ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 11, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்தியை உயிர் வழி கவர்ந்து நம் இரத்தங்களிலே அதிக அளவில் கலக்கச் செய்ய வேண்டும்

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது...
1.நாளை கடன்காரனுக்கு எப்படிக் கொடுப்பது...
2.குடும்பத்தை எப்படி வழி நடத்துவது... என்று சோர்வின் நிமித்தம் வேதனை என்ற உணர்வுகள் தான் வருகின்றது.

இதைப் போன்ற சந்தர்ப்பங்களில் துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நாம் நுகர்ந்து நம் இரத்தங்களில் அதைக் கலக்கச் செய்தால் உடனே மன உறுதி கிடைக்கும்.

1.நாம் எதைச் செய்ய வேண்டும்...? எப்படிச் செய்ய வேண்டும்...? என்று
2.தனக்குள்ளேயே ஞானங்கள் கிடைக்கின்றது.
3.அதன் வழி நம் வாழ்க்கையை ஒழுங்குபடுத்தவும் தொழிலை விருத்தி செய்யவும் மன அமைதி பெறவும் இது உதவும்.

ஆனால் மன அமைதி இழந்து குடும்பத்தில் சிக்கல்கள் அதிகமானால் அந்தக் குடும்பத்தில் இதை நுகர்வோர் உணர்வுகள் அனைத்துமே சோர்வடைகின்றது. சோர்வடைந்து வேதனைப்படும் நிலை வரும் பொழுது சிந்தனை இழக்கப்படுகிறது.

அந்த குடும்பத்தை சார்ந்தவர் வெளியிலே செல்லப்படும் பொழுது
1.அந்தக் கலக்கங்கள் - எதிர்பாராத விபத்துகளை உண்டாக்கி விடுகின்றது
2.பட்ட காலிலே படும்... கெட்ட குடியே கெடும்...! என்ற நிலைகளில்
3.சங்கடங்கள் குடும்பத்தில் பரவப்படும் பொழுது விபரீத விளைவுகள் வந்து விடுகின்றது.

மேலும் மேலும் தன்னைக் காத்துக் கொள்ளும் நிலையே முடியாது போய் விடுகிறது. தேடிய செல்வங்களையும் பாதுகாக்க முடியாது போய்விடுகிறது. மேலும் வேதனை என்ற உணர்வுகளே அதிகமாக வளர்கின்றது.

இந்த உடலில் அத்தகைய நிலைகளை வளர்த்துக் கொண்டால் இன்று நாம் மனிதர்கள்.

வேதனை என்ற உணர்வு கூடினால் எந்த ஆசை கொண்டோமோ பேய்...! இன்னொரு மனித உடலுக்குள் சென்று பேயாக ஆட்டி அவனையும் வீழ்த்திவிட்டு வேதனையை உருவாக்கி வெளி வந்தபின் அடுத்து “மனிதனல்லாத உடலை இந்த உயிர் உருவாக்கிவிடும்...”

ஆகவே எத்தனையோ உடல்களைக் கடந்து வந்து இன்று நம்மை மனிதனாக உருவாக்கிய நம் உயிரைக் கடவுளாக மதித்தல் வேண்டும். அவனால் அமைக்கப்பட்ட இந்த உடலைக் கோவில் என்று மதித்துப் பழக வேண்டும்.

அப்படி மதித்தோம் என்றால்... வாழ்க்கையில் சந்திக்கும் சலிப்பு சங்கடம் சஞ்சலம் கோபம் குரோதம் பயம் போன்ற நிலைகள் நமக்குள் புகாது தடுக்க முடியும். நல்ல சிந்தனைகள் நமக்குள் கூடும்.

வாழ்க்கையில் தீமைகளைச் சந்திக்க நேரும் அந்தந்த நேரங்களில் உடனடியாகத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை எடுத்தால் நம் உடலில் எத்தகைய கஷ்ட்ங்கள் வரினும் அதைச் சிறுகச் சிறுக நாம் தடுக்க முடியும் உடலுக்குள் நல்ல அணுக்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

காரணம்... தீமைகளை எல்லாம் சுட்டுப் பொசுக்கியது அந்தத் துருவ நட்சத்திரம்...!

1.கண்ணின் நினைவினைப் புருவ மத்தியில் உயிரில் இணைத்து...
2.துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்ணை மூடி...
3.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி நினைவு அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பால் செலுத்தி
3.அதிலிருந்து வரும் பேரருளையும் பேரொளியையும் பெற வேண்டும் என்று
4.உயிர் வழி கவர்ந்து நம் உடலுக்குள் சேமித்தல் வேண்டும்.
5.நம் இரத்தங்களிலே இதைக் கலக்கச் செய்ய வேண்டும்
6.கண்ணின் நினைவை உள்ளே செலுத்தப்படும் போது நம் இரத்தங்களை அது தூய்மைப்படுத்தி விடுகின்றது.