ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 9, 2012

துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை நமக்குள் இணைக்கும் நிலை


1. முப்பெரும் காண்டங்கள்
முக்காலத்தையும் அறிந்த ஞானிகள், “முந்தைய செயலால் இன்றைய மனித சரீரம்என்று பெற்ற மனிதனின், இன்றைய செயல், எப்படி இருக்க வேண்டும்? என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, உயிரணுவின் வளர்ச்சியைக் காண்டங்களாகப் பிரித்தார்கள்.

அறுபது வருடம், ஒரு காண்டம். இந்த அறுபது வருடங்களில், ஊர்வன, பறப்பனவாகப் பல கோடி சரீரங்களைப் பெற்று, இன்று உயிர் மிருக நிலைகளிலிருந்து, மனிதனாக உருவாக்கிய நிலைகள் கொண்டது, ஒரு காண்டம். இது முதல் காண்டம்.

அறுபது நொடிகள் கொண்டது, ஒரு நிமிடம். அறுபது நிமிடங்கள் கொண்டது, ஒரு மணி என்று கணக்கிடுகிறார்கள். இராகு, கேது போன்றவைகள், விஷத்தன்மையால் இயங்குவது என்பதைக் காரணம் காட்டி, அவைகளை ஒதுக்கி விட்டு, மற்ற கிரகங்களின் பெயர்களை, நாட்களுக்குச் சூட்டி, ஏழு நாள் கொண்டது, ஒரு வாரம் என்றார்கள். மற்றும் 27 நட்சத்திரங்களின், அடிப்படையில் மாதங்களை வைத்தனர்.

இதனின் அடிப்படையில், பிற்காலத்தவர்கள் தங்கள் மதங்களுக்கு ஏற்றவாறு, சட்டங்களையும், சாஸ்திரங்களையும் மாற்றிக் கொண்டார்கள். 27 நாட்களைக் கூட்டி, வருடங்களாகவும், வருடங்கள் முடியும் பொழுது, எதில் தொடங்கியதோமறுபடியும் அதிலிருந்தே தொடங்குகின்றது.

இவ்வாறு, இந்த அறுபது வருடங்களில், உயிரில் உணர்வின் மாற்றங்கள் விளைந்து, மனிதனாகும் நிலை பெறுவதை, முதல் காண்டமாக உணர்த்தி, இந்த மனித சரீரத்தில் வாழ்கின்ற வாழ்க்கையை, இரண்டாவது காண்டமாகக் காண்பித்தனர், ஞானிகள்.

யானையின் சிரசை மனித உடலில் பொருத்தி, மிருக நிலையிலிருந்து மனித சரீரத்தைப் பெற்றோம் என்று, இதை முதல் காண்டமாகக் காண்பித்து, வினைகளுக்கெல்லாம் நாயகனாக, விநாயகனாக, மனித சரீரத்தை உருவாக்கியது உயிர்.

மனித உடலில் கணங்கள் அனைத்தையும் இயக்குவது, உயிர்தான். கணங்களுக்கு அதிபதியாக இருப்பதும், உயிர். இந்த உயிரால், அனைத்தையும் செயலாக்கும் ஆற்றலாக, மனித உடலைப் பெற்றோம் என்பதை, விநாயகர் தத்துவம் மூலம் நமக்கு நினைவுபடுத்தி, நிகழ்காலமான இந்த இரண்டாவது காண்டத்தில்தான், மனிதன் தீமைகளை வென்று, உணர்வினை ஒளியாக்கும் திறனைப் பெற்றிருக்கிறான், என்று உணர்த்தினார்கள் ஞானிகள்.

மனித உயிரான்மா, அழியா ஒளிச்சரீரம் பெறுவது மூன்றாவது காண்டம். அது என்றும் நிலையானது. காலவரம்பற்றது. 

ஆக, இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று, முக்காலங்களையும் ஞானிகள் நமக்குக் காண்பித்து, ஐந்து புலனறிவு, ஆறாக இயங்கும், இந்த மனித சரீரத்தைப் பெற்றிருக்கின்றோம், என உணர்த்தியுள்ளார்கள்.

நன்மை, தீமைகளை அறிந்துணர்ந்து, தீமைகளை அகற்றி, நன்மைகளைப் பெருக்கிடும் நிலைகள் கொண்டது, நமது நிகழ்காலம் எனக் காண்பித்து, ஆறு புலனறிவு கொண்ட நிகழ்காலத்திலிருந்து, மீண்டும் ஐந்து புலனறிவு கொண்ட உயிரினப் பிறவிக்குச் சென்றிடாமல், ஏழாவது நிலையான உயிருடன் ஒன்றும் உணர்வினை, ஒளி பெறும் உணர்வாகச் சேர்த்து, சப்தரிஷி என்ற நிலை பெறுவதே, மூன்றாவது காண்டம் என உரைத்தனர் ஞானிகள்.

ஞானிகள், இப்புவுலகில் வாழ்ந்த காலத்தில், விண்ணின் ஆற்றலை தனக்குள் சேர்த்து, உணர்வினை ஒளியாக மாற்றி, இரண்டாவது காண்டத்தை நிறைவு செய்து, மூன்றாவது காண்டமாக, சப்தரிஷி மண்டலங்களாக, வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளார்கள்.

அவர்களிடமிருந்து வெளிப்படும் உணர்வின் அலைகள், இன்றும் நமது பூமியில், படர்ந்து, பரவிக் கொண்டுள்ளன. அதனை நாம் கவர்தல் வேண்டும். ஆகவே, முந்தைய செயல் இன்றைய சரீரம், இன்றைய செயல் நாளைய சரீரம் என்பது ஞானிகள் உணர்த்தியது.

நிகழ்காலமான இரண்டாவது காண்டத்தில், மனிதச் சரீரத்தில் இருக்கும் பொழுது நமது வாழ்க்கையின் நிலைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற நிலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த இரண்டாவது காண்டத்தில், நமக்கு அறுபது வயது ஆகிவிட்டால், “மணி விழா” கொண்டாடுகின்றோம். மனிதனாகப் பிறந்து வளர்ந்து, அறுபதாவது வருடத்தைத் தொட்டுவிட்டோம் என்றுதான், மகிழ்ந்து விழாவாகக் கொண்டாடுகின்றோம்.

ஆனால், இந்த அறுபதுக்குள் எத்தனை வேதனைகளை, எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்போம். குழந்தைகளை ஈன்று, அவர்கள் வாழ்க்கைக்கு வழியமைத்து, அவர்களை நல்நிலைக்கு கொண்டு வருவதற்கு எத்தனை பாடுபட்டிருப்போம்.

ஆனால், அந்த குழந்தைகளில் ஒருவர் வளர்ந்து, வாலிப வயதில் தவறான வழியில் செல்லும்பொழுது, அவரைத் திருத்துவதற்காக, அவருடைய தவறுகளைச் சுட்டிக் காட்டி, கண்டிக்க முற்பட்டால் போதும், அவர் உடனே நம்மை எதிர்த்து, “நீ ஏன் என்னைப் பெற்றெடுத்தாய், நான் கேட்பதைச் செய்து கொடு” என்று சண்டைக்கு நிற்பார். இத்தகைய சோதனைகளை எல்லாம், நமது அறுபதிற்குள் சந்தித்திருப்போம்.

வேதனைகளையும், சோதனைகளையும் கடந்து, அறுபதைத் தொடும்பொழுது அதை விழாவாக, எல்லோரும் கொண்டாடி போற்றுகின்றனர்.

“குழந்தைகளைக் காத்து வளர்ப்பது, அவர்களுக்கு நல்லறிவை ஊட்டுவது, கல்வி மற்றும் தொழில்களை அமைத்து கொடுப்பது, திருமணம் செய்து வைப்பது” போன்ற தன்னுடைய  கடமைகளை முடிக்கும்பொழுது வயது அறுபது ஆகிவிடுகின்றது.

அடுத்த காண்டத்திற்கு வரும்பொழுது, நாம் எப்படித் தீமைகளை நீக்க வேண்டும்? எந்த வழிமுறையினை நாம் பின்பற்ற வேண்டும்? என்பதை அறிந்துணர்ந்து, நாம் மூன்றாவது காண்டத்திற்கு வரவேண்டும். மூன்றாவது காண்டத்திற்கு எப்படிச் செல்ல வேண்டும்? என்பதைத்தான், விநாயகர் தத்துவத்தின் மூலம் உணர்த்தியுள்ளார்கள், ஞானிகள்.

விநாயகர் தத்துவத்தில், “முந்தைய செயல்களால் இன்றைய சரீரம், இன்றைய செயல்களால் நாளைய சரீரம்” என்பதை உணர்த்தி, மனிதனின் ஆறாவாது அறிவின் தன்மை, மனிதரிடத்தில் நன்மை, தீமைகளை உணர்த்தி, தீமைகளை அகற்றி, நன்மைகளைப் பெருக்கிடும் ஆற்றல் கொண்டது.

ஆகையால், முருகன் என்பது ஆறாவது அறிவு. “முருகு” என்பது எதையும் மாற்றியமைக்கும் தன்மை வாய்ந்தது. மனிதர்கள் தமது ஆறாவது அறிவின் துணை கொண்டு, எதையும் உருவாக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பதை, ஞானிகள் நமக்கு உணர்த்துகின்றனர்.

நமது மனித வாழ்க்கையில், தனக்குள் விண்ணின் ஆற்றலைப் பெற்று, வளர்த்து, இன்று ஒளிச்சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், சப்தரிஷிகளின் அருள் உணர்வுகளை நம்முள் சேர்த்து, நம்மில் உள்ள நஞ்சினை நீக்கி, உயிருடன் ஒன்றும் உணர்வினை ஒளியின் உணர்வாகச் சேர்க்கும் நிலையை, நமக்கு அமைத்துக் கொடுத்தார்கள் ஞானிகள்.

இந்த நிகழ்காலத்தை, மனிதச் சரீரத்தில் வாழும் காலத்தை இரண்டாவது காண்டம் என்று கூறினாலும், இந்த மனிதச் சரீரத்தில் வாழும் காலத்தில், மற்றொரு காண்டமும் வருகின்றது.

இரண்டாவது காண்டமான, இந்த மனித வாழ்க்கைக் காலத்தில், அறுபது வயதிற்குள், குடும்பப் பாரம் என்று ஏராளமான சோதனைகள், கொடுக்கல், வாங்கல் போன்ற நிலையில் ஏராளமான நஷ்டம், உடலில், நோயின் வேதனை போன்றவைகளால், மனிதரிடத்தில் வேதனைகள் சூழ்ந்து விடுகின்றது. 

அறுபது வயதில், குடும்பப் பொறுப்புகள் முழுமையானபின், வேதனை, வெறுப்பு, குரோதம் போன்றவைகளை மறந்து, எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற உணர்வுக்கு நாம் வரவேண்டும்.

ஆனால், நாம் அறுபதைத் தொட்டு, மணி விழாவைக் கொண்டாடி அமரும் பொழுது, நமது உயிரை மறந்துவிடுகின்றோம். ஆரம்பத்திலிருந்து பாசத்துடன் வளர்ந்த, வளர்த்த உணர்வுகளை எண்ணி, “நான் அந்தக் காலத்தில் உழைத்துச் சம்பாதித்தேன், “இப்படிச் சம்பாதித்தேன், அப்படிச் சம்பாதித்தேன்என்று பழங்கதைகளைப் பேசி, அதனின் உணர்வை வளர்க்கும் பொழுது, அசுரச் சக்திகளே நமக்குள் வளர்கின்றன.

இது போன்ற நிலைகளிலிருந்து, மனிதர்கள் மீள வேண்டும். ஆக, மனிதன் மூன்றாவது காண்டமாக, மகரிஷிகளின் அருளுணர்வைத் தனக்குள் சேர்த்து, உடலை விட்டு உயிரான்மா பிரிந்தால், அடுத்து, பிறவியில்லா நிலையை அடைய வேண்டும், என்று ஞானிகள் தெளிவாக, மூன்று காண்டங்களையும் காண்பித்துள்ளார்கள்.

வெப்பம், காந்தம், விஷம் என்பதும் மூன்று காண்டம்தான். மூன்றும் ஒன்றாகச் சேர்த்து, இயக்கச் சக்தியின் அணுவாக மாறுகின்றது. நமது உயிர், புழு முதல் கொண்டு பல்வேறு சரீரங்களைப் பெற்று, இன்று மனித சரீரத்தைப் பெற்றாலும், இந்த மனித சரீரத்தில், இருள் நீக்கிப் பொருள் காணும் நிலையாக, நமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டால்தான், நமது உயிரான்மா ஒளியின் தன்மை பெறும்.

மகரிஷிகளின் அருள் உணர்வை, நாம் கவர்ந்து, நமக்குள் ஒளிச் சுடராக மாற்றும் நிலையைத்தான், நமது இன்றைய செயல்களாக அமைத்து, நாளைய சரீரமாக, நமது உயிரான்மாவை, ஒளிச் சரீரம் பெறச் செய்யவேண்டும்.

      2. நம் உயிரின் இயக்கம்
நாம் எண்ணியவற்றை, நாம் நுகர்ந்ததை நமது உயிர் நம் உடலுக்குள் இணைக்கின்றது,  நமது உயிர் எலெக்ட்ரிக், நாம் நுகரும் உணர்வுகள் நமது உயிரில் மோதி, எலெக்ட்ரானிக்காக இயங்குகின்றது . 

அதாவது, நாம் நுகர்ந்த உணர்வுகள், நம்முள் எலெக்ட்ரிக், எலெக்ட்ரானிக் என்ற நிலையில், நம் உடலை இயக்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

அப்படிப்பட்ட நம் உயிர், உடலில் புருவ மத்தியில் இருந்து, இயங்கிக் கொண்டுள்ளது. நமது உயிர் ஒன்றுதான், நமக்குச் சொந்தமானது. இந்த உடல் உயிரால் உருவாக்கப்பட்டதுதான். நமது உயிர், நாம் நுகரும் உணர்வுகளை (நாம் சுவாசிக்கும் உணர்வுகள்) அணுவாக உருவாக்கிக் கொண்டே உள்ளது, அந்த அணுவின் மலம்தான் உடலாகின்றது.

உயிர் சந்தர்ப்பவசத்தால்,  உடலை விட்டுப் பிரியும் நேரம்,  உடல் தான் இறக்கின்றது. உயிர் பரமாத்மாவில் (பூமியின் காற்று மண்டலத்தில்) கலந்து, சேர்த்துக் கொண்ட உணர்வுக்கொப்ப, மறு உடல் பெறுகின்றது. உணர்வுகள் அழிவதில்லை, உணர்வுகள் மாறிக்கொண்டேதான் உள்ளது. ஆனால், உயிர் என்றுமே அழிவில்லாத இயக்கம். அதை அறிந்து, புரிந்து, உணர்ந்து, முதல் பாடமாக நமக்குள் பதிய வைத்துக் கொண்டால்தான், மற்ற பாட நிலைகள் தெளிவாகும்.

  3.மகரிஷிகள், ஞானிகள் பெற்ற நிலை
உயிரின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் இயக்கத்தை அறிந்தவர்கள், அணுவின் ஆற்றலைப் பெற்றவர்கள், உயிரோடு ஒன்றி ஒளியின் சரீரம் பெற்றவர்கள்தான், நமது மெய்ஞானிகள். அவர்கள் அனைவரும், நம்மைப் போன்று, இந்த பூமியில் மனிதர்களாக வாழ்ந்தவர்கள் தான்.


அவர்கள், தம் உணர்வுகள் அனைத்தையும் உயிரோடு ஒன்றச் செய்து, ஒளியாக மாற்றி, அழியாத நிலையாக, வேகா நிலை என்னும் நிலை அடைந்து, என்றும் பதினாறு என்று, கணவன் மனைவி இரு உயிரும் ஒன்றி, ரிஷி, ரிஷிபத்தினி என்று குடும்பங்களாக, ஒளி உடல் பெற்று, இன்றும், நம் பூமியின் வடக்குப் பகுதியில், விண்ணிலே துருவ நட்சத்திரமாகவும், அதைப் பின்பற்றியவர்கள் முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்கள் என்ற நிலையில், சப்தரிஷி மண்டலங்களாகவும், ஏகாந்த நிலைகள் கொண்டு, மகிழ்ந்து மகிழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

        4. நாம் அடைய வேண்டிய நிலை

மனிதனாகப் பிறந்தவர்கள் நாம் அனைவரும், அடைய வேண்டிய எல்லை சப்தரிஷி மண்டலம்தான். இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல. நம் உயிர்தான், நமக்குச் சொந்தமானது. இந்த உடலுக்காக வாழாமல், நம் உயிருக்காக, நாம் வாழ்ந்தோமென்றால், நம் பூமியில் வாழ்ந்த நம் முன்னோர்களான, மெய்ஞானிகளும், மகரிஷிகளும், தங்கள் வாழ்க்கையில் வந்த தீமைகளையும், இன்னல்களையும் எப்படி நீக்கினார்களோ, அந்த இயற்கையின் வழியில், நாமும் வாழலாம்.

இன்றைய விஞ்ஞானத்தின் பேரழிவிலிருந்து, நம்மைக் காக்கலாம், நம் குடும்பத்தைக் காக்கலாம், நம் ஊரைக் காக்கலாம், நம் நாட்டைக் காக்கலாம், உலக மக்கள் அனைவரையும் காக்கலாம், நம் தாய் பூமியைக் காக்கலாம், இந்த பிரபஞ்சத்தையே ஒளிமயமாக்கலாம். இதுதான் மனிதனின் வீரியத்தின் உண்மை,


அகண்ட அண்டத்திலே உருவான படைப்புகளிலேயே, உயரிய படைப்பான, மனிதன் ஒருவனுக்குத் தான், இத்தகைய நிலை பெறக் கூடிய தகுதி உண்டு. இதுவெல்லாம், நம் மகரிஷிகள் கண்ட பேருண்மைகள். 


         5. தியானம் என்றால் என்ன?

இலட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர், ஞானிகள், மகரிஷிகள் தங்கள் உடலில் விளைய வைத்த, ஆற்றல் மிக்க அருள் சக்திகள் சூரியனின் காந்தப் புலனறிவால் கவரப்பட்டு, இன்றும், நமக்கு முன்னால், இந்த பூமியில் சுழன்று கொண்டுள்ளது. அந்த அருள் சக்திகளை, நாம் பெறும், நமக்குள் சேர்க்கும் சந்தர்ப்பமே தியானம்.

மேலும் அந்த மகரிஷிகள் தங்கள் புலன்களாலே பல நறுமணமான மணங்களை தங்களுக்குள் சேர்த்து, அதை சமைத்து, விளைய வைத்து, வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த அருள் மகரிஷிகளின் மணங்களை, நமக்குள் நுகரும் சந்தர்ப்பமும், இந்த தியானம்தான்.

நம்மிலே பலர், தியானம் என்றாலே, மனதை ஒருநிலைப்படுத்த முடியவில்லை (concentration), என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால், மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காகவும், அதன் மூலமாக தீமைகளை நீக்கிடும் ஆற்றல் மிக்க சக்திகளை நமக்குள் வளர்ப்பதற்காகவும் தான், நாம் தியானமே செய்கின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும், இந்த தியானத்தையும் ஆத்ம சுத்தியையும், நமது வாழ்க்கையில் நாம் எப்பொழுதெல்லாம் தீமையான உணர்வுகளை சந்திக்கின்றோமோ, பார்க்கின்றோமோ, கேட்கின்றோமோ, அப்பொழுது கண்டிப்பாகச் செய்ய வேண்டும். அப்படிச் செய்து, அவ்வப் பொழுது நமக்குள் சேரும் தீமைகளைத் துடைக்கும் நிலைதான், இந்த தியானம்.

இவ்வாறு, தொடர்ந்து நாம் தியானித்து வரும் பொழுது, அந்த மகரிஷிகள்பெற்ற ஆற்றல் மிக்க சக்திகள், நமக்குள் சிறுகச் சிறுகச் சேரும். நம் வாழ்க்கையையே தியானமாக்கும் பொழுது, அகண்ட அண்டத்தில் வரும், எத்தகைய தீமைகளிலிருந்தும் நாம் விடுபட முடியும். பிறவியில்லா நிலை அடைய முடியும். 

        6. தியானிக்கும் முறை
“ஓம் ஈஸ்வரா குருதேவா” என்று, புருவ மத்தியில் உள்ள, நம் உயிரான ஈசனை வணங்க வேண்டும். பின், தாய் தந்தையரை முதல் தெய்வங்களாக வணங்க வேண்டும்.

அடுத்து, இந்த அருள் வழியில் நம்மை அழைத்துச் செல்லும், நமது ஞானகுரு, சற்குரு, சாமியம்மா அருளாசி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் எண்ணி ஏங்க வேண்டும். 

பின், ஞானகுரு நம்மில் ஆழமாகப் பதிவு செய்துள்ள, அருள் ஞானிகளின் அருள் உணர்வை, எண்ணி ஏங்கி, கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, நினைவை துருவ நட்சத்திரத்தின்பால் விண்ணை நோக்கி செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவேண்டும் என்று வலுவாக எண்ணி ஏங்க வேண்டும். 

இவ்வாறு, வலுக்கூட்டிய இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் ஊடுருவிச் செலுத்தி,  நமது கண்களின் காந்தப் புலனறிவால், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கவர்ந்து, ஈர்த்து,  உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து, உயிர் வழி நுகர வேண்டும். 

இப்பதிவின் துணை கொண்டு, மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி, ஏக்கமான நிலையில், அது என் உடல் முழுவதும் படர்ந்து, என் இரத்த நாளங்களில் கலந்து, என் உடலில் உள்ள ஜீவ ஆன்மா, ஜீவ அணுக்கள், என் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என எண்ணி,  நம் உடலுக்குள் அலை அலையாகப் படரச் செய்யவேண்டும்.

மனிதராகிய நாம், நமக்குள் துருவ நட்சத்திரத்தின் உணர்வை முழுமையாக அறிந்துணரவேண்டும். துருவ நட்சத்திரத்தின் உணர்வை, நன்கு ஆழமாகப் பதிவாக்கிக் கொள்ள வேண்டும். இதனை, துருவ தியானத்தின் மூலமே பெற முடியும். அத்தகைய துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளை,

நாம் நமக்குள் ஆழமாகப் பதிவு செய்து, நம் உடலுக்குள் உள்ள அனைத்து அணுக்களுக்கும், உணவாகக் கொடுக்கும் பொழுது, எத்தகைய நஞ்சான உணர்வுகள் வந்தாலும், அதை அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள், ஒளியின் சுடராக மாற்றிவிடும் 
        7. உயிர் வழி தியானம்
அகஸ்தியன் துருவனாகி, துருவ மகரிஷியாகி, கணவனும் மனைவியும் வசிஸ்டரும் அருந்ததியும் போன்று வாழ்ந்து, சாவித்திரியைப் போன்று இரு மனமும் ஒரு மனமாகி, நளாயினியைப் போன்று ஒருவரை ஒருவர் மதித்து நடந்து, அவர்கள் வாழ்க்கையில் இருளை வென்று, ஒளி என்ற உடலைப் பெற்று, இன்றும் துருவ நட்சத்திரமாக வாழ்ந்தும், வளர்ந்து கொண்டும் உள்ளார்கள்.

அதிலிருந்து வெளிப்படும் ஆற்றல் மிக்க சக்திகள் சூரியனால் கவரப்பட்டு, நமது பூமியில் அலைகளாகப் படர்கின்றது. அந்த ஆற்றல் மிக்க சக்திகளை, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிக் கொண்டுள்ள அணுக்களுக்கு, வீரியமாகச் சேர்க்கவும், அதைப் பெறவும், இப்பொழுது நாம் தியானிப்போம்.

      ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா… ஓம் ஈஸ்வரா குருதேவா.. என்று மூன்று முறை ஒரே குரலில் ஒலியை எழுப்பி, உயிரான ஈசனை எண்ணி, புருவ மத்தி வழியாகச் சுவாசிக்க வேண்டும்.

அம்மா அப்பா அருளால், மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் அருள் சக்தியால், துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கண்ணில் செலுத்தி, கண்ணின் நினைவினை துருவ நட்சத்திரத்தோடு இணைத்து, அதிலிருந்து வெளிப்படும் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும், என்ற உணர்வுடன் ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, நம் கண்களில் உள்ள கருமணிகள் அதைக் கவரும், அதன்வழி, நம் உடல் உறுப்புக்களுக்கு உணர்ச்சிகளை ஊட்டி, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்படும் பேரருள் பேரொளி, நம் பூமியில் பரவியிருப்பதைக் கவரும் திறன் பெறுகின்றோம். .

இப்பொழுது உங்கள் கண்ணின் நினைவினை, புருவ மத்தியில் இந்த உடலை இயக்கிக் கொண்டிருக்கும் ஈசனும், நுகர்ந்ததை உருவாக்கிக் கொண்டுள்ள ஈசனிடம் செலுத்தி, உயிர்வழி துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டுமென்று உணர்வினைச் செலுத்தி, உயிருடன் இணைக்கச் செய்யுங்கள்.

அவ்வாறு தியானிக்கும் பொழுது, நம் உடலிலுள்ள தீய அணுக்களுக்கு, நம் உயிர்வழி உணர்வுகள் செல்லாது தடைப்படுத்துகின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, உங்கள் நினைவினை உயிரான ஈசனிடம் செலுத்தி, உயிர் வழி கவர்ந்து வலுப்பெறச் செய்யுங்கள், ஒரு நிமிடம்.

இப்பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் செல்லாது நிறுத்திவிட்டு, நம் உடலில் தீமை என்ற உணர்வுகளை உருவாக்கும் உணர்வினை, நம் உடலின் ஈர்ப்பை விட்டுக் சுழற்றிச் செல்ல, துருவ  நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, இரத்தத்திலுள்ள ஜீவ அணுக்கள், ஜீவான்மாக்கள் பெற வேண்டுமென்று கண்ணின் நினைவினைச் செலுத்தி, நம் இரத்த நாளங்களில் உள்ள, ஜீவான்மா ஜீவ அணுக்களிடம் உணர்வினைச் செலுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.

உங்கள் இரத்தத்திலுள்ள உணர்வுகள் அந்த வீரிய சக்தியைப் பெறும் பொழுது, உங்கள் இரத்தத்தில் மகிழ்ச்சியூட்டும் உணர்வுகள் உங்களை இயக்குவதை உணரலாம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் இரத்த நாளங்களில் கலந்து, எங்கள் உடல் முழுவதும் படர்ந்து உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, ஏங்கி தியானியுங்கள். 

8.கண் வழியாக உடல் உறுப்புக்களுக்கு துருவ நட்சத்திரத்தின் ஆற்றலை இணைக்கும்      நிலை
விஞ்ஞான அறிவு கொண்டு, ஊசி மூலம் மருந்தை இரத்தத்தில் கலக்கச் செய்து, எப்படி வளர்க்கின்றனரோ, அதைப் போன்று, அருள் உணர்வினை நம் கண்ணின் நினைவு கொண்டு, நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்களுக்கு, வீரிய உணர்வைச் செலுத்தி, திடமாக அந்த இருளை அகற்றிடும், ஓர் ஒளியின் உணர்வாக நாம் வளர்ப்பதே, இப்படித் தியானிக்கும் முறை.

நம் குருநாதர் காட்டிய அருள் வழியில், நம் உடலிலுள்ள, எல்லா  உறுப்புக்களையும் உருவாக்கிய அணுக்களுக்கு, அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்து, அதை வளர்த்துக் கொண்டு வருவதே, இந்த தியானத்தின் நோக்கம்.
               
இப்பொழுது, உங்கள் உடல் உறுப்புக்களை உருவாக்கிய அணுக்கள், அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியையும் பெறும் தகுதியை ஏற்படுத்தி, வலுப் பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு, உங்கள் உடலிலுள்ள அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, உங்கள் உடலின் ஈர்ப்பு வட்டத்திலுள்ள, தீய அணுக்களை அப்புறப்படுத்த இது உதவுகின்றது.

துணியைச் சோப்புப் போட்டு நுரைத்து, அழுக்கை வெளியேற்றுவது போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை உங்கள் உடலுக்குள் பெருக்கி, உடலின் ஈர்ப்பு வட்டத்தில் உள்ள, தீய அணுக்களை வெளியேற்றுவதுதான் இது.

இப்படி வெளியேற்றியபின், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் சிறு குடல் பெருங்குடல் முழுவதும் படர்ந்து, சிறு குடல் பெருங்குடலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் சிறுகுடல் பெருங்குடலில் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு, அந்த வீரிய சக்தியை ஊட்டும் போது, நாம் உண்ணும் ஆகாரத்தை, நல்ல இரத்தமாகவும் சீராகவும் மாற்றுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கணையங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைக் கணையத்தில் செலுத்துங்கள்.

இவ்வாறு தியானிக்கும் போது, நீங்கள் உண்ணும் உணவில் இருந்து ஆவியாக வருவதை, அமிலமாகவும், பல சத்துகளாகவும் பிரித்து, நல்ல இரத்தமாக மாற்றும், திறனுள்ள கணையங்களாக மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கல்லீரல் மண்ணீரலில் படர்ந்து, கல்லீரல் மண்ணீரலை உருவாக்கிய அணுக்கள், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப் பெறச் செய்யுங்கள்.

நம் உடல் உறுப்புக்களை உருவாக்கிய, நல்ல அணுக்களைச் சீராக வைக்கவும், பரிசுத்தமான இரத்தமாக உருவாக்கவும் இது துணை புரியும்.

எங்கள் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று நினைவினைச் செலுத்தி, தியானித்து அந்த அணுக்களை வலுப்பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு வலுப் பெறச் செய்யும் பொழுது, நுரையீரலில் உள்ள குறைகளை நீக்கி, வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கும் திறன் அது பெறுகின்றது.

 நுரையீரலை உருவாக்கிய அணுக்கள், அந்த வீரிய சக்தியைக் கவர்ந்து, நமக்குள் ஆரோக்கிய உணர்வுகளைப் பரப்ப, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நுரையீரலை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் என்று நினைவினைச் செலுத்தி, அந்த அணுக்களை வலிமையாக்குங்கள்.

இவ்வாறு நாம் தியானிப்பதால், நம் நுரையீரலில் உள்ள குறைபாடுகள் அகலவும், வலிமையான அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைச் சுவாசிக்கவும், சந்தர்ப்பம் உருவாகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, நினைவினைச் செலுத்தி, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்கள் அந்த வீரிய சக்தியைப் பெறச் செய்ய தியானியுங்கள்.

இவ்வாறு, சிறுநீரகங்களை உருவாக்கிய அணுக்களை வீரியமடையச் செய்யும் பொழுது, சர்க்கரைச் சத்து, உப்புச் சத்து, விஷத் தன்மை போன்ற நிலைகளை அது பலவீனப்படுத்தும்.

எப்படி, குப்பையில் பல கழிவுகள் இருப்பினும் அதன் சத்தினை மாற்றி, செடி, கொடி, மரங்கள் நல்ல சக்திகளாக மாற்றிக் கொள்கின்றதோ, அதைப் போல, நமக்குள் முந்தைய தீமைகள் இருப்பினும், இதைப் போன்று வீரியமடையச் செய்யும் பொழுது, இந்த அசுத்தமான விஷத் தன்மைகளை, ஒளியின் சுடராக மாற்றிவிடும். இப்பொழுது நாம் எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் அணுக்கள், இவ்வாறு மாறும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் இருதயத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற, அருள்வாய் ஈஸ்வரா என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு வலுப்பெறச் செய்யும் பொழுது, இதனுடன் சென்று, வீரிய இரத்தங்களாக மாறி, உடல் முழுதுக்கும் பரப்பி, அசுத்த உணர்வுகளைத் தனித்து, அருள் உணர்வுகளைப் பெருக்கி, இருளை அகற்றும் அந்த உணர்வின் இயக்கங்களாக மாறி, மன உறுதி கொண்டு நம் வாழ்க்கையைச் சீர்படுத்தும் ஞானமும், தெளிந்த மனமும் கொண்டு, தெளிவான வாழ்க்கை வாழ, இது உதவும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்ணிலுள்ள கருமணிகள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று, கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, ஏங்கி தியானியுங்கள்.

நமது வாழ்க்கையில், காலையில் இருந்து இரவு வரையிலும், வேதனை, வெறுப்பு, சலிப்பு, சங்கடம், கோபம் போன்ற உணர்வுகள் அனைத்தும் கருமணிகளில் பட்டுத்தான், உடலுக்குள் செல்கின்றது.

ஆனால் அதே சமயம், இந்தக் கருமணியில் விஷத்தின் தன்மை பட்டால், வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு. ஒரு நல்ல காரியம் செய்ய வேண்டுமென்றால், அது நடைபெறாது.

வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு, நாம் சிந்திக்கும் ஆற்றலைப்பெருக்க வேண்டுமென்றால், அது தடைப்படும். வேதனைப்பட்டோரைப் பார்த்துவிட்டு அடுத்து, எதைச் செய்ய வேண்டுமென்றாலும், சிந்தனையற்ற செயல்களையே செயல்படுத்தும்.

ஆகவே, இதைப் போன்ற நிலைகளில் நமது கருமணிகளைத் தூய்மைப்படுத்த, வேதனைப்பட்டோரைப் பார்த்தால், அடுத்த கணமே, “ஈஸ்வரா” என்று கருமணிகளில் நினைவினைச் செலுத்தி, துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெறவேண்டும், என்று ஏங்கி தியானித்து, கருமணிகளைத் தூய்மைப்படுத்த, இந்த உபாயத்தைக் கடைப்பிடியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் கண்களில் உள்ள கருமணிகள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று ஏங்குங்கள். இப்பொழுது உங்கள் கருமணிகளில், துருவ நட்சத்திரத்தின் ஒளியலைகள் படர்ந்து, தூய்மைப்படுத்துவதை உங்களால் உணர முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நரம்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு தியானிக்கும் பொழுது, நரம்பு மண்டலத்திலுள்ள விஷத்தன்மைகளைக் குறைத்து, கைகால் குடைச்சல் என்ற நிலையோ, மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நிலையோ, சரவாங்கி நோய் என்ற நிலையோ, அதைச் சிறுகச் சிறுக மாற்றி, இத்தகைய நோய்கள் வராது தடுக்க, இது உதவும்.

விஷத்தன்மையுள்ள பாம்பு, தன் விஷத்தினைப் பாய்ச்சி மற்றொரு உணவினை எடுத்துத் தனக்குள் நாகரத்தினமாக மாற்றியதோ, இதைப் போன்று நமது நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்களுக்குச் சிறுகச் சிறுக, துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறச் செய்யும் பொழுது, நரம்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் தெளிவான நிலைகள் பெற்று, தெளிவான செயல்களைச் செய்து, நமக்குச் சாதகமாகச் செயல்பட முடிகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் எலும்பு மண்டலம் முழுவதும் படர்ந்து, எலும்பு மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

இவ்வாறு நாம் தியானிக்கும் பொழுது, எல்லா உறுப்புகளிலும் உள்ள உணர்வுகள் அனைத்தும், ஒளியின் சுடராகும் நிலை பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் நெஞ்சின் எலும்புக்குள் ஊனை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

நம் நெஞ்சிலுள்ள அணுக்கள் அந்த வீரிய சக்தி பெற்றால், நம் அருகில், தீமை என்ற உணர்வுகள் வராது, தடுக்கும் திறன் பெறுகின்றது.

இவ்வாறு, துருவ நட்சத்திரத்தின் உணர்வினை நம் எலும்புகள் பெறவேண்டுமென்று, உணர்வினைப் பதிவாக்கப்படும் பொழுது, நெஞ்சுக்கு முன் ஒரு குருத்தெலும்பு இருக்கும். அதன் வழி, துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் காற்றில் கலந்திருப்பதை, உங்கள் ஆன்மாவிற்குக் கொண்டு வருகின்றது.

வேதனைப்படுத்துவோரின் உணர்வு பதிவானால், குருத்தெலும்பு, வேதனைப்படுத்துவோரின் உணர்வினைக் கவர்ந்து, நமது ஆன்மாவிற்குக் கொண்டு வரும். அப்பொழுது, படபடப்பு என்ற நிலைகள் உருவாகி, அதன் உணர்வுகள் சுவாசித்தபின், அதே இயக்கமாக மாறும்.

இதைப் போன்று, துருவ நட்சத்திரத்தின் உணர்வை  நம் நெஞ்சின் எலும்புக்குள் உள்ள அணுக்களுக்குள் சிறுகச் சிறுகச் சேர்த்தால் அது வலிமை பெறும் பொழுது, நாம் அருள் உணர்வைப் பெறும் தகுதியைப் பெறுகின்றோம்.

தீமை என்ற உணர்வுகளோ, விஷத்தன்மை கொண்ட உணர்வுகளோ, நம் அருகில் வராது தடைப்படுத்தி, நம் உடலுக்குள் உள்ள, சர்வ ரோகங்களையும், சர்வ பிணிகளையும், நீக்கும் திறன் பெறுகின்றது.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தசை மண்டலம் முழுவதும் படர்ந்து, தசை மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும், எங்கள் தோல் மண்டலம் முழுவதும் படர்ந்து, தோல் மண்டலத்தை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா, என்று ஏங்கி தியானியுங்கள்.

ஏனென்றால், இந்த அணுக்கள் வீரியத் தன்மை பெறப்படும்பொழுது, நம் அருகில் விஷத்தன்மை கொண்ட உணர்வுகள் வராதபடி, இதுவும் வலிமை சேர்க்கப்படும் பொழுது, நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக மாறும்.

நல்ல உணர்வினை நாம் வளர்த்துக் கொள்ளவும், நமக்குள் அருள் உணர்வினைப் பெருக்கிக் கொள்ளவும், இருளை அகற்றி என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வினை நாம் பெற, இத்தகைய நல்ல அணுக்களை வளர்த்துப் பழக வேண்டும்.

9.அணுக்களுக்குக் கொடுக்க வேண்டிய உரம்
இவ்வாறு, நம் உடலை உருவாக்கிய அணுக்களுக்குத் தியானித்து நாம் வளர்த்துக் கொண்டபின், அதற்கு நல்ல உரம் கொடுக்க வேண்டும்.

அந்த உரம்தான், நாங்கள் பொருளறிந்து செயல்படும் திறனும், கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்தில் அனைவரும், நாங்கள் பார்ப்போர் அனைவரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்று எண்ணி, அந்த உணர்வினைக் கவர வேண்டும்.

நமது ஆன்மாவிற்கு, இந்த அணுக்களுக்கு இத்தகைய வீரிய உணர்வை ஊட்டும் பொழுது, அந்த அணுக்கள் நல்ல நிலைகளில் வளர்கின்றது. இதைப் போன்று, தெய்வீக அருளும், தெய்வீகச் சக்தியும், தெய்வீக அன்பும், தெய்வீகப் பண்பும், நாங்கள் பெற வேண்டுமென்றும், எங்கள் குடும்பத்திலும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், இந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.

பிறருடைய பகைமையை நீக்க, காலையில் நாம் இந்த உணர்வினை வளர்த்துப் பழக வேண்டும். பிறருடைய குறையைப் பார்த்தால், நமது மனம் மங்கிவிடும். அது மங்காதிருக்க தங்கம் எப்படி மங்குவதில்லையோ, தங்கத்தைப் போன்ற மனம் மங்காத நிலை நாங்கள் பெறவேண்டும் ஈஸ்வரா என்று எண்ணி, அந்த உணர்வினை ஏங்கிப் பெறவேண்டும். 

இதைப் போன்று, எங்கள் குடும்பத்தில் அனைவரும் அந்த நிலை பெற வேண்டுமென்றும், நாங்கள் பார்ப்போரும், நாங்கள் தொழில் செய்யும் இடங்களிலும், அந்த நிலை பெற வேண்டுமென்றும், எண்ண வேண்டும்.

அடுத்து, வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, இதைப் போன்று, நம் சொல்லைக் கேட்போர் வாழ்வில் இருளை நீக்கி, அவருக்கு ஒரு, நல்ல தெளிந்து வாழும் அருள் உணர்வை, நாம் பாய்ச்சுதல் வேண்டும். 

வைரத்தைப் போல, எங்கள் சொல் ஜொலிக்க வேண்டும், எங்கள் செயல் ஜொலிக்க வேண்டும், எங்கள் குடும்பத்திலும் நாங்கள் பார்க்கும் அனைவரும் பெறவேண்டும் என்று, எண்ணும் பொழுது, அவரையும் தெளியச் செய்யும். நம்மிடத்தில், இருள் சூழாத நிலைகள் வளரும். இதைப் போன்று, மலரைப் போன்ற மணம் பெறவேண்டும், மகிழ்ந்து வாழும் அருள் சக்தி பெறவேண்டும் என்றும், நாங்கள் பார்க்கும் குடும்பமெல்லாம் அந்த நிலை பெறவேண்டும். நாங்கள் தொழில் செய்யும் இடங்களில், அந்த நிலை படரவேண்டும் என்று எண்ண வேண்டும்.

இதைத் தலையாயக் கடமையாக, நாம் கொண்டு வருதல் வேண்டும். நாம் இந்தச் சக்தியை உரமேற்றி, அந்த வீரிய உணர்வினை நாம் வளர்த்துக் கொண்டால், நாம் தொழிலின் நிமித்தம் வெளியே செல்லப்படும் பொழுது, பிறிதொரு உணர்வின் தன்மை, நம்மைத் தாக்காது. நம் சிந்தனையை ஜீவிக்க வைக்க, இது உதவும்.

இப்பொழுது, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் என்ற நிலைகளில், வெயில் காலங்கள் வரப்படும் பொழுது, எலக்ட்ரானின் அழுத்தத்தை வைத்தபின், வெயில் அதிகமானால், அதற்குத்தக்க குளிர்ந்த காற்றை உருவாக்குவதும், அதே சமயம் குளிர் அதிகமானால், இதை மாற்றி சூட்டை உருவாக்குவதும் இந்த உணர்வுகளுக்கொப்ப எந்திரங்களை இயக்குகின்றனர்.

இதைப் போன்றுதான், நம் உடலில் கடுமையான நிலைகள் தாக்கப்பட்டால், அது தாக்காது, நமது உணர்வுகளைச் சமப்படுத்தி, நாம் சிந்திக்கும் ஆற்றல் பெற்று, தெளிவான வாழ்க்கை வாழ இது உதவும்.

பின், இதனுடைய தொடர்புகள் கொண்டு வரப்படும் பொழுது, உயிரைப் போலவே உணர்வின் அணுக்கள் அனைத்தையும், உள் முகமாக ஒளியின் சுடராக, அதனுடைய உணர்வின் தன்மை பெறும் பொழுது, இது வேகாநிலை என்ற நிலைகளில், எதுவுமே இதை அழித்திடாது, வருவதனைத்தையும் ஒளியின் சுடராக மாற்றிக் கொண்டேயிருக்கும்.

இந்த உடலில் இவ்வாறு மாற்றி அமைத்து, உடலில் உள்ள ஒவ்வொரு அணுக்களுக்கும், அந்தச் சக்தியை ஏற்றினால்தான், இந்த உடலைவிட்டுச் செல்லும் அணுக்கள் அதனைக் கவர்ந்து, என்றும் ஒளியின் சுடராக, எத்தகைய விஷத்தன்மைகள் இருந்தாலும், அது மாற்றிக் கொண்டே இருக்கும்.

இதைப் போன்று காலை துருவ தியானம் செய்து விட்டு, பிறருடைய  கஷ்டங்களையும், நஷ்டங்களையும், வேதனைகளையும் கேட்டறிந்தால், துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, இரத்த நாளங்களில் கலந்து, ஜீவான்மா ஜீவ அணுக்கள் அனைத்தும் பெற வேண்டும் ஈஸ்வரா என்று, ஆத்மசுத்தி செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு செய்து, உங்கள் வாழ்க்கையில் தீமைகளை அகற்றி, இந்த உடலுக்கு பின் பிறவியில்லா நிலை அடைவதே, மனிதனின் கடைசி நிலை.

உயிரணு வான் வீதியில் தோன்றி, இந்த பூமிக்குள் விஜயமாகி, பூமியில் விளைந்த சத்தினை நுகர்ந்து எண்ணங்களும், எண்ணத்தால் கண்களும், கண்களானபின் கூர்மையும், அதன் வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியில், பல தீமைகளை நீக்கி, அந்த நீக்கும் வலிமை பெற்றபின் அதற்குத்தக்க வராகன், பன்றியை உருவாக்கி, நமது உடலுக்குள் நஞ்சை மலமாக மாற்றி, நஞ்சென்றால் நீக்கும் அருள் உணர்வைப் பெருக்கி, சமப்படுத்தும் எண்ணங்கள் வந்து, பல உணர்வுகளைக் கண்டாலும், அதை எப்படி நாம் சமப்படுத்த வேண்டும் என்ற உணர்வு பெற்று, தீமை என்ற உணர்வுகள் நம் உடலுக்குள் புகாது, அதைத் தடைப்படுத்துகின்றது.

உயிரைப் போன்றே உணர்வுகள் ஒளியானால், ‘கல்கி’. கல்கியில் உருவாகி எல்லாவற்றையும் கல்கியாக்கி, பெறும் உணர்வுகளை, ஒளியாக மாற்றுவதே கல்கி. அதுதான் விஜயதசமி.     

          10. ஏகாதசி விரதம்
அடுத்தது, ஏகாதசி விரதம். பிறருடைய உணர்வுகள் நமக்குள் வராதபடி, நாம் எல்லோரும் ஏகாந்தமாக இருக்கும் அந்த நிலை வரும்பொழுது,  பத்தாவது நிலை.
     
    காலையில், அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வினைப் பெறும் பொழுது, எப்பொழுதுமே பகைமையை மறந்து, அருள் உணர்வை உணவாக உட்கொள்ளும் பொழுது, தீமை என்ற உணர்வுகள் நமக்குள் வராது, விரதம் இருக்கின்றோம். இதுதான் ஏகாதசி விரதம். 

     இப்பொழுது நாம் என்ன செய்கின்றோமென்றால், தீமையை நமக்குள் வளர்த்துக் கொண்டு, நல்ல அணுக்களுக்குச் சாப்பாடு கொடுக்காமல் விரதம் இருக்கின்றோம். எல்லாம் தலைகீழ் பாடமாக, மாறி விட்டது.

ஆகவே, காலையில் ஒவ்வொரு நாளும், இந்த ஏகாதசி விரதம் தேவை. அதற்குப்பின் வருவதை ஆத்ம சுத்தி செய்து, நமக்குள் இருள்சூழாத நிலையில் இந்த வாழ்க்கையை முழுமையாக்கி, இந்த உடலுக்குப்பின், பிறவியில்லா நிலை அடைய, இங்கே உங்களுக்கு அருளைப் பெருக்கச் செய்யவும், வழியறிந்து செயல்படும் தன்மையும், சிந்தித்துச் செயல்படும் தன்மையும், அருள் வழியில் வாழும், அருள் ஞானம் பெறச் செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தவே, இதை உபதேசிப்பது.

இது உங்களுக்குள் விளைந்தபின், உங்களைச் சார்ந்தோருக்கும் இதனைப் பெறச் செய்யுங்கள். வைரம் எப்படி ஜொலிக்கின்றதோ, அதைப் போன்று, உங்கள் சொல் அவருக்குத் தெளிவான நிலை பெறும்படிச் செய்யுங்கள். அவர் தெளிவான நிலை பெறவேண்டுமென்று, எண்ணும்பொழுது, நம் மனம் முதலில் தெளிவாகின்றது. 


11 கூட்டுத் தியானத்தின் முக்கியத்துவம்
நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து, இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம், என்றால் அது சாதாரண மனிதனுக்கு அத்தகைய வலு இல்லை, மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.

ஆக, இன்று நாம் தனி மனிதனாக அமைந்தாலும், நாம் கூட்டுத் தியானங்களில் இருந்து, அதன் துணை கொண்டு, வலுவான எண்ணத்தின் உணர்வு கொண்டு, வலுவான பின்தான், நாம் ஒவ்வொரு நிமிடத்திலும், நாம் எண்ணும் எண்ணங்கள், மகரிஷியின் அருள்சக்தி பெற வேண்டும், என்று எண்ணினால், அந்த நிமிடமே கவரும் தன்மை வருகின்றது.

ஆகவே, ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில் இருந்து, அடுத்து நாம் பெறுவோம் என்ற  நிலைகள் இல்லாதவாறு, அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள், இந்த கூட்டுத் தியானங்கள் செய்து, ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், ஒரு தரம் கூட்டு தியானத்தில் இருந்தோம், அடுத்து நாம் எல்லாச் சக்தியும் பெறுவோம் என்று, நாம் இதன் துணை கொண்டு, விலகிச் செல்லாது, நாம் ஒவ்வொரு வாரத்திலும், ஆங்காங்கு இதே தியானவழி அன்பர்கள் பத்து பேரானாலும், இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து, பழகிக் கொள்ளுங்கள்.

அதே சமயத்தில், மாதத்தில் ஒரு நாள் பௌர்ணமி அன்று, இங்கே தபோவனம் வருபவர்கள், இங்கே கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம். இங்கே வர இயலாதவர்கள், தன் அருகிலே பத்து, நூறு பேர் இருந்தாலும், (குறைந்த பட்சம் நூறு பேராவது) அங்கே பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து, இதே போல் கூட்டுத் தியானங்கள் இருக்க வேண்டும்.

அவ்வாறு கூட்டுத் தியானமிருந்து, உங்கள் மூதாதையர்களின் உயிராத்மாக்களை, அந்த உடலை விட்டுப்பிரிந்து சென்ற உயிரான்மாக்களை, உங்கள் வலுக்கொண்ட எண்ணத்தை அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,

அந்த உயிரான்மாக்களை விண் செலுத்தினால்தான் உங்கள், எண்ணம் துரித நிலைகள் கொண்டு, விண்ணை அடைந்து,  விண் சென்ற, அந்த மகரிஷிகளின் உணர்வலைகள், பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து, நமக்குள் அந்த உரமாகச் சேர்த்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு நமது வாழ்க்கையில், இந்த மனித வாழ்க்கையில், ஏற்படும் தீமைகளை அகற்றி, அகற்ற, “அந்த மகரிஷிகளின் அருள்சக்தியை நாம் பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும் எடுத்து, நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது. அதே சமயம், நம் எண்ணம் விண்ணைக் கூர்மையாக எண்ணிச் செல்கின்றது. அதே சமயம், நமது உடலுக்குள் அந்த மகரிஷியின் அருள் சக்தி, உரமாக வலுப் பெறுகின்றது.

இவ்வாறு, நாம் இருக்கும் இந்தச் சிறிது காலத்திலேயே, இந்த உடலுக்குள், நாம் அந்த மகரிஷியின் அருள் சக்தியை வலுப் பெற்றதாக ஆக்கிக் கொண்டால், இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா சென்றால், எந்த மகரிஷியின் எண்ணங்களை, நாம் அடிக்கடி எடுத்தோமோ, அவர் ஒளியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் அந்த ஒளி நட்சத்திர, சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்து,  இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள் கரைந்து, அந்த ஒளியுடன் ஒளியாக, நாம் என்றும் நிலைத்து நின்று, பத்தாவது நிலையான, கல்கியின் நிலையை அடைகின்றோம்.
     12. ஞானகுருவின் அருளாசி
நமது குரு காட்டிய அருள் வழியில், நாம் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற்று, இந்த வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும், கனியைப் போன்று சுவையான சொல்லும் செயலும் பெற்று, தெய்வீகப் பண்பும், தெய்வீக அன்பும், தெய்வீக சக்தியும் பெறும் அருள்ஞானம் பெற்று, தங்கத்தைப் போன்று மனம் மங்காத நிலையும், வைரத்தைப் போன்று சொல்லில் ஜொலிப்பும், செயலில் ஜொலிப்பும், வாழ்க்கையில் ஜொலிப்பும் பெற்று, மலரைப் போன்ற மனம் பெற்று, மகிழ்ந்து வாழும் சக்தி பெற்று, துருவ மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, துருவ மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழ்ந்து, இப்பிறவியில், ஏகாந்த நிலை என்ற நல் வாழ்க்கை வாழ்ந்து, என்றும் ஏகாந்த நிலை என்ற அருள் உணர்வுடன், உலக இருளை நீக்கிடும் அருள்ஒளி என்ற உணர்வு கொண்டு, பிறவியில்லா நிலை அடைந்திடவும், குரு அருள் துணை கொண்டு, மகரிஷிகளின் அருள் சக்தி பெற்று, அருள்வழி வாழ்ந்திடவும், எமது அருளும், மாகரிஷி ஈஸ்வராய குருதேவரின் அருளும், எல்லா மகரிஷிகளின் அருள் சக்தியும், உங்கள் அனைவருக்கும், உறுதுணையாக இருக்கப் பிரார்த்திக்கின்றேன்.