட்களுக்குள், இத்தகைய முலாம்களை பூசிக் கொள்ளும் பொழுது, அவர்கள் விஷத் தன்மையை அடக்கும் வாசனையை நுகர்கிறார்கள் அப்படி, பெண்கள் விஷத்தன்மையை அடக்கும் வாசனையை நுகர்வதால், அந்த பெண்களின் கருவில் விளையும் சிசுக்களிடத்தில், விஷத்தன்மையை அடக்கும் சக்தி விளைகின்றது.

      உதாரணமாக, ஒரு பெண் கர்ப்பம் உருவாகி, தொண்ணூறு நாட்களுக்குள், கர்ப்பமான பெண்ணை ஒரு தேள் கொட்டிவிட்டால், அந்தத் தேளின் விஷம், பெண்ணின் கருவிலிருக்கும் சிசுவினிடத்தில் இணைந்துவிடும். அந்தக் குழந்தை பிறந்தபின், தேளைக் கையில் எடுத்தால், தேள், அந்தக் குழந்தையை ஒன்றும் செய்யாது. கொட்டாது, கொட்டினாலும், தேளின் விஷம்குழந்தையைப் பாதிக்காது.

இது போன்ற நிலைகள் கொண்டு,  அகத்தியரின் தாய் தந்தையர் பெற்ற உணர்வுகள், தாயின் கருவிலிருந்த சிசுவினிடத்தில் பதிவானது. தாய் தந்தையர், கொஞ்சம்தான் கண்டார்கள். ஆனால்,  கருவிலிருந்த சிசுவினிடத்தில், வீரிய சத்தாக உருவானது.

அகத்தியரின் தாய் தந்தையர், தங்களிடத்தில் பெற்ற விஷத்தன்மை அடக்கும் சக்தியைக் கொண்டு, சூரியனிலிருந்து வெளிப்படும், விஷத்தன்மைகளை, அவர்கள் உற்றுப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

ஒரு விஷம், எவ்வளவு தூரம் வேகமாக ஊடுருவி செல்கின்றதோ, அதைப்போன்று, அவர்களுடைய உடலில், விஷத்தை அடக்கும் சக்தி பெற்றதால், எண்ணங்களை, விண்ணை நோக்கிச் செலுத்தி, கண்ணால் ஈர்த்து,  வெகு தொலைவில் இருப்பதை, அறியும் ஆற்றல் பெற்றார்கள்.

இதன்வழி கொண்டு அகத்தியரின் தாய் தந்தையர், நட்சத்திரங்கள் எவ்வாறு இயங்குகின்றது? நட்சத்திரங்கள் எப்படி, பிற மண்டலங்களிலிருந்து, தன் உணவை எடுத்துக் கொள்கின்றது? தன் உணர்வை, பிரபஞ்சத்தில் எப்படி பரப்புகின்றது? அதைக் கோள்கள், தனக்குள் எப்படி எடுத்து, தங்களை வளர்த்துக் கொள்கின்றன? அதை சூரியன் எவ்வாறு கவர்கின்றது?  என்ற பேருண்மைகளைக் கண்டுணர்ந்தார்கள்.

இப்படி அகஸ்தியனின், தாய் தந்தையர் பெற்ற உணர்வுகள், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் சிசுவினிடத்தில் பதிவானது. அகஸ்தியரின் தாய் தந்தையர், சிறிதுதான் கண்டார்கள், ஆனால், கருவிலிருந்த சிசுவிற்கு, வீரிய சத்தாக உருவானது.

அகஸ்தியரின் தாய் தந்தையர், விஷத்தை அடக்கும் மூலிகைகளை தங்களது உடலில், முலாமாக பூசிக் கொண்டதால்,  அந்த விஷத் தன்மைகள், இவர்களது உடலிலுள்ள நல்ல அணுக்களை, சிறிது சிறிதாக கொல்லத் தொடங்கியது. ஆனால்,  கருவிலே இருக்கும் சிசுவினிடத்தில் விஷத்தை அடக்கும் ஆற்றலாக வளர்ந்தது.

பத்து மாதங்களானபின், குழந்தை பிறந்தது. எப்பொழுதும், குழந்தைகள் பிறந்தவுடன், மேல் நோக்கிதான் பார்க்கும். அப்படி, அந்தக் காட்டில், குழந்தையைப் படுக்க வைக்கப்படும் பொழுது, அந்தக் குழந்தை, வானில் தாய் தந்தையர், எதனின் உணர்வுகளைப் பார்த்தனரோ, எதனின் உணர்வுகள், கருவில் சிசுவாக இருந்தபோது பதிந்ததோ, அதனின் நினைவாற்றல் அந்தக் குழந்தையை, விண்ணையே பார்க்க வைக்கின்றது.

ஆனால், பிறமண்டலங்களிலிருந்து வரக்கூடிய நிலைகளை, நட்சத்திரங்கள், பால்வெளி மண்டலங்களாக மாற்றுவதும், துகள்களாக மாறுவதையும், கோள்கள் அதை கவர்வதையும், காண்கின்றது, அந்தக் குழந்தை.. ஆனால், உணரும் தன்மை இல்லை. காட்சிகளைஉணர்வுகளாக உணரும் தன்மைசிறிது சிறிதாகவருகின்றது. 

இவ்வாறு, அந்தக் குழந்தை வளர்ச்சி பெற்று வரும் வேளையில், அவருடைய தாய் தந்தையர், தங்களுடைய உடலில் சேர்த்துக் கொண்ட விஷத்தை அடக்கும் ஆற்றல்கள், அவர்களை மனிதனாக உருவாக்கிய அணுக்களை, முழுமையாகக் கொன்றுவிடுகின்றன.

ஆகையால், இந்தக் குழந்தை பிறந்ததிலிருந்து தானாக வளரத் தொடங்குகிறது. குழந்தை ஐந்து வயது வரப்படும்பொழுது, விண்ணுலக ஆற்றலை, சொல்லாகச் சொல்லும் தன்மை பெறுகின்றது. 

அதன் தொடர்பு கொண்டு, விண்ணுலக ஆற்றல்களைக் கண்டுணர்ந்து, தமக்குள் பெற்று, உலகுக்கு வெளிப்படுத்திய முதல் மனிதராக, அகஸ்தியர் உருவானார்.