ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 19, 2022

எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்...”

உடல் முழுவதற்கும் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியைப் பெறுவதற்குத் தான் இங்கே பயிற்சி கொடுக்கின்றோம்.

துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும்... எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும்... எங்கள் உறுப்புகள் முழுவதும் படர வேண்டும்... எங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று ஏங்கிச் சுவாசியுங்கள்.

1.நம் கண்ணின் கரு விழிக்குள் இருக்கும் கருமணி தான் எல்லாவற்றையும் படமாக்கிக் கொடுக்கின்றது...
2.அதனுடன் தான் எல்லா வயர்களும் பொருத்தப்பட்டு இருக்கின்றது...
3.வெளியிலிருந்து எடுத்துக் கொடுப்பது அது தான்.

வேதனை வேதனை என்ற உணர்வை எடுத்துக் கொண்டால் நாளடைவில் அந்தக் கருவிழி மாசுபட்டு விடுகின்றது. விஷத்தின் தன்மை முன்னணியில் இருந்தால் அது அதிகரித்து கருமணிகள் விஷத்தன்மை அடைந்து விடுகிறது.

நம்மை அறியாமலே விஷத்தின் தன்மை அடைந்து உடலுக்குள் பரவப்பட்டு உடலில் கடும் நோயையும் உருவாக்கி விடுகின்றது.

கண்ணுடன் தொடர்பு கொண்ட நரம்பு மண்டலங்களிலும் விஷத்தின் தன்மை கவர்ந்து கொண்ட பின் அதனுடைய செயலாக்கங்கள் பலவீனமாகி கண் பார்வை மங்கி விடுகின்றது... அல்லது இழந்து விடுகிறது.

எத்தனையோ கோடி உடல்களில் “தான் பார்க்க வேண்டும்...” என்ற உணர்வு கொண்டு தான் கண்கள் உருவானது. ஒன்றை ஒன்று பார்த்து வலிமை கொண்டு பரிணாம வளர்ச்சியானது.

பரிணாம வளர்ச்சி அடைந்த அந்த உணர்வுகளைப் பெற்றால்... நம் கண்கள் மாசுபடும் தன்மைகளை மாற்றலாம். அதை வைத்து மற்ற உடலில் உள்ள உறுப்புகளுக்கும் உயர்ந்த சக்திகளை பாய்ச்ச முடியும்.

கீதையிலே நீ எதை எண்ணுகின்றாயோ அதுவாகின்றாய் என்றால்...
1.அந்த எண்ணம் முதலில் கண்ணுக்குத் தான் வரும்... கருவிழி அதைத்தான் கவரும்.
2.ஆகவே முதலில் துருவ நட்சத்திரத்தின் பேரருளைக் கண்களில் அதிகமாகப் படரச் செய்ய வேண்டும்.

அதைத்தான் தியானப் பயிற்சியாக இப்போது கொடுக்கின்றோம்.

நம் உடலில் இருக்கக்கூடிய நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் விஷத்தன்மை பரவி விட்டால் நரம்புகளில் வேதனை வருகின்றது... வாத நோய்கள் வரக் காரணமாகிறது.

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை நரம்பு மண்டலத்தில் பாய்ச்சி அதைச் சீராக்க முடியும். வாத நோய் வராது தடுக்க முடியும்.

அடிக்கடி வேதனைகளை எடுக்க எடுக்க எலும்பை உருவாக்கிய அணுக்கள் பலவீனமாகின்றது. சில நேரங்களில் ஒன்றுமே செய்திருக்க மாட்டார்கள்
1.வெறுமனே கையை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.
2.நடந்து போனேன்... காலை ஊன்றினேன் எலும்பு முறிந்து விட்டது என்பார்கள்.

இது எல்லாம் நாம் எடுத்துக் கொண்ட எண்ணங்கள்... உணர்வுகள்... அந்த எலும்பை உருவாக்கிய அணுக்களுக்குண்டான உணவுகளைக் குறைக்கப்படும் போது அந்த எலும்புகளின் மலம் பலவீனமாகி எலும்பின் பலம் குறைந்து விடுகின்றது.

எலும்பில் பலம் குறைந்தாலும் எல்லாவற்றிற்கும் மூலம் “எலும்புக்குள் இருக்கும் ஊன் தான்...”

நிலத்திற்குள் எத்தனையோ வித்துக்கள் மறைந்துள்ளது. நிலத்தின் அடியில் ஆழத்தில் நீர் இருக்கிறது. இருந்தாலும் அந்த வித்துகள் கீழ் இருக்கும் நீரை எடுப்பதில்லை. நிலங்களில் பரவி இருக்கும் நீரைத் தான் எடுக்கிறது.

ஆனால் பாறைகளோ கற்களோ இருந்தாலும் மரங்களுக்குத் தன் விழுதுகளைப் பாய்ச்சி நீரை எடுத்துக் கொள்ளும் சக்தி இருக்கின்றது... மற்ற செடி கொடிகள் சிறிது காலமே வாழும்... அதற்கு அந்தச் சக்தி இல்லை.

அதைப் போன்று தான் நம் எலும்புக்குள் இருக்கும் ஊழ்வினை என்று வித்துக்களின் இயக்கங்களும். ஆகவே...
1.என்றுமே... எங்கிருந்தும்... துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை எடுத்துக் கொள்ளக்கூடிய சக்திகளை
2.அந்த ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் நாம் ஆழமாகப் பதிவாக்க வேண்டும்.

நம் பிரபஞ்சத்தின் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் அதிகமாகச் சேர்த்திருப்பதனால் அதன் உணர்வைக் கவர்ந்து உங்களுக்குள் எளிதில் வளர்த்துக் கொள்ள முடியும்.

உதாரணமாக ஒரு நோயாளியைப் பார்த்தால் கருவிழி இழுத்து இங்கே நெஞ்சின் எலும்புக்குள் தான் பதிவாக்குகின்றது. இங்கே பதிவானால்தான் அந்த நோயாளியின் உணர்வைக் கவர்ந்து அறியவும் முடிகின்றது

நோயாளியைக் கூர்ந்து கவனித்தால் பதிவாக்குகின்றது.
1.கருவிழி ருக்மணி (கருமணிகள்) உடலுடன் இணைத்துக் கொள்ளும்.. அதாவது ரெக்கார்ட் செய்வதுதான் அதனின் வேலை.
2.பதிவான பிற்பாடு கண்ணுடன் சேர்ந்த காந்தப் புலனோ வெளியிலிருந்து வரும் அதனின் இனமான உணர்வினைக் கவர்ந்து ஆன்மாவாக மாற்றுகிறது.
3.ஆன்மாவிலிருப்பதை மூக்கின் வழியாக உயிரின் காந்தப்புலன் கவர்ந்து உயிரான்மாவாக மாற்றுகின்றது.
4.இதிலே எது அதிகமாகச் சேர்கின்றதோ அது தான் செயல்படுத்தும்.

எத்தனையோ வருடங்கள் நாம் சேர்த்து வைத்திருந்த உணர்வுகள் ஊழ்வினை என்ற வித்துக்களாக இருக்கும்.

ஒரு நிலம் கேட்டு விட்டால் அதைப் பண்படுத்தி நல்ல சத்துகளைக் கொடுத்து அதன் பின் அதிலே நல்ல பயிரினங்களை வளர்க்கின்றோம். பண்படுத்தவில்லை என்றால் விஷம் கொண்ட பயிரினங்கள் தான் அதிகமாக விளையும்.

இதைப் போன்று நம் உடலான நிலைகளைப் பண்படுத்த...
1.அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை அடிக்கடி ஊழ்வினை என்ற வித்துகளுக்குள் செலுத்தி
2.அருள் ஞானிகளின் அருள் சக்திகளைப் பதிவாக்கும் திறனுள்ள ஊனாக மாற்றி அமைப்போம்.