ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 22, 2022

துருவ நட்சத்திரத்தின் சக்திகளை குருநாதர் எல்லோருக்குள்ளும் பாய்ச்சச் சொன்னதன் நோக்கம்

குடும்பத்தில் கருவுற்றிருக்கின்றார்கள் என்று தெரிந்தாலே நீங்கள் ஒரு மகா விரதமாக இருத்தல் வேண்டும்.

பிறருடைய கஷ்டங்களையும் நஷ்டங்களையோ வேதனைகளையோ கோபங்களையோ பகைமைகளையோ நுகராது அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

எங்கள் உடல் முழுவதும் அந்தச் சக்தி படர வேண்டும். எங்கள் ஜீவான்மா ஜீவணுக்கள் பெற வேண்டும். எங்கள் குடும்பத்தில் உள்ளோர் அனைவரும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும். அருள் ஞானம் பெருக வேண்டும்... மெய்ப் பொருள் காணும் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணுதல் வேண்டும்.

1.ஆதியிலே வாழ்ந்த அகஸ்தியன் எந்தச் சக்தியைப் பெற்று அவன் துருவன் ஆனானோ துருவ நட்சத்திரமாக ஆனானோ
2.அதனின்று வரும் பேரருளை கருவுற்ற தாயின் கருவில் வளரும் சிசு பெற வேண்டும் என்று எல்லோரும் தியானிக்க வேண்டும்.
3.உலக ஞானமும் உலகைக் காத்திடும் அருள் ஞானியாக வளர்ந்திடவும்
4.உலகில் உள்ள நச்சுத்தன்மைகளைப் போக்கும் சக்தி பெற்றவனாகவும்
5.அவன் பார்வையில் சர்வ பிணிகளையும் சர்வ தோஷங்களையும் நீக்கிடும் சக்தி பெற்றவனாகவும்
6.உலகை ஞான வழியில் அழைத்துச் செல்லும் அருள் ஞானியாக வளர வேண்டும் மகரிஷியாக வளர வேண்டும்
7.உலகைக் காத்திடும் பேரின்பப் பெரு வாழ்வை உருவாக்கும் அருள் மகானாக உருவாக்க வேண்டும் என்று
8.கருவில் இருக்கப்படும் பொழுது குடும்பத்தில் அந்தப் பத்து மாதமும் மகா விரதமாகச் செயல்படுத்துங்கள்.

எந்தப் பகைமையும் விடாதபடி உங்கள் குடும்பத்தில் இதைச் செயல்படுத்தினால் அவன் பிறந்த பின் குடும்பத்தில் உள்ள தோஷங்களையும் பாவங்களையும் நீக்கக்கூடிய சக்தியாக வருவான்.

உங்கள் குடும்பத்தைக் காப்பது மட்டுமல்ல உலகையே காத்திடும் அருள் ஞானியாக மகரிஷியாக வருவான்.

தென்னாட்டுடைய சிவனே போற்றி... எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்கிறோமே... அந்த அகஸ்தியன் தான் துருவ நட்சத்திரமாக இன்றும் வாழ்ந்து வளர்ந்து கொண்டுள்ளான். அதை எந்நாட்டவரும் பெற முடியும்.

1.அவன் எப்படி ஒளியாக மாறினானோ... அவனுடைய உணர்வுகள் இங்கே தென்னாட்டிலே அதிகமாக உண்டு
2.அவன் அருளை நாம் பெற்று நமக்குள் அறியாது புகுந்த இருளைப் போக்குவோம்... மெய்ப்பொருளைக் காணுவோம்
3.உலக மக்கள் அனைவரும் இருளை நீக்கி மெய்ப்பொருள் காணும் நிலை பெறச் செய்வோம்.

சகோதரப் பண்புடன் அரவணைத்து வாழும் சக்தியும் பேரன்புடன் வாழும் உயர்ந்த சக்தியும் எல்லோரும் பெற வேண்டும் என்று குடும்பத்தில் அனைவரும் எண்ணுங்கள்.

கருவில் வளரும் சிசுவிற்கு இத்தகைய உயர்ந்த உணர்வுகளை ஊட்டுங்கள். அந்தப் பத்து மாதமும் கொஞ்சம் பொறுமையாக இதைச் செய்து பழகுங்கள். நம் நாட்டையும் காக்கலாம்... ஊரையும் காக்கலாம்.

நமது குருநாதர் காட்டிய அருள் வழியினைத் தான் இங்கே உணர்த்துகின்றோம். என்னைக் (ஞானகுரு) காடு மேடெல்லாம் அலையச் செய்தார்... உண்மைகளைத் தெரியச் செய்தார்... அனைத்தையும் அறிந்து கொண்டேன்,

நான் கஷ்டப்பட்டு சிரமப்பட்டு அலைந்து திரிந்து அறிந்ததை உங்களுக்கு நீங்கள் அமர்ந்த இடத்திலேயே பாய்ச்சுகின்றோம்... அதைப் பெறும்படி செய்கின்றோம். நீங்கள் எளிதில் பெறலாம்

குருநாதர் இட்ட கட்டளைப்படி உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலைக் கோவிலாக மதிக்கின்றேன். மனிதராக உருவாக்கிய அந்த அரும்பெரும் சக்திகளைத் தெய்வங்களாக மதிக்கின்றேன்.

தெய்வம் வீற்றிருக்கும் ஆலயத்தைச் சுத்தப்படுத்த இங்கே கொடுக்கும் உபதேச உணர்வுகளை நீங்கள் நுகர்ந்தாலே தீமைகள் அகன்று புனித உணர்வு பெறுவீர்கள்.

ஆகவே...
1.ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தும் நிலையை இவ்வாறு நீ செய்தால்
2.அனைவருடைய உணர்வுகளும் உயர்ந்ததாக உனக்குக் கிடைக்கும்
3.பல கோடி உணர்வுகளை ஒளியாக மாற்றிக் கொண்டிருக்கும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை
4.எத்தனை (இலட்சம்) பேருடைய உணர்வுகளுக்குள் பாய்ச்சுகின்றாயோ...
5.அப்படி நீ அதைச் செய்தால் அனைவருடைய உணர்வுகளை நீ பெறுவாய் என்று
5.குருநாதர் இட்ட கட்டளைப்படித் தான் உங்கள் உடலான ஆலயத்தைச் சுத்தப்படுத்துகின்றேன்
6.எம்முடைய அருள் உபதேசங்கள் அதற்குப் பயன்படும்...
7.உங்கள் உடலான சிவனுக்கு அது நல் அமுதாகக் கிடைக்கும்.

ஆகவே அருளைப் பெறுவோம்... மெய்ப்பொருள் காண்போம்... பிறவி இல்லா நிலையை அடைவோம் என்று பிரார்த்திப்போம்.