ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 4, 2022

வீட்டிற்குள் அமர்ந்த இடத்திலிருந்தே... மிக மிக உயர்ந்த சக்திகளை நீங்கள் பெற முடியும்

உடல் நோயைப் போக்குவதற்கோ தீமைகளைப் போக்குவதற்கோ யாம் சொன்ன முறைப்படி நீங்கள் தியானித்து வந்தால் நோய்கள் குறைவதையும் தீமைகள் அகல்வதையும் அதிசயமாகவே நீங்கள் பார்க்கலாம்.

உங்கள் உடலில் இருக்கக்கூடிய அணுக்கள் அனைத்தும் அந்த மகரிஷியின் அருள் சக்தியைப் பெறுவதையும் நீங்கள் பார்க்கலாம்... உங்களால் அதை உணர முடியும்.
1.ஏன்...! பிறர் செய்வதைக் காட்டிலும் நீங்களே மாற்றி அமைக்க வேண்டும்...
2.உங்களால் நிச்சயம் முடியும்.

நுகர்ந்த உணர்வு தான் உங்களுக்குள் நோயாக மாறுகின்றது. அதிலே தீமையை நீக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் நுகர்ந்தால் நோயைப் போக்கும் சக்தியைப் பெறுகின்றீர்கள்... மன வலிமையும் பெறுகின்றீர்கள்... அமைதியும் பெறுகின்றீர்கள். அமைதியான வாழ்க்கை நடத்த முடிகின்றது.

ஆகவே அமைதி காக்க அருளைப் பெருக்குங்கள் அகஸ்தியன் பெற்ற அருளைப் பெறுங்கள்... அவன் துருவனாகித் துருவ நட்சத்திரமான அந்த அருள் சக்திகளைப் பெறுங்கள். அகண்ட அண்டத்தை அகஸ்தியன் அறிந்தது போல் நீங்களும் அறிய முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கொண்டு வியாசகன் எப்படி பேருண்மைகளைக் கண்டானோ வான்மீக எப்படி கண்டுணர்ந்தானோ திருமூலர் எப்படி உண்மைகளை உணர்ந்தாரோ அதே போல் நீங்களும் காண முடியும்.

1.துருவ நட்சத்திரத்தின் உணர்வைக் கண்டுணர்ந்த பின்பு தான்
2.பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அகண்ட அண்டம் எப்படி உருவானது என்பதையும் ஞானிகள் காவியங்களாகத் தொகுத்து
3.மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று வழி வகுத்துக் கொடுத்திருந்தாலும்
4.மனிதனுடைய ஆசைகள் அனைத்தும் இந்த உடல் வாழ்க்கைக்கே முழுமையாக சென்று விட்டது தான்.

அதிலே தான் எண்ணியது கிடைக்கவில்லை என்றால் வேதனைகள் கூடி அது நோயாகவும்... சிந்தனைகளை இழக்கச் செய்வதும்... மனிதனல்லத உடலை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பங்களாகவும் தான் இப்போது உருவாகிக் கொண்டிருக்கின்றது.

அதை எல்லாம் மாற்றி அமைக்க மாமகரிஷி ஈஸ்வராய குருதேவர் காட்டி அருள் வழியில்
1.எளிதில் அந்த உயர்ந்த சக்தியைப் பெறலாம்
2.அமர்ந்த இடத்திலிருந்து பெறலாம்
3.வீட்டிற்குள் இருந்தே பெறலாம்
4.எங்கும் பெறலாம் - காற்றிலே அது உள்ளது.

டிவி ரேடியோவை எங்கே வைத்தாலும்... அந்தந்த அலைவரிசையில் வைத்த பின் ஆண்டென்னா மூலம் கவர்ந்து காட்டுகின்றது.

அதே போன்று உங்கள் கண் ஒரு ஆண்டென்னா. கண்ணால் தான் பதிவாகின்றது. இந்த உபதேசத்தின் வாயிலாகத் துருவ நட்சத்திரத்தைப் பதிவாக்குகின்றோம்.
1.அதையே மீண்டும் கண்ணால் நினைவாக்கப்படும் பொழுது
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எளிதில் பெறலாம்.

திட்டியவனை உற்றுப் பார்த்துக் கண்களால் பதிவு செய்த பின் மீண்டும் நினைவாக்கப்படும் பொழுது அதே உணர்வை எடுத்து அவன் மேல் வெறுப்பும் கோபமும் எப்படி வருகின்றதோ
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியைப் பெறுவதற்கும்
2.மகரிஷிகள் அருள் சக்திகளைப் பெறுவதற்கும்
3.குரு உணர்வுகளை உங்களுக்குள் பதிவாக்குகின்றோம்.

அதை நினைவாக்கப்படும் பொழுது காற்றிலிருந்து அந்த சக்திகளை நீங்கள் எளிதில் பெற முடியும். இந்தத் தன்னம்பிக்கையுடன் நீங்கள் வாழ்க்கையை மேற்கொள்ளுங்கள்.

விவேகமும் கிடைக்கும்... உங்கள் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் ஞானமும் கிடைக்கும்.