ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

August 13, 2012

கோபத்தினால் வரும் தீமைகள்


1 கோபத்தினால் வரும் தீமைகள்
      நாம் ஒரு குழம்பு வைக்கக் காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்பு என்று பலவிதமான சுவைகளைக் கலந்து தயாரிக்கின்றோம். நாம் குழம்பு வைக்கும் பொழுது, எந்தப் பொருளை அதிகமாகச் சேர்க்கின்றோமோ, அதாவது மிளகாய் அதிகமாக இருந்தால், மிளகாயின் காரத்தைக் காட்டும். உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால், உப்பின் குணத்தைக் காட்டும். அதற்குள் மற்றதையெல்லாம் சுவையற்றதாக்கி, இந்தச் சுவையே முன்னிலையில் நிற்கும்.

இதைப் போல, பிறர் செய்யும் தவறான உணர்வுகளை, நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால், அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் கலந்துவிடும். ஆன்மாவில் கலந்தவுடன், அன்றைய தினம், அவரைக் கோபமாகப் பேசுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.

அப்பொழுது, ஆன்மாவிலிருக்கும் மற்ற குணங்களுடன் கலந்து, நம் உயிருடன் இணைக்கப்படும் பொழுது, நம் உடலில் உள்ள கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாகிச் செயல்படுகின்றது. மற்ற உணர்வின் மணங்களை, இது ஒடுக்கிவிடுகின்றது.

பின்னர், அதனின் உணர்வு செயல்பட்டாலும், அந்த உணர்வுகள் அனைத்தும், நம் உடலுக்குள் இருக்கும் கார குணம், கசப்பான குணம், சங்கடமான குணம், அதிலே கார குணம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும்.

குழம்பில் காரம் அதிகமானால், அனைத்துச் சுவையையும் கெடுத்து, கார உணர்ச்சியைக் தூண்டுகின்றது. பிறர் செய்யும் தவறின் நிலைகளைப் பார்க்கும் பொழுது, நம் நல்ல உணர்வுக்குள் கோபம் ஏற்பட்டால், நமக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டி, நம்மிடம் நல்ல குணங்களை இயங்கவிடாது, செய்து விடுகின்றது.

அவ்வாறு, செயல்படுத்தும் கார நிலை, நம் உடலுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து, மற்ற குணங்களைச் செயலற்றதாக்கி, இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசிக்கின்றோம். நம் ஆகாரத்தில், அந்தக் காரமான சுவையே கேட்கும். காரம் அதிகமானால்தான், ருசியே இருக்கும். கோபமாகப் பேசும் குணம் கொண்டவர்களுக்கு, அடிக்கடிக் கோபமாகப் பேசினால்தான், ரசிப்பே இருக்கும்.

அந்தக் காரமான உணர்ச்சிகள் நமக்குள் இணைந்து, யாராவது ‘சுருக்’ என்று சொன்னால் போதும், கார உணர்ச்சிகள் அங்கே விளைந்து, உடனே சண்டை வரும். அந்த உணர்வின் தன்மை கொண்டு, சண்டை போடுவதே ரசனையாகும். ஏன் சண்டை போடுகிறோம் என்பதே அவர்களுக்குத் தெரியாது.

உணர்வின் இயக்கமாக அது இயக்குகின்றது. தவறு செய்யவில்லை. சண்டை போடுபவர்களை வேடிக்கைப் பார்த்துப் பார்த்து, கார உணர்ச்சிகள் நமக்குள் ஏற்பட்டு, ஆன்மாவில் பெருகி, அதனின் உணர்வை அது வளர்க்கத் தொடங்கிவிடும்.

இவ்வாறு அது செய்தாலும், அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்ந்து, கார உணர்வுகள் அதிகமாகப் பெருக்கமாகும் பொழுது, இரத்த அழுத்த நோய் வருகின்றது. காரத்தைச் சாப்பிட்டால், நாம் எப்படி “ஆ” என்று அலறுகிறோமோ, இதைப் போல, இந்த உணர்வின் அழுத்த நிலைகள், நமது உடலில் வேகமாக ஓடும். கவன நரம்புகளில் தாக்கப்படும் பொழுது, ‘கும்’ என்று சிரசில் நரம்பு புடைத்துவிடும்.

அவர் எண்ணிய நிலைகள் சிறிது மாறினால் போதும், உடனே கோபம் தன்னை அறியாமல் வரும். உடல் முழுவதற்கும் நடுக்கமாகும். கார உணர்ச்சிகள் வரும்பொழுது, இரத்தத்தை இருதய வால்வுகள் இழுக்கப்படும் பொழுது, அதனால், நெஞ்சு எரிச்சலாகும். நாம் எதையெடுத்தாலும், நெஞ்சு எரிச்சலாகும்.

அதே சமயத்தில், ஈரல் எரிச்சலும் வந்துவிடும். எரிச்சல்கள் அங்கே சென்றவுடனே, எதையெடுத்தாலும் எரிச்சல், பார்வையிலும் எரிச்சலான நிலைகளாகும். நாம் தவறு செய்யவில்லை. நாம் தவறு செய்பவரைப் பார்க்கும் பொழுது, இதைப் போல, அந்த உணர்வின் தன்மை, நம்மை அது போல ஆக்கிவிடுகின்றது. கடைசியில், இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.

கோப உணர்வுகள் வரப்படும் பொழுது, மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கின்றார், மகிழ்ச்சியான செயல்களைச் செய்கின்றார் என்றால், அதைக் கண்டால், இந்தக் கோபக்காரருக்குப் பிடிக்காது.

அதே சமயத்தில், மகிழ்ச்சியின் உணர்வு தூண்டினால், இனிமை கலந்த சொல்லின் நாதம் பிறக்கும். உதாரணமாக, நாம் இனிப்பைச் சாப்பிட்டவுடன், அந்த உணர்வின் தன்மையால் ரசித்து, தலையை அசைக்கின்றோம். காரத்திற்குள் இனிப்பைப் போட்டால், அதனின் சுவையே தனித்து இருக்கும். நமது உடலின் இனிப்பின் சொல்லை அறியச் செய்யும் உணர்வுகள், இதற்கும், அதற்கும், ஒத்துவராத நிலைகளில் பிரிக்கும்.

இது இரண்டும் நெகடிவ், பாசிடிவ் என்ற நிலைகள் கொண்டு, இயக்கப்படும் பொழுது, நமது இருதய வால்வுகள், நமது உடலில் காரத்தை ஜீரணிக்க முடியாத நிலையில், கொதிப்பும், சுவையான நிலைகளில் பேச முடியாமல், சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.

ஆக, உடல் உறுப்பின் தன்மை ஒடுங்கும் பொழுது, இந்தக் காரத்துடன் கலக்காததனால், சர்க்கரைச் சத்து அதிகமாகின்றது. அதனால், இருதயத்தின் துடிப்பின் நிலைகள் குறைகின்றது. ஏனென்றால், இது இரண்டும் போர் செய்யப்படும்போது, துடிப்பின் இயக்கங்கள் உறுப்புக்கள் சரியாக இயங்காத நிலையும், இரத்த வால்வுகள் சரியாக இயங்காத நிலையில், தளர்ச்சியடைகின்றது.

இவ்வாறு அடைந்த, அந்த உணர்வுகள் சர்க்கரையின் சத்து அதிகமானபின், இதே இனிப்பின் தன்மை கொண்டு, எப்படிச் செடிகளில், சில பொருள்கள் சேர்ந்து, உயிரணுக்கள் உண்டாகின்றதோ, இதைப் போல, நாம் எடுத்துக் கொண்ட நெகடிவ், பாசிடிவ் என்ற எதிர் நிலையான உணர்வுகள், போர் செய்யப்படும் பொழுது, நம் ஆன்மாக்களில் இதே நிலையாகி, உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. இதனால், காற்றிலிருந்து வரும் தீய உணர்வுகள், உடலில் ஒட்டிக் கொள்கின்றன.

இரண்டு நிலைகளை எடுத்தவுடனே, அந்த அணுவின் தன்மையாக உருவாகி, நமது தோலில் அரிப்பு ஏற்படும். இந்த அரிப்பின் தன்மையானவுடன், இரத்தத்துடன் கலந்து, இரத்தத்தைச் சுவைத்துச் சாப்பிடும். பிறகு, இரத்தத்திற்குள் சீழாக மாற்றும் நிலை வந்துவிடும்.

ஆக சீழாக மாறிய பிறகு, இதன் மலம் பட்டவுடன் துரித நிலைகள் கொண்டு, இரத்த ஓட்டத்தின் இயக்கம் குறைந்து, உடலில் உள்ள உறுப்புக்களை எடுத்துவிடும் நிலை வருகின்றது. டாக்டரிடம் சென்றாலோ, தடுப்பு ஊசி போட்டு, அங்கங்களைக் குறைத்து விடுகின்றனர்.

சர்க்கரைச் சத்தை எதிர்ப்பதற்காக, வேறு மருந்தின் நிலைகளை அதிகமாக்குகின்றனர். இவ்வாறு செலுத்தினாலும், சிறிது காலமே, நாம் வாழும் நிலை வருகின்றது.

எதிர்நிலையான மருந்துகள் கொடுக்கப்படும் பொழுது, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், சிறுநீரகம் விஷத்தன்மை அடைந்து, இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இழந்து விடுகின்றது.

பின், நாம் சிறிது காலம் வாழ்வதற்கு, எத்தனை ஊசிகளைப் போட்டு, எத்தனை முறை நம்மை வேதனைப்படுத்தினாலும், வேதனை என்ற உணர்வுகள் நமக்குள் விளைந்து, ஊழ்வினை என்ற அடிப்படையிலே, நமது ஆன்மாவாக மாற்றிவிடுகின்றது.

நமக்குள் விளைந்த இந்த உணர்வுகள், இந்த உடலில் எப்படி அங்கங்களைக் குறைக்கச் செய்ததோ, அதே போல், உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஜீவான்மாவாக விளைந்து, இந்த ஜீவான்மாக்கள் எதனின் நிலை கொண்டு, இந்த உடலில் வளருகின்றதோ, அதற்குத் தக்கவாறு இதில் விளைந்த உணர்வுகள் உடலைக் குறைக்கும் நிலை கொண்டு, உயிரான்மாவில் சேர்ந்துவிடுகின்றது.

இந்த உடலில் பற்று உள்ள நாம், குழந்தைகளிடமோ, சகோதரர்களிடமோ, மற்றவர்களிடமோ, பாசத்தை அதிகமாக வளர்த்துக்கொண்டால் “அவர்களுக்கு இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன், என் செல்வத்தின் நிலைகளை, அவர்கள் காத்துக் கொள்ளவேண்டும். எனக்கு இப்படித் துன்பம் நேர்ந்துவிட்டதே, இனி இந்தப் பணத்தை, நீங்களாவாது ஒழுங்காக வைத்திருங்கள்”. என்று இந்தச் சொல்லைச் சொல்லும்போது, யார் மேல் பற்றுதல் வருகின்றதோ, அவருடைய உணர்வு, இவருடைய உடலில் எடுத்துச் சேர்த்துக் கொள்ளும்.

ஆக, நாம் தவறு செய்யாமலே, இத்தகைய உணர்வு வந்துவிட்டால், அந்த உணர்வின் தன்மை உடலிலே விளைந்து, நெகடிவ், பாசிடிவ் என்ற போர்முறை வரும் பொழுது, கலக்க உணர்வுகள் அதிகமாகத் தோன்றி, இங்கே, உயிரின் இயக்க நிலைகள், அதிகமாக, ஈர்ப்பின் நிலைக்கு வரவில்லை என்றால், அந்த உயிரான்மா, உடலை விட்டு வெளியில் சென்றுவிடும்.

நமது உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வு, ஏக்கம் கொண்டு உயிரான்மாவாக விளைந்தபின், இந்த உடலை விட்டு வெளியில் வரும் பொழுது, அந்த உடலில் எதை விளைய வைத்ததோ, அதைத் தன்னுடன் கவர்ந்து, வெளியில் வந்துவிடும்.

யார் மேல் பற்று வைத்து, அந்த மணத்தை இதனுடன் இணைத்துக் கொண்டதோ, அவர்களின் ஏக்க உணர்வுடன் வெளியில் வரும். யார் மேல் பற்று கொண்டிருந்தார்களோ, அவர்கள், இவர் உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தபின், அந்த உடலின் மேல் இவர் பற்றாக இருப்பார். அந்த உடலின் மணம் கொண்டு, இவர் பதிவு செய்த இந்த நிலைகள் கொண்டு, இறந்தவரின் உயிரான்மா, அவர் உடலுக்குள் சென்றுவிடும். பின், மனிதனல்லாத கீழான உடலாகத்தான், நம் உயிர் உருவாக்கிவிடும்.

இதைப் போன்ற நிலைகளை நாம் அறிந்து, ஒவ்வொரு நொடிப்பொழுதும் நமது வாழ்க்கையைத் தியானமாக்கி, ”அந்த துருவ நட்சத்திரத்தின் பேரருளையும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று ஆத்ம சுத்தி செய்து, இந்த உடலில் நோய் நீக்கி, வேதனை நீக்கி, அறியாது வரும் தீமைகளை நீக்கி, இந்தப் பிறவியில் பிறவியில்லா நிலை என்னும், அழியா ஒளிச் சரீரம் பெறுவதே, நமது வாழ்க்கையின் அடிப்படை என்று வாழ்ந்து வரும் அனைவருக்கும், எமது அருளாசிகள்.


2 குறைகளை நீக்கும் நிலை
பிறரிடம் குறை காணும் உணர்வுகளானது, அதே குறைகளை, நம்மிடத்திலும் உருவாக்கி விடும். இந்த வகையில், நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை. நாமேதான் நமக்கு எதிரி. 

எல்லோரும் நல் நிலை பெறவேண்டும், என்னும் உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது, நம்மிடத்திலும், நம்மைச் சார்ந்தவர்களிடத்திலும், நல் உணர்வுகள் விளைந்து, நம்மையும், நம்மைச் சார்ந்தவரையும், உயர்ந்த நிலை பெறச் செய்யும்.

நாம் யாரிடமெல்லாம் பழகினோமோ,  அவர்கள் நம்மிடம் பகைமையாகப் பேசியிருந்தாலும் சரி, அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது, நாம் நமது நினைவிற்கு கொண்டுவந்து, அவர்களது குடும்பங்கள் நலம் பெறவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த, இருள் நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி, ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின், அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும், ஒன்று சேர்ந்து வாழ்ந்திடும் நிலை பெறவேண்டும், வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, அவர்கள் வாழ்ந்திடவேண்டும் நளாயினி போன்று, ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும், என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே, நமது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். 

காலையில், இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது, அனைவரது உடல்களிலும், பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது, அவை தடைபெற்று விடும்.  இந்தப் பரமாத்மாவில், (காற்று மண்டலத்தில்) மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.

ஒரு புழு, ஒரு விஷச்செடியைத் தனது உணவாக உட்கொண்டால், அதனின் உணர்வின் எண்ணங்கள், புழுவினுள் உருவாகிக் கொண்டிருக்கும். அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால், அதை உணவாக உட்கொள்ளும் அந்த குணத்தின் தன்மை கொண்டு, அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும். ஆனால், அதே புழுவின் உயிர், இந்த குருவியின் தன்மைக்கு வந்திருக்கும். இதைப் போன்று, பல கலவைகள் கலந்தே, நாம் வந்துள்ளோம்.

ஒன்றைக்  கொல்கிறது, ஒன்றை வளர்க்கின்றது. ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும், விஷத்தை விஷத்தாலே, தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.

விஷச் செடியில் புழுக்கள் உருவாகின்றது, அதைக் குருவிகள் கொத்திச் சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று, குருவியின் ரூபத்தை அடைகின்றது. ஆனால், அந்த உணர்வின் தன்மை, விஷத்த்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.

ஆக, இன்று பிறிதொருவரிடம் தொடர்பு இல்லை, என்று, ஒருவரும் இருக்க முடியாது. யாரும், பிரிந்து தனியாக இல்லை.  ஒருவன் உங்களைச் சபித்து, அதை உங்களிடம் பதிவாக்கி விட்டான் என்றால், அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.

நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால், நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது. இதைப் போன்று, நாம் ஒருவரோடு ஒருவர் பேசினாலும், அவர்களின் உணர்வுகளும், நமக்குள் உண்டு. இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி, உங்களை இணைத்துக் கொண்டிருக்கும். பாவிப்பயல், இப்படிச்  செய்துவிட்டான்என்று உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.

நண்பர்களாக இருந்து, ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும், இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான் இருக்கிறீர்கள். ஆக, நன்மையின் நிலை வரும் பொழுது, இரண்டு பேருக்குமே நன்மையாகி விடுகின்றது.

இரண்டு பேரும், தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும் கூட, இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை.  உங்கள் நண்பரின் நிலைகளில்,  எதை அதிகமாக உங்களில் பதிவாக்கி ருக்கின்றீர்களோ, அதன் உணர்வுகளின் தன்மை, உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.

ஆக,  நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ, பேசினோமோ, அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது எண்ணி, “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும், அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் நலமாக இருக்கவேண்டும், அவர்களை அறியாது சேர்ந்த இருள் நீங்க வேண்டும், மெய்ப்பொருள் காணும் சக்தி அவர்கள் பெறவேண்டும்  என்று எண்ணி, இந்த உணர்வுகளை, நமக்குள் வளர்க்க வேண்டும்.

மேலும், “அவர்கள் குடும்பத்தில் கணவனும், மனைவியும் வசிஷ்டரும் அருந்ததியும் போன்று, இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திடவேண்டும், நளாயினி போன்று, ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும், சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும்”, என்று நாம் எண்ணுதல் வேண்டும்.

அவர்களுடைய குழந்தைகள் உலக ஞானம் பெறவேண்டும், அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்கவேண்டும்”, என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து, இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.

அவர்கள் வளர்ச்சி பெறவேண்டும்”  என்ற உணர்வுகள் நமக்குள் விளையும் பொழுதுநமக்குள் அந்த நிலைகள் தானாகவே வளரும் தன்மை பெற்று, வளர்ச்சி அடைகின்றது.

நாம் சந்தித்தவர்களின் உணர்வுகளும், நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில், “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெறவெண்டும்”, என்ற உணர்வுகளை நமக்குள் வளர்க்கப்படும்பொழுது, நம்மிடத்தில் உள்ள தீமை என்ற உணர்வுகள் மறைந்து விடுகின்றன. அதே சமயத்தில், அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளைப் பெறுகின்றார்கள்.

யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய, அருள் வாக்கினை நீங்கள் நினைவு படுத்தும் பொழுது, இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும். 

அது, உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ப்பொருளை அறிந்திடும் நிலையைப்  பெறச் செய்யும். துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில் பெருகி, தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது,  உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும், நல்மமும் பெருகி வளர்வதற்கு, எமது அருளாசிகள்.

3 சந்தர்ப்பவசத்தால் நமக்குள் வரும் தீயநிலைகளை நீக்கும் நிலை
நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி, உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது, உங்கள் புலனறிவால், கோப உணர்வைக் கவர்ந்து, உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன், உடல், காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால், உங்கள் சுவாசத்துடன் கலந்து, உயிரில் உராய்வதனால், ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களையறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ, கேட்கவோ தூண்டுகின்றது.

அச்சமயம், உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு, நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால், குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது, எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.

அதனால், ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது. உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால், இரவில் உறங்கும் பொழுது, இரத்தம் தசைகளாக மாறும் சமயம், உடலில் ஒருவித எரிச்சலும், தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.

உதாரணமாக, நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி, நெல்லை விதைத்து, அதனால், நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத  வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து, நெல்லிற்கு இட்ட உரத்தைக் களைகள் எடுத்துக் கொண்டு, களைகள் பெருகுகின்றன.

களைகளை நீக்கவில்லையென்றால், நெல்பயிர் வளர்ச்சி குன்றி, நெல்லின் தரம் குறைந்து விடுவதைப் போன்று, நீங்கள் சுவாசித்த, கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள், உங்கள் இரத்தத்தில் பெருகி, தசைகளாக மாறும் பொழுது, தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி, மேல்வலி, தலைவலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும், அதனால் உடல் சோர்ந்து, எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன.

நீங்கள் உலக நிலைகளை அறிந்துகொள்ளும் வண்ணம், பத்திரிக்கைகளைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பத்திரிக்கை வாசகத்தில், “இரவு 8.00 மணியளவில், உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து, வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு, வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிக்கும் பொழுது, உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால், அவை உங்கள் இரத்தத்தில் கலந்துவிடுகின்றன.

அன்று இரவு, நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும், வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும், எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன், உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு, உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து, மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன. இது போன்று அடிக்கடி நேர்ந்தால், எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும், மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,

நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம், ஒரு கார் திடீரென்று திரும்புகையில், உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால், கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால், உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாக சுவாசித்து, துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி, உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று, விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.

அதே சமயத்தில், அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது, ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு, ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால், பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால், புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டு, ஆத்திரத்துடன் பேசுவதும், அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன.

நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள், உங்களைப் பார்த்து, “நீங்கள் செய்த தர்மத்தால், உங்களை தெய்வம் காப்பாற்றியது”, என்று ஆறுதல் கூறுவார்கள். ஆனால்,  நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள், இரத்தத்தில் கலந்து, தசைகளாக மாறுகின்றன.

வயல்களைப் பக்குவப்படுத்தி, நெல்லை விதைத்து, பயிராக முளைத்து வரும் நிலையில்,  ஏங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள், வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்துவிடுகின்றது.

      நீங்கள் எதிர்பாராது, அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால், இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும், தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும், ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று, அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து, இந்த அமிலங்கள், உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு, நரம்புகள் இயங்குவதால், நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை, எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு, எலும்பினுள் ஊனாகவடித்துக் கொள்கின்றன. இந்த ஊனைத்தான், ஞானிகள் “ஊழ்வினை” என்று பெயர் வைத்தார்கள்.

எடுத்துக் காட்டாக, வேப்பமரத்தை எடுத்துக் கொள்வோம். வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ, அது நிலத்தில் முளைத்து வரும்பொழுது, அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள, ஈர்ப்பு காந்த சக்தியால், நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தை ஈர்த்துக் கொண்டு, ஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால், நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்துவிடுவதால், வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.

இதைப் போன்று, அதீத பயகுணத்தின் உணர்வலைகளின் சத்தையும், ஆத்திர குணத்தின் உணர்வலையின் சத்தையும், எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது. அவ்வாறு வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால், எலும்பின் காந்த ஈர்ப்பினால்,  உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும், ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.

வேப்ப மரம், தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்து, தன்னை வளர்த்துக் கொண்டு, தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது, அதை நீங்கள் நுகர்ந்தால், அதன் கசப்பான உணர்வலைகள், உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.

அதைப் போன்றே, உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது,  முகம் கடுகடுப்பு அடைகின்றது.

வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால், கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும்பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ம் தோன்றுகின்றது.

இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால், இரத்தம் வடித்துக் கொண்டதால், பய, ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று,  இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.

      மேலும், அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால், பயமான எண்ணம் தோன்றுவதும், அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும், ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால் உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும், அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.

      இதைப் போன்று, எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும், உங்களை அறியாது, அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது. ஆனால், சிறிது தடைப்பட்டாலோ, கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.

      இரத்தம் தசைகளாக, உடல் உறுப்புகளாக மாறும்பொழுது,  அதில்  பய, ஆத்திர குணங்களின்  அணு திசுக்களாக வளர்ச்சி பெற்று, தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் தசைவாதம், குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.

அதே போல், தசைகளில் உருவான அமிலங்களை, உடல் உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால்,  அதனால் கீல்வாதம், மூட்டுவாதம், முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.

நாம் நமது வாழ்க்கையில், நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து, உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும், எதிர்பாராது பய குணங்களின் உணர்வையோ, கோப குணங்களின் உணர்வையோ, வேதனையின் குணங்களின் உணர்வையோ, ஆத்திர குணங்களின் உணர்வையோ, குரோதமான குணங்களின் உணர்வையோ, சோர்வான குணங்களின் உணர்வையோ, சஞ்சலமான குணங்களின் உணர்வையோ, சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்,  நல்ல குணங்கள் பலவீனமாகி, தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று,  அதில் விளைந்த  நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று,  உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும், உயிராத்மா வளர்ச்சி குன்றி,  உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.  இவ்வாறு பிரிந்த உயிராத்மா, மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.

இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை, சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப, சந்தர்ப்பவசத்தால் கண்களால், காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து,  உடல்களில் பதிவாகி உருப்பெற்ற நோய்களைத்தான்  விஞ்ஞானிகளால் போக்க முடியும்.

ஆனால், நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள், உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று, உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்,  உணர்வுகளின் அணுசிசுக்களைமாற்ற விஞ்ஞானிகளால் முடியாது. 

விஞ்ஞான முன்னேற்றத்தினால், மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர,  அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை, ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல், விஞ்ஞானிகளுக்கு இல்லை.

ஞானிகள், மகரிஷிகள்,   தங்கள்    தபோவலிமைகளினாலும், தியானங்களினாலும், பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உணர்வலைகளின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து,  தங்களின் புலனறிவால் அந்தப் பேராற்றல்களின் உணர்வலைகளை, தவ தியானங்களால் உடல்களில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால், சந்தர்ப்பவசத்தால் தங்களுக்குள் தீய, கோப, குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச் சுவாசிக்க நேர்ந்தால், அவைகளை மாய்த்து விடுகின்றனர்.

அவ்வாறு தங்களின் உடல்களில், பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு, உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தங்கள் சொல்லாலும், செயலாலும், வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருப்பதும், மேலும்,  தங்கள்  உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு, உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து, சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும், இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள். அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள், பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.

மேற்கூறிய நிலைகளை, எம் குருநாதர் காட்சியாகவும், உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை, யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.

மெய்ஞானிகள், மகரிஷிகள் உபதேசித்து அருளிய, ஒளியான உணர்வுகளையும், சப்தரிஷி மண்டலங்களிலிருந்து, துருவ நட்சத்திரத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும்,  ஒலி, ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளை நீங்கள் அனைவரும் பெற்று, உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று,  உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற,  குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.