ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 5, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை இஞ்செக்சன் செய்வது போல் நம் உடலுக்குள் செலுத்தப் பழகிக் கொள்ள வேண்டும்

வேதனை என்ற உணர்வுகளை நாம் நுகரப்படும் பொழுது அது நம் நல்ல அணுக்களில் பட்டு உறுப்புகளில் கடுமையான நோய்கள் வருகிறது.

அதை மாற்றிட துருவ நட்சத்திரத்தின் சக்தியை நுகர்ந்து நம் உடலுக்குள் செலுத்தி இரத்த நாளங்களில் கலக்கச் செய்ய வேண்டும்.
நம் உடல் உறுப்புகள் உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பெற வேண்டும் என்று
1.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தினால்
2.ஒரு இன்ஜெக்சன் செய்த மாதிரி இந்த உணர்வு சீக்கிரம் ஊடுருவி
3.நாளுக்கு நாள் அந்த அணுக்கள் வலுப்பெற உங்கள் உடலில் உள்ள நோய்களும் குறையும்.

உங்கள் நினைவனைத்தும் துருவ நட்சத்திரத்திற்குச் செல்லும். சிந்திக்கும் ஆற்றல் வரும்… உயர்ந்த பண்புகள் வரும்… கோபத்தைத் தவிர்க்கும்… ஆத்திரத்தைத் தவிர்க்கும்… வேதனையைத் தவிர்க்கும்… அருள் வழியில் உங்களால் வாழ முடியும்.

அழுக்குத் தண்ணீரில் நல்ல தண்ணீரை விட விட அழுக்குத் தண்ணீரும் சிறுகச் சிறுக நல்ல நீராக மாறுவது போல் நம்மை அறியாது சேர்ந்த தீமைகள் குறையத் தொடங்கும்.

எத்தகைய தீமைகளும் புகாதபடி நீங்கள் இந்தப் பயிற்சியை எடுத்துக் கொண்டால்…
1.எதை எண்ணுகின்றீர்களோ அதை உங்கள் உயிர் உருவாக்கும்.
2.எந்தத் துருவ நட்சத்திரத்தை நாம் எண்ணி வளர்க்கின்றோமோ அங்கே அழைத்துச் செல்கின்றது நமது உயிர்.

ஆகவே இந்தத் தியானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் மற்றவர்களுக்கும் இந்தப் பயிற்சியை எடுத்துக் கூறுங்கள்.

அருள் உணர்வுகளைப் பெருக்கப் பெருக்க உங்கள் வீடுகளில் அற்புதமான வாசனைகள் வரும்… மகிழ்ச்சியான உணர்வுகள் பெருகும். உற்சாகமும் வரும்…!

ஒவ்வொரு உயிரும் கடவுள்… உயிர் வீற்றிருக்கும் உடல் ஆலயம் என்ற நிலைகள் கொண்டு அதைத் தான் நான் (ஞானகுரு) பிரார்த்திக்கின்றேன்.
1.அதன் வழி நீங்கள் வளர நல்ல உணர்வுகள் பெருக
2.உங்கள் மூச்சலைகள் காற்றிலே பரவ
3.காற்று மண்டலம் புனிதம் பெற
4.உலக மக்கள் நலமும் வளமும் பெற இது உதவும்.

27 நட்சத்திரங்கள் 27 விதமான உணர்வுகள் பரப்பப்படும் பொழுது மின்னலாகப் பாய்கிறது… தூசிகளாகப் படர்கிறது.

இதிலே ஏதாவது ஒரு நட்சத்திரம் அதிகமான நிலைகள் துருவத்தின் வழி கவரப்பட்டுப் பூமிக்குள் நுழைந்து விட்டால் காற்று அழுத்த மண்டலத்திலே துகள்கள் அதிகரிக்கின்றது.

அப்படி அதிகரிக்கப்படும் பொழுது மற்ற நட்சத்திரங்களின் தூசுகளுடன் கலந்தவுடன் எதிர்மறையாகிப் பெரும் சூறாவளியாக சுழல் காற்றாக வந்து விடுகின்றது.

இது எல்லாம் இயற்கையின் நியதிகளில் உருவானது. நாளுக்கு நாள் இது அதிகரிக்கும் போது அதிலிருந்தெல்லாம் தப்ப வேண்டும். தப்புவதற்குத் தான் மிக மிக வலிமை மிக்க அந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியை நீங்கள் எடுக்கும் பயிற்சியைக் கொடுக்கின்றோம்.