ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெருக்கும் நிலை


இரத்த நாளங்களில் துருவ நட்சத்திரத்தின் ஆற்றலைப் பெருக்கும் நிலை
உதாரணமாக, நாம் ஒருமுறை திடுக்என்று பயந்துவிட்டால், அதனின் உணர்வின் கரு நம்முள் உருவாகிவிடும். மீண்டும் நினைவு கொண்டால், அது உணர்வின் அணுவாக, நமது இரத்த நாளங்களில் விளைந்து, நமது உடல் முழுவதும் சுழலப்படும் பொழுது, உடலில் அந்த அணுக்கள் இணைந்து குஞ்சாகப் பெருகி விட்டால், நம்மையறியாமலேயே திடுக் திடுக்என அஞ்சும் உணர்வு வரும். இதை நீங்கள் அறிய முடியும்.

இவைகளெல்லாம், யாம் உங்களுக்கு நினைவு படுத்துவதற்குக் காரணம், நாம் நமது வாழ்க்கையில், இத்தகைய அஞ்சும் உணர்வோ, வெறுக்கும் உணர்வோ, தொழில் நஷ்டமோ, இவைகளை எண்ணி நுகரும் பொழுது, நாம் நுகர்ந்தது அனைத்தும் நம் உடலில் இரத்த நாளங்களில், கருவாக உருவாகிவிடுகின்றது.

நஷ்டமாகிவிட்டது, நஷ்டமாகிவிட்டதுஎன்று திரும்பத் திரும்ப எண்ணினால், அது அடைகாத்தது போன்று ஆகிவிடுகின்றது. அது உடலில் குஞ்சாக விளைந்து விட்டபின், இவர்களிடம் போய்  நீங்கள் நல்லது எது சொன்னாலும், “எனக்கு நஷ்டம், நஷ்டம்என்றுதான் சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நஷ்டத்திலிருந்து மீளவேண்டும்என்ற எண்ணங்களே இவர்களுக்கு வராது. ஏனென்றால், எடுத்துக் கொண்ட உணர்வுகள்தான் பேச வைக்கின்றது.

கடல்வாழ் மீன்கள், எங்காவது ஒரு துளி இரத்தத்தினுடைய மணத்தை நுகர்ந்துவிட்டால் போதும், விரைந்து அந்த இடத்திற்கு வந்துவிடும். தொலைவில் இருக்கக்கூடிய மீன்களை, அருகே வரச்செய்து பிடிக்க விரும்பினால், தூண்டிலில் இரையை வைத்துச் சிறிது ஒலி எழுப்பினால், தொலைவில் இருக்கும் மீன்கள், தூண்டில் இருக்கும் பக்கம் வந்துவிடும்.

இதைப் போன்று,  நமது உடலிலுள்ள உணர்வின் அணுக்கள், உணர்ச்சிகளை எதன்வழி தூண்டுகிறதென்றால், நமது இரத்த நாளங்களின் வழிதான்.

இராமயாணக் காவியத்தில், இராமன், குகனை நண்பனாக ஆக்கிக் கொண்டான் என்று உரைத்திருப்பார்கள். அதில், குகன் ஆற்றில் படகை ட்டி, வாழ்க்கை நடத்தி வருபவன் என்றும் உரைத்திருப்பபார்கள்.

ஆக,  நமது உடலில் உள்ள இரத்த நாளங்களை ஆறாகவும், நம் எண்ணங்களால் உருவாக்கிய, உணர்வுகள் எதுவோ, அவைகள், நமது இரத்த நாளங்களில் சுழன்று வருவதை உணர்த்துவதற்குத்தான் இராமயாணத்தில், இராமனின் நண்பன் குகன் என்று உரைத்தார்கள்.

நமது இரத்த நாளங்களில்,  நட்பு உள்ள உணர்வுகளாக, நமக்குள் சேர்த்துவிட்டால்,  நமக்குள் வெறுப்பை உண்டாக்கும், நோய்களை உண்டாக்கும் உணர்வுகளை, நாம் ஒவ்வொன்றாகச் சமப்படுத்திவிடலாம் என்பதை உணர்த்துவதற்குத்தான், இவ்வாறு காவியங்களைப் படைத்தார்கள்.

இப்பொழுது, நாம் எண்ணும் எண்ணங்களில் பகைமை உணர்வைக் கலந்து, அதன்வழி செல்லப்படும் பொழுது, நமது உடலில் நல்ல அணுக்களை உருவாக்கியவைகளுக்குப் பகையாகி, அவைகளுக்கு நல்ல உணர்வுகள் கிடைக்காவிடாமல் தடைப்படுத்துகின்றது.

தீய உணர்வின் அணுக்கள், நல்லுணர்வின் அணுக்களை விழுங்க எண்ணும். ஏனென்றால், அவைகளுக்கு வரும் நல்லுணர்வுகளைத் தடைப்படுத்தும் பொழுது, நல்ல அணுக்கள் மடியும். இதனை உணர்த்துவதற்குத்தான், முதலில் குகன் என்ற நிலையை உருவாக்கினார்கள்.

இதில்,  இராமன், குகனை நட்பாக்கினான் என்று அதாவது, நமக்குள் இருக்கும் இரத்த நாளங்களில், துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகளைக் கருவாக்கி, உருவின் தன்மை பெறச் செய்து, உயர்ந்த துருவ மகரிஷிகளின் அருள் உணர்வுகளை, நமக்குள் அணுக்களாக விளையச் செய்தால், அது உடலில் பதிந்திருக்கும் பகைமையுணர்வுகளை நீக்கி, மகரிஷிகளின் அருள் வட்டத்திற்கு அழைத்து செல்லும். 

ஆக, இன்று அழியா ஒளிச் சரீரமாக வாழ்ந்து வளர்ந்து கொண்டிருக்கும், மகா ஞானிகளின் அருளுணர்வின் ஒளியலைகளை நமக்குள் பெருக்கும் பொழுது, அது நம்மை அருள்வழியில் அழைத்துச் செல்லும்.