ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

இறந்தபின் உயிராத்மாவின் நிலை

1 இறந்தபின் உயிராத்மாவின் நிலை
“மனிதன் இறந்தபின், மனிதனுடைய உயிராத்மா எந்நிலை பெறுகின்றது” என்று எமக்கு உபதேசித்தருளினார். பழனியிலுள்ள, ஒரு குளத்திற்கு எம்மை அழைத்துச் சென்றார். அங்கே ஒரு கிணற்றைக் காண்பித்தார். அக்கிணற்றைப் பற்றி, ஏற்கனவே யாம் அறிவோம். ஏனெனில், அக்கிணற்றில், ஒரு பெண்மணி தனது ஏழு குழந்தைகளுடன், விழுந்து இறந்துவிட்டது.

ஊரினுள், அக்கிணற்றை “நல்ல தங்காள் கிணறு” என்று அழைப்பர். மற்றும், அக்கிணற்றருகில் செல்ல வேண்டும் என்றாலே, பெரும்பாலானோர் அஞ்சுவோர். அத்தகைய கிணற்றைச் சுட்டிக் காட்டி, அந்த இடத்தில் எமக்கு உபதேசிக்கின்றார்.

குழந்தைகள் அலறித் துடித்து, இறந்த அந்த இடத்தில், அந்த நினைவலைகள் வருகின்ற பொழுது, குழந்தைகளின் சரீரத்திலிருந்து வெளிப்பட்ட உணர்வலைகளை, சூரியனின் காந்த சக்தி கவர்ந்து, அந்த இடத்திற்குச் செல்கின்றவர்களிடம், அங்கே துடித்து இறந்தவர்களைப் பற்றிய நினைவுகள் உதிக்கின்ற பொழுது, சூரியனின் காந்தச் சக்தியால் கவரப்பட்ட உணர்வலைகள், ஒலி அலைகளாக மாறி, குழந்தைகள் துடிப்பது போன்று, தாய் அவர்களை அடக்குவது, போன்ற குரல்களைக் கேட்க நேர்கின்றது.

இவ்வாறு, ஒரு மனித சரீரத்தில் விளைய வைத்த உணர்வலைகளை, சூரியனின் கந்தச்சக்தி கவருமேயானால், அவ்வாறு கவரப்பட்ட உணர்வுகள், எவ்வாறு அலைகளாகப் படர்கின்றன?

ஒரு ஒலி நாடாவில் நமது உரையாடலைப் பதிவு செய்ததை, டேப்பில் போட்டுக் கேட்கின்றோமோ, அது போன்று, ஒருவர் இறக்கின்ற பொழுது, வெளிப்படுத்தும் உணர்வுகளைச் சூரியனின் காந்தசக்தி கவர்ந்து, அலைகளைப் படரச் செய்வதும், பிறகு, நாம் அந்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டு வருகின்ற பொழுது, அந்த அலைகளை நாம் நுகர நேர்வதும், இன்னும் அதிகமாக நினைவலைகளைக் கூட்ட, அங்கே இறந்தவர்களுடைய உருவங்களைப் பார்க்க நேர்வதும் உண்டாகின்றது, என்று குருதேவர் எமக்கு உபதேசித்தருளினார்.

இப்பொழுதும், இரவிலும் என்னால் தூங்க முடியவில்லை, பகலிலும் என்னால் தூங்க முடியவில்லை. யாரோ என்னை அழைப்பது போன்றிருக்கின்றது என்றும், என் ஊரிலிருந்து தபோவனம் வருகின்ற வரையிலும், யாரோ என்னை அழைத்துக் கொண்டு, பின்தொடர்வது போன்று இருக்கின்றது என்றும், தபோவனம் நுழைந்தபின், அது போன்று இல்லை என்றும் கூறிக் கொண்டு, இந்நிலைகளால் துன்பப்படுபவர்கள் தபோவனம் வந்து, தங்கள் குறையை போக்கிக் கொண்டவர்களும் உள்ளனர்.

இவ்வாறு, நமது குருவின் அருளால், “மனிதனாக வளர்ந்தபின், இந்த சரீரத்தினுள் விளைந்த உணர்வலைகள் எவ்வாறு இருக்கின்றது?” என்ற நிலையையும், அதே சமயம் இந்த சரீரத்தை விட்டுச் செல்கின்ற நிலையில், அந்த உயிராத்மா எத்தகைய வேதனையைக் கொண்டிருந்ததோ, அதே வேதனைத் துடிப்புடன், அந்த உயிராத்மா துடித்துக் கொண்டேயிருக்கின்றது,  என்பதை அறிந்துணர முடிந்தது.

தொடர்ந்து சற்குருதேவர், எம்மை அந்த இரவு முழுவதும் பல இடங்களைச் சுற்றிக் காண்பித்தார். அப்பொழுது, சில வீடுகளைச் சுட்டிக் காட்டி, அங்கு நிலவும் சூழல்களை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

அக்குடும்பங்களில் வாழ்கின்ற அங்கத்தினர்களில் ஓரிருவர் பிறிதொருவரை ஏமாற்றுகின்ற பொழுது, ஏமாற்றப்பட்டவர் மரணமடைகின்ற பொழுது, வெளியிடும் சாப உணர்வுகளை, வீட்டிலுள்ள காந்தப் புலன்கள் கவர்ந்து, அவர்களுடைய ஒலி அலைகளைத் தன்னிடத்தில் பதிவு செய்கின்றன.

மனித சரீரத்தில் ஒருவன், “பிறிதொருவன் எனக்குத் தீமையை விளைய வைத்தான் பாவி” என்ற உணர்வை ஓங்கி வளர்த்து, அதனின் பேரில் எண்ணிய எண்ணங்கள், வெளிப்படுத்திய உணர்வுகள் ஆகியவைகள் ஏமாற்றியவரின் சரீரத்தில் பதிவாகிவிட்டால், அவ்வாறு பதிவான உணர்வுகள் அவரிடத்தில் பெருகி, அதன் வழிகளில் அவர் குடும்பங்களில் படர்கின்றது.

மற்றும், அக்குடும்பத்திலுள்ள இளம் தம்பதிகளிடம், பிறிதொருவரை ஏமாற்றிய சம்பவங்களைப் பற்றிய பேச்சுக்கள் எழுகின்ற பொழுது, அவர்களுடைய கருவிலே இருக்கக் கூடிய குழந்தையிடமும் இவ்வுணர்வுகள் பதிவாகின்றது. இவ்வாறு, அவர் இட்ட சாப அலைகள் இரண்டு, மூன்று தலைமுறைக்குத் தொடர்கின்றது.

இவைகளை, யாம் இங்கு எடுத்துரைப்பதற்குக் காரணம், சமூகத்தில் பெரும்பாலானோர் யார் போனால் என்ன, யார் திட்டினால் என்ன என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

நாம் நல்லதே செய்து, வாழ்ந்து கொண்டிருந்தாலும், அது பிறருக்குத் தீமையை விளைவிக்கின்ற பட்சத்தில், அவர் நம்மைக் கடுமையாக ஏசுகின்றபொழுது, “இவன் இப்படித் திட்டுகிறானே பாவி...” என்று நாம் எண்ணுகிற பொழுது, அவ்வுணர்வுகள் நமக்குள் பதிவாகிவிடுகின்றன.

ஒருவர் சாபமிடும் நிலைகளில் பேசிக் கொண்டிருந்தாலும், “இப்படிப் பேசுகிறானே பாவி” என்றால் நமக்குள் அந்த சாப உணர்வுகள் விளைந்து, நாமும் சாபமிடும் நிலைகளுக்கே, சென்று விடுகின்றோம்.

இந்நிலைகள் சிறுகச் சிறுக நம்மிடம் விளைந்து, நம் குடும்பத்தில் பிறக்கின்ற சந்ததிகளுக்கு, காக்கா வலிப்பு சம்பந்தப்பட்ட நோய்களும், கை, கால் முடக்கங்களும் உண்டாகின்றன. பெண் குழந்தைகள் என்றால், மாறுகண் நோய்கள் உண்டாகின்றன. ஆஸ்துமா போன்றவைகளும், இவ்வழியாக வருவதே ஆகும்.

இவ்வாறு, குருநாதர் ஒவ்வொரு உணர்வின் இயக்கத் தன்மையையும், சாப அலைகளின் தொடர் பாதிப்புகளையும், எமக்கு மேலும் அறிவுறுத்தும் பொருட்டு, மறுநாள் பகலில், மீண்டும் அதே இல்லங்களுக்குமுன் எம்மை அழைத்துச் சென்று, அந்த இல்லத்தில் உள்ள அங்கத்தினர்களின் சரீரத்தில், அவர்கள் எடுத்துக் கொண்ட உணர்வுகளின் இயக்கத்தையும், அவர்களிடத்தில் செயலாகின்ற சாப உணர்வுகளின் இயக்கத்தையும், எக்ஸ்ரே படம் போன்று, அவர்களின் சரீரத்தை ஊடுருவிப் பார்க்கும் தன்மையை எமக்களித்தார்.

இவ்வாறு, ஒவ்வொரு இல்லத்திலும் நோய் வருவதும், சாபங்கள் இடுவதும், அந்தச் சாப நிலைகளால் குடும்பம் நசிந்து கொண்டிருப்பதும், நம் முன்னோர் காலத்தின் சாப நிலைகளால், பின் வரும் சந்ததியினர் அனுபவிக்க நேருவதும், போன்ற நிலைகளை எமக்கு உணர்த்தியருளினார்.

மேலும், இந்தச் சாப அலைகளால் தாக்கப்படுபவர்களிடம், அவ்வுணர்வுகள் விளைந்து, உடலில் நோயாகி, அச்சாப உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றிய நிலைகள் கொண்டு, அந்த ஆன்மா எவ்வாறு துடிக்கின்றது? என்கிற நிலையை, குருநாதர் எமக்குக் காண்பித்தருளினார்.

மேலும்,  மனிதனாக இருந்து, பிறிதொருவர் அழியவேண்டும் என்று கோபம் கொண்டு சாபமிடும் நிலைகளில், அவர் இறந்தபின், அவருடைய உயிராத்மா எந்த உடலுக்குள் சென்றாலும், அவர் இட்ட சாபம் போலவே, அங்கே, மனிதனைக் கருவாக்க விடாதபடித் தடுத்து, அந்த உடலில் தீய விளைவுகளை விளையச் செய்து, அந்த உணர்வின் தன்மையை, இதனுடைய உணர்வுகளுக்கு உணவாகச் சேர்க்கின்றது.

இவ்வாறு உணவாகச் சேர்த்தபின், அந்த உடலைவிட்டு வெளியேறும் அந்த உயிரான்மா, மீண்டும் மனிதனாகப் பிறப்பதில்லை. இதுபோன்று, பிறிதொருவர் அழியவேண்டும், நாசமாக வேண்டும், என்று எவரொருவர் எண்ணுகின்றாரோ, அவருடைய உயிராத்மா சரீரத்தை விட்டு, வெளியே வந்த பின்னும் வேதனையடைகின்றது.

இந்த உயிராத்மா, பிறிதொரு மனிதனின் சரீரத்திற்குள் புகுந்தாலும், அவரிடத்திலும் மனிதப் பிறவியை மீண்டும் பெறமுடியாத நிலையை, உண்டாக்கி விடுகின்றது. ஆகவே இதைப் போன்று நாம், நம் உடலை விட்டுப் பிரியும் பொழுது, நமது உயிராத்மவில் சேர்த்துக் கொண்ட உணர்வுகளுக்கு ஒப்பத்தான், அந்த இடத்திற்கு, நம் உயிர் நம்மை அழைத்துச் செல்கின்றது என்றும், அங்கே எவ்வாறு அது வேதனைப்படுகிறது; வேதனையடையச் செய்கிறது என்றும், நம் குரு காட்டிய வழிகளில், நாம் தெரிந்து கொண்டோம்.

இனி,  ஒவ்வொரு நொடிப்பொழுதும் அருள் மகரிஷிகளின் அருள் சக்தியை நாம் பெறுவோம். உயிரோடு ஒன்றும் உணர்வுகளை, ஒளியாக மாற்றிடுவோம், பிறவியில்லா நிலை அடைந்த, சப்தரிஷிகளுடன் ஒன்றி வாழ்வோம்.

எந்த நேரம், இந்த உடலை விட்டு நம் உயிராத்மா பிரிந்தாலும், சப்தரிஷி மண்டலங்களுடன் இணந்து, அழியா ஒளிச்சரீரம் அனைவரும் பெறுவோம், என்று நாம் உறுதி கொள்வோம்.
2 உடலுக்குப்பின் பிறர் உணர்வுகள் நமக்குள் இயங்கும் நிலை
குருநாதர் இட்ட கட்டளைப்படி யாம் திருத்தணியில், மலைக்குச் செல்லும் பொழுது, ஒருவர் எம்மைச் சந்தித்து, நான் ஒரு விவசாயி, இங்கிருந்து பத்தாவது மைலில் எங்கள் கிராமம் இருக்கிறது. என் மனைவிக்கு ஒன்றரை வருட காலமாக, எழுந்து உட்காரவோ, நடக்கவோ, முடியவில்லை. என்ன நோய் என்று தெரியவில்லை? எந்த வைத்தியத்திற்கும் கட்டுப்படவில்லை. என்ன செய்வது என்றும் தெரியவில்லை என்று கூறினார்.

சாமி, நீங்கள் எங்கள் ஊருக்கு வந்து, “என் மனைவியின் நோயைப் போக்கி, நடக்க வைக்க வேண்டும்” என்று கண்களில் நீர் ததும்ப எம்மை ஊருக்குக் கூப்பிட்டார்.

யாம் இங்கு தியானத்திலிருந்துவிட்டு, அதன் பிறகுதான் எங்கும் வரமுடியும் என்றோம்.

தாங்கள் எப்படிச் சொல்கிறீர்களோ, அதுவரைக்கும் இங்கேயே இருந்து, தங்களை அழைத்துக் கொண்டு போகிறோம் என்றார் அவர்.

விவசாயியைக் கூட்டிக்கொண்டு, திருத்தணி மலைமீது ஏறிச் சென்றேன். குருதேவர் கூறிய இடத்தை அடைந்தவுடன், அவரை நான்கு நாள் கழித்து வரும்படிச் சொல்லிவிட்டு, குருதேவர் குறிப்பிட்ட இடத்தில், தியானத்தில் அமர்ந்து கொண்டேன். யாம் இங்கிருக்கிறோம் என்று, ஊரில் யாரிடமும் தெரியப்படுத்தக்கூடாது என்று சொல்லி அனுப்பிவிட்டோம்.

யாம் தியானத்தில் இருந்த 4 நாள்களிலும், பல நிலைகள் காட்சிகளாகத் தெரிந்து கொண்டிருந்தன. யாம் காட்சிகளாகப் பார்த்த பல நிலைகளுக்கும், குருதேவர் விளக்கி, உபதேசித்து அருளிவிட்டு, நாளை வரும் விவசாயியின் ஊருக்குச் செல்லும்படிக் கூறிவிட்டு மறைந்து விட்டார்.

நான்காம் நாள், யாம் இருக்கும் இடத்திற்கு விவசாயி வந்து, என்னை அவர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். விவசாயின் மனைவி, வாத நோயால், கை, கால் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையாக இருந்தார்.

அன்று இரவு, தியானத்தில் அமர்ந்தேன். அந்த சமயம், காட்சியாக, விவசாயியின் தாயார், வாத நோயுடன் கை, கால் வராமல் படுக்கையிலிருந்து கொண்டு, வேதனையுடன், பல முறை மருமகளைக் (விவசாயின் மனைவியை) கூப்பிட்டார்கள்.

அப்பொழுது மருமகள், “சனியன் தொலைய மாட்டேனென்கிறதே”, என்று முனங்கிக் கொண்டே, மாமியாரைப் பார்க்க அருகில் வந்தார்.

“ஒரு பக்கமாக எனக்குக் கைகால்கள் வலிக்கின்றது, என்னை அந்தப் பக்கம் கொஞ்சம் புரட்டிவிடு” என்றார்கள்.

மருமகளோ, ‘நீ செத்தால்தான் எனக்கு விடிவு காலம் வரும்” என்று சொல்லிக் கொண்டே, வேண்டா வெறுப்புடன் மாமியாரை ஒரு பக்கமாகப் புரட்டிவிட்டார்.

இதைக் கண்டு, மாமியார் வேதனையுடன் “இப்படியெல்லாம் ஏசுகிறாயே, முருகா!” என்று சொல்லி வேதனையுடன் பெருமூச்சு விட்டார்கள்.

மருமகளுக்குக் கோபம் வந்து, என்ன, இப்படியெல்லாம் பேசுகிறாய் என்று ஏச, மாமியாரும் வேதனையுடன் பேசினார்கள்.

மருமகள் கோபத்துடன் ஏசிய உணர்வலைகள், மாமியாரின் இரத்தத்தில் கலப்பது, காட்சியாகத் தெரிந்தது. இதைப் போன்று, மாமியார் சாபமிட்டு ஏசிய உணர்வலைகள், மருமகளின் உணர்வுகளில் உந்தப்பட்டு, மருமகளின் இரத்தத்தில் கலப்பதும், காட்சியாகத் தெரிந்தது.

மேற்கூறியவாறு, ஒருவருக்கொருவர் பல மாதங்களாக நினைத்தும், ஏசியும் பேசிக் கொண்ட உணர்வலைகள், அதாவது, மருமகள் மாமியாரை நினைத்து ஏசிய உணர்வலைகள், மாமியாரின் உடலில், வினைகளாக விளைகின்றன. மாமியார் மருமகளை நினைத்து, சாபமிட்டுப் பேசிய உணர்வலைகள் மருமகளின் உடலில், வினைகளாக விளைகின்றன.

வேதனை உணர்வுடன், மருமகளை எண்ணியவாறே மாமியாரின் உயிராத்மா உடலைவிட்டுப் பிரிந்து சென்றது. மாமியார் எப்பொழுது இறக்குமோ? என்ற வேதனையுடன் ஏங்கி இருக்கும் நிலையில், மாமியார் இறந்ததைப் பார்த்தவுடன், மாமியாரின் உயிராத்மா, மருமகளின் சுவாசத்தின் ஈர்ப்புக்குச் சென்று, இரத்தத்தில் கலந்துவிடுகின்றது.

சில நாட்களில், மருமகளின் உடலில், மாமியாரின் உயிராத்மா இயங்கத் தொடங்கி, மாமியார் எந்த நோயால் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார்களோ, அதே வேதனையை, மருமகள் அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலைகள்.

இவை, எனக்குக் காட்சியாகத் தெரிந்து கொண்டிருக்கும் சமயம். குருதேவர் காட்சி கொடுத்து, இதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்? என்று கேட்டுவிட்டு, அதற்குச் சில வழிமுறைகளை உணர்த்தி, உபதேசித்தார்கள். பிறகு, தியானத்தைக் கலைத்துவிட்டேன்.

விவசாயின் மனைவியிடம், நீங்களும் உங்கள் மாமியாரும் அடிக்கடிக் கோபித்துக் கொள்வீர்களா? என்று கேட்டேன்.

ஆம், என்று ஒப்புக் கொண்டார்கள்.

யாம் சொல்கிறபடிச் செய்தால், நோய் தீரும் என்றதும், தாங்கள் எப்படிச் செய்யச் சொல்கின்றீர்களோ, அதன்படி நாங்கள் செய்கிறோம் என்றார்கள்.

விவசாயின் குடும்பத்தில் உள்ள, அனைவரையும் தியானத்தில் அமரச் செய்து, தியானமிருந்து, கண்களைத் திறந்தவுடன், விவசாயின் தாயாரின் பெயரைச் சொல்லி, அவர் உயிராத்மா, மகரிஷிகளின் அருள் ஒளியால், புனிதம் பெற வேண்டும் என்று குடும்பத்தில் உள்ள அனைவரையும், குருதேவர் உணர்த்திய வழியில், சொல்ல வைத்தோம்.

இவ்வாறு, பத்து நாள்கள் தியானமிருந்து சொல்ல வைத்ததனால், விவசாயின் மனைவி, 10 நாள்களில் மெள்ள மெள்ள எழுந்து நடக்கலானார்.

வியவசாயின் குடும்பத்தில், அனைவரும் மட்டில்லா மகிழ்ச்சி அடைந்தார்கள். விவசாயின் மனைவி, இனி நான் யாரையும் மனம் நோகும்படிப் பேச மாட்டேன் என்று வேண்டிக் கொண்டார்.

தொடர்ந்து நீங்கள் தியானம் செய்தால், உங்களை அறியாது வரும், கோபம், குரோதம், பயம், நீங்கி, உங்கள் குடும்பத்தில் நலமும் வளமும் பெற்று வாழ்வீர்கள், என்று யாம் ஆசீர்வதித்தோம்.