ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

December 20, 2022

குருநாதர் காட்டிய அருள் வழியில் வாழ வேண்டும் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்

குருநாதர் காட்டிய அருள் வழியில் ஞான வித்தை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். வெறும் ஞான வித்து அல்ல… அருள் ஞான வித்து…!

இருளை நீக்கும் அருள் ஞான வித்தை… இருளை நீக்கிட்ட அருள் ஞானிகளின் உணர்வை உங்களுக்குள் பதிவாக்குகின்றேன். உங்கள் மனதில் தான் இனி அதை வளர்த்துக் கொள்ளும் நிலை இருக்கின்றது,

1.இந்த உலகில் நாம் வாழக்கூடிய காலம் மிகக் குறுகியது…
2.எந்த நிமிடத்தில் இனி எது வேண்டுமென்றாலும் நிகழலாம்
3.உலகம் எப்படி இருக்கும்…! என்றும் சொல்ல முடியாது
4.மனிதன் சிந்தனையுடன் இருப்பானா என்பது கேள்விக்குறிதான்…!
5.அதற்குள் குருநாதர் காட்டிய அருள் வழியில் அருள் வழி வாழ வேண்டும் என்று உங்கள் மனதிலே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
6.எந்த நிமிடம் எதுவானாலும் உயிருடன் ஒன்றி என்றும் நிலையாக வாழ்வோம்.
7.”பிறவி இல்லா நிலை அடைவோம்…!” என்ற உணர்வுகளுக்கு நீங்கள் திரும்பி ஆக வேண்டும்.
8.ஆகவே உடல் பற்று வைக்காதீர்கள்.
9.யாம் சொல்லும் உணர்வின் தன்மையை உயிரிலே வளர்க்கப்படும் போது உடலைக் காக்கும் உணர்வுகள் தன்னிச்சையாக வரும்
10.அது இல்லை என்றால் உடலை காக்க முடியாது…!
11.காப்பதாக எண்ணுவோம்… ஆனால் வேதனை கொண்டு உடலை அழித்துக் கொண்டுதான் இருப்போம்
12.தன்னைப் பாதுகாக்கும் சக்தியை இழந்து விடுகின்றோம்

ஆகையினால் இதைப்போன்ற நிலைகளிலிருந்து விடுபட்டு மெய் ஞானத்தை வளர்க்கும் அருள் சக்தியைப் பெறுங்கள். அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று வளர்த்துக் கொள்ளுங்கள்.

எங்கள் குடும்பம் நலமாக இருக்க வேண்டும். எங்கள் குழந்தைகள் நல்லவர்களாக ஆக வேண்டும். என் கணவர் உயர்ந்தவராக வரவேண்டும்… என் மனைவி உயர்ந்த நிலை பெற வேண்டும்… நாங்கள் ஒருவருக்கொருவர் மதித்திடும் பண்புகள் வளர வேண்டும்… அந்த அருள் சக்தி பெற வேண்டும் என்று அறியாது சேர்ந்த பகைமைகளை மாற்றுங்கள்… அருளைப் பெருக்குங்கள்.

நீங்கள் எண்ணியவுடனே அந்த உயர்ந்த சக்திகளைப் பெறச் செய்வதற்குத் தான் இந்நேரம் வரை இதை ஞான வித்தாகப் பதிவாக்குகின்றோம்.

காரணம்…
1.படிக்காதபடி ஒன்றும் செய்ய முடியாது…
2.ஆசிரியர் சொல்லிக் கொடுத்தால் தானே எடுக்க முடியும்
3.ஆசிரியர் சொல்லத் தவறி விட்டால் தவறாகத்தான் போய்விடும்.

நம் குருநாதர் நமக்குத் தெளிவாக காட்டிய வழிப்படித் தான் உங்களுக்கு இதை எல்லாம் எடுத்துக் காட்டுகின்றேன் (ஞானகுரு). உங்கள் உயிரைக் கடவுளாக மதிக்கின்றேன். உங்கள் உடலை ஆலயமாக மதிக்கின்றேன். மனித உடலை உருவாக்கிய அரும் பெரும் சக்தி கொண்ட ஞான சக்தியான தெய்வங்களை மதிக்கின்றேன். உங்களுக்குள் அமைதியும் சாந்தமும் பெற வேண்டும் என்று நான் தியானிக்கின்றேன்.

என்றுமே இந்த உணர்வுகளை நீங்கள் எடுத்து வளர்த்துக் கொண்டால் நீங்கள் எண்ணியது இறையாகி… இறையின் உணர்வு செயலாகும் போது… அதுவே உங்களில் தெய்வமாகிறது.

ஆகவே…
1.துருவ நட்சத்திரத்தின் உணர்வுகள் உங்களுக்குள் இறையாகி அதனின் உணர்வு தெய்வமாகி
2.இருளை நீக்கிடும் சக்தியாக உணர்வின் ஒளியாகி பிறவி இல்லா நிலை அடைவீர்கள்…!