ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 14, 2022

மகரிஷிகள் பிறந்த நாட்டில் “நம்முடைய செயல்கள் எப்படி இருக்க வேண்டும்...?”

உலகில் அரசர்கள் தன் சுகபோகங்களுக்காக வேண்டி நாடு பிடிக்கும் ஆசை கொண்டு மற்ற மக்களை இரக்கமற்றுக் கொல்வது தான் அரசர்களின் குணங்கள்.

அரச வம்சங்களை எடுத்துக் கொண்டாலே அவன் போக்கிரியாகத் தான் இருக்கின்றான் அப்படிப் போக்கிரியாக இருப்பவன் முதலில் ஒரு ஊரை அடிமைப்படுத்துகின்றான்... பின் இரண்டு ஊரை அடிமைப்படுத்துகின்றான்... பின் மூன்று ஊர்களை அடிமைப்படுத்துகின்றான்.
1.அப்படியே ஒரு அரசனாகின்றான்... இதைத்தான் அரச வம்சம் என்று சொல்வது
2.கொள்ளையடிப்பதும் மற்றவர்களைக் கொலை செய்வதும் அதன் வழி வாழ்வதும் தான் அரசருடைய நீதிகள்.

சோழ நாட்டை ஆண்ட அரசர்களைப் பற்றி நாம் பெருமையாகப் பேசுகிறோம். இங்கிருந்து ஜாவா வரை போர் முரசு கொட்டிச் சென்றார்கள்... வெற்றி பெற்றார்கள்...! என்றெல்லாம் சொல்வோம்.

ஆக... நம் நாட்டின் வீரியத்தைப் பற்றிப் பேசலாம். இருந்தாலும் இதைப் போன்று ஒவ்வொரு நாடும்... மற்ற நாடுகளை நாங்கள் இத்தனை பேரை அடிமைப்படுத்தினோம்...! என்று அத்தகைய வீரியம் தான் எல்லோருக்கும் வருகிறது.

நம் நாட்டில் ஒரு கோவிலிலே தெய்வத்தை வணங்குகிறார்கள் என்றால் அதில் முன்னணியில் வரக்கூடியவர் எனக்குத்தான் முதல் மரியாதை தர வேண்டும் என்று விரும்புகின்றான்.

மற்றவர்களோ அது என்ன...? அவன் மட்டும் அங்கே ஆட்சி புரிவது...? என்று தெய்வத்தை வழிபடும் இடங்களிலும் அவர்களுக்குள் எதிர்ப்பாகி ஒரு கோஷ்டி... ரெண்டு கோஷ்டி... மூன்று கோஷ்டி... என்று பிரிவாகி விடுகிறது.

ஆலயத்திற்குச் சென்று நாம் எந்த நல்ல குணங்களைப் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோமோ... கோஷ்டிகள் பிரிவினைகள் ஆனபின்
1.என்னை மதிக்கவில்லை அதனால் தெய்வம் இந்தப் பக்கம் வரக்கூடாது
2.இவன் பூஜை செய்யக்கூடாது என்று தான் மக்கள் மத்தியிலும் எண்ணங்கள் இருக்கின்றது.

அதே போல் குடும்பத்திலே எடுத்துக் கொண்டாலும் முந்தைய காலங்களில் ஒற்றுமையாக வேலை செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வந்தாலும் நான் தான் பெரியவன்...! நான் தான் இதை எல்லாம் சம்பாதித்துக் கொண்டு வந்தேன்...! என்று சொல்லிக் கொண்டு வந்தால் கடைசியில் எனக்கு இதிலே இரு மடங்கு சொத்து (அந்தப் பங்கு) வேண்டும் என்ற நிலை வருகிறது.

செல்வத்தைச் சேர்த்து வைத்த குடும்பங்களில் எல்லாம் இதைப் பார்க்கலாம். ஒன்றுபட்டு வாழ்ந்து வந்த குணங்கள் இப்படி எல்லாம் பிற்பகுதியில் மாறுகின்றது.

1.நான் தான் சொத்தைத் தேடி வைத்தேன்... அவனுக்கு என்ன கொடுப்பது...?
2.நான் தான் இதற்கெல்லாம் காரணம் என்று
3.இந்த நாடும் அப்படி... வீடும் அப்படி...! என்ற நிலை தான் வருகின்றது.

சகோதரர்களுக்குள் ஓருவன் முதல்வன் ஆனால் எனக்குத் தான் உரிமை உண்டு... நான் தான் இதைச் செய்வேன்...! என்று வருகின்றான். பெரியவன் என்று பார்க்கச் சொன்னாலும் “நான் சொன்னதைக் கேட்கவில்லை...” என்று மறுத்தால் அங்கே போர் முறையாகிப் பகைமை ஆகி விடுகின்றது.

விவசாயம் செய்யும் இடங்களிலும் மாநிலத்திற்கு மாநிலம் மொழித் தகராறு வருகின்றது. வலிமை இருந்தால்... அந்த வலிமை பெற்றவன் செயலே அங்கே ஆளத் தொடங்குகிறது.

ஏனென்றால் அவன் மிக வலிமை பெற்றவன் ஆகின்றான் நான் சொல்வதைத் தான் எல்லோரும் கேட்க வேண்டும் என்ற “அதிகார தோரணை...” வந்து விடுகின்றது.

காட்டு விலங்குகளாக வாழ்ந்து வந்த மனிதர்கள் கூட்டமைப்பாக வாழ்ந்து வந்தாலும்... அந்தக் கூட்டமைப்புக்குத் தலைவனாக வரக்கூடியவன் “தான் சொல்வதை மற்றவர்கள் கேட்க வேண்டும்...” என்று அந்த அதிகாரம் முன்னணியில் வந்து விடுகின்றது.

1.நல்லவர்களும் அதைச் செயல்படுத்தி வந்தார்கள்
2.ஒற்றுமையாக இருக்க வேண்டும்... இப்படிச் செய்ய வேண்டும்...! என்று அந்த நல்லவர்கள் சொன்னார்கள்.
3.அதன் வழி பின்பற்றி வாழ்ந்தார்கள்.

அப்படி வாழ்ந்து வந்த மனிதர்களும் தனக்கென்று அறியத் தெரிந்த பின் இதைப் போன்று “தான் வாழலாம்...” என்ற நிலைக்கு வருகின்றனர் அதன் வழி அந்த யோசனைப்படி ஒன்றுபட்டு வருகின்றனர்.

அந்த யோசனைப்படி நடந்து நல்லதைச் செயல்படுத்திக் கொண்டு வந்தவன்... வளர்த்துக் கொண்டு வந்தவன்
1.அவன் காலம் முடிந்தால்... அதற்குப் பின் இதை யார் தலைமை தாங்குவது...? என்ற போர் முறை வந்து விடுகின்றது
2.அதில் ஒருவன் நான் தான் பெரியவன் என்று வந்தால் இன்னொருவன் நான் தான் பெரியவன் என்று வருகின்றான்
3.அப்போது அந்த வலிமைக்குத் தக்கவாறு பிரிந்து சென்று விடுகின்றார்கள்.
4.பிரிந்து சென்றவர்கள் அந்தப் போர் முறையிலிருந்து மாறுவதே இல்லை.
5.இதிலே எனது.. உனது...! என்ற நிலைக்கு இப்படி எல்லாவற்றிலும் போர் முறைகளே வருகின்றது.

ஆனால்
1.ஞானிகள் பிறந்த நாடு... மகரிஷிகள் பிறந்த நாடு நம் இந்திய நாடு
2.உயிரணு தோன்றி மனிதனாகி ஒளி உடலாகப் பெற்ற நாடு நமது தமிழ்நாடு.

இதனை நாம் முதலிலே அறிந்து அதற்குத் தக்க... நமது குரு காட்டிய வழியில் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டுமே தவிர... கூட்டத்தைக் காட்டும் நிலைக்கு வரக்கூடாது.