ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 27, 2022

நான் (ஞானகுரு) கற்றறிந்தேன்... பேசுகின்றேன்... நீங்கள் என்றைக்குத் தயாராகுவது...!

மனிதனாக வாழும் பொழுதே கணவன்-மனைவி இருவரும் இங்கே கொடுக்கும் உயர்ந்த சக்திகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பார்வை தீமைகளை அகற்றிடும் ஆற்றல்மிக்க சக்தியாக விளைய வேண்டும்.

உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டும்... அருள் ஞானிகள் உணர்வைப் பெற வேண்டும் என்ற இந்த உணர்வினை
1.உங்கள் உடலிலே வளர்த்துக் கொள்ளுங்கள்
2.இந்த உணர்வலைகளை உலகெங்கிலும் பரப்புங்கள்.

அத்தகைய நிலையை ஏற்படுத்துவதற்குத்தான் திரும்பத் திரும்ப உங்களுக்கு இதை நினைவுபடுத்துகிறேன் (ஞானகுரு).

ஏதோ சாமி சொல்கின்றார்... நாங்கள் கேட்பதற்குத்தான் இருக்கிறோம் என்று எண்ணிவிடாதீர்கள்.

நீங்கள் என்றைக்குத் தயாராகுவது...?

நான் கற்றறிந்தேன்... பேசுகின்றேன். உங்களை வளர்ப்பதற்காக இந்த உணர்வின் தன்மை பதிவாக்குகின்றேன். நீங்கள் தயாராக வேண்டும்...!

1.ஒரு குருவாக இருந்தார்... என்னைத் தயாராக்கினார்.
2.அந்த ஞானத்தின் வழியை எல்லோருக்கும் போதிக்கச் சொன்னார்.
3.நீங்கள் எல்லோரும் நம் குருவின் உணர்வை ஏற்று... குருவாகவே மாற வேண்டும்.

ஒவ்வொருவரும் மகரிஷிகளின் அருள் உணர்வுகளை வளர்த்து குரு நமக்கு எந்த வழியைப் போதித்தாரோ அதன் வழியிலே நாம் சென்றோம் என்றால்
1.நாம் அனைவரும் குருவே... குரு வழியில் குருவாகின்றது அதன் வழியே செயல் ஆகின்றது
2.ஆக அருள் ஒளியை நமக்குள் உருவாக்குதல் வேண்டும்
3.அந்த அருளையே நமக்குள் குருவாக்குதல் வேண்டும்
4.அருள் வழியில் இருளை மாற்றிடும் உணர்வை நமக்குள் உருவாக்க வேண்டும்
5.குருவாக... குருவின் நிலைகளில் தீமையை மாற்றிடும் அருள் உணர்வுகளைப் பெறுதல் வேண்டும்.

அதற்குத் தான் இதைச் சொல்வது.

சாதாரண மனித வாழ்க்கையில் வாழ்கின்றோம். இருந்தாலும் இயற்கையின் நிலைகள் கொண்டு அந்த மகரிஷிகளின் உணர்வுகளை... அந்த மெய் ஞானிகளின் உணர்வைக் காலை துருவ தியானத்தில் எடுத்துப் பழகுங்கள்.

அந்த மகரிஷிகள் சென்ற பாதையில் கணவனும் மனைவியும் அந்த அருள் மகரிஷிகளின் உணர்வை பெறவேண்டும் என்று உங்களுக்குள் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த உணர்வின் அறிவாக வளர்த்துக் கொள்ளுங்கள்.

ஒருப் பத்து நிமிடம் எடுத்துக் கொண்டபின் அந்தச் சக்தி என் கணவருக்குப் பெற வேண்டும் என்று ஏங்கி பெறச் செய்யுங்கள் அதே போன்று கணவன் மனைவிக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று உணர்வைப் பாய்ச்சுங்கள்.

1.அடுத்தடுத்து உங்களுக்குள் அந்த மெய் உணர்வின் விளக்கங்கள் வர வேண்டும்.
2.நீங்கள் ஒவ்வொருவரும் அருள் ஒளியின் சுடராக மாற வேண்டும்
3.உங்கள் பார்வையால்... உங்கள் சொல்லால் கேட்போர் உணர்வுகளில் இருளை மாய்த்திடும் நிலை பெற வேண்டும்.

உங்கள் பேச்சும் மூச்சும் விஞ்ஞான அறிவில் வரும் பேரழிவுகளில் இருந்து உலகைக் காக்கும் நிலையாக மாறுதல் வேண்டும். குருவின் அருள் நமக்குள் செயல்படுதல் வேண்டும்.

தியானத்தின் மூலம் பெற்ற சக்தியால் உங்கள் சொல்லைக் கேட்கும் பொழுது மற்றவர்கள் பிணிகள் பறந்து ஓடவேண்டும் அருள் உணர்வுகளை அவர்கள் நுகரும் திறனைப் பெறச் செய்தல் வேண்டும்.

அதை அவர்கள் நுகர்ந்தால் அவர்கள் பிணிகள் ஓடுகின்றது. இதனின் தன்மையை அவர்களுக்குள் சேர்த்தால் பல பிணிகளையும் போக்க முடிகின்றது. பிணிகளைப் போக்கும் அந்த நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

நோயாகிவிட்டதே...! என்று எண்ணி அதை நுகர்ந்தால் இங்கே அது சாடிவிடுகிறது. நம் நல்ல குணங்களையும் அழித்து விடுகின்றது.

ஆகவே மெய் ஞானிகளின் உணர்வு கொண்டு அஞ்ஞான வாழ்க்கையிலிருந்து நாம் விடுபட்டு மெய் ஞான வாழ்க்கைக்குச் செல்லுதல் வேண்டும்.

அஞ்ஞான வாழ்க்கையாக வாழும் இன்றைய உலகில்...
1.மனிதன் சிதைந்திடும்... மனிதனைச் சிதைக்கச் செய்யும் உணர்வுகள் வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில்
2.மனிதனையே பூண்டோடு அழித்திடும் சக்திகளும்
3.மனிதனுக்கு மனிதன் அழித்திடும் நிலையை உருவாக்கும் சந்தர்ப்பங்களும்
4.மதம் இனம் மொழி என்ற நிலையில் மொழி பேதங்களும் இனபேதங்களும் மனபேதங்களும் உருவாக்கப்பட்டு
5.நம்முடைய ஆறாவது அறிவின் தன்மையை இருள் சூழச் செய்துவிட்டோம்.

நம் உயிரை மறந்துவிட்டோம்... எங்கேயோ இருக்கின்றான் ஆண்டவன் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் கடவுள் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் ஈசன் என்று எண்ணுகின்றோம்... எங்கேயோ இருக்கின்றான் கர்த்தர் என்று எண்ணுகின்றோம்...!

ஆக மொத்தம் கடவுள் நாம் எண்ணும் உணர்வு எதுவோ அந்த உணர்வைத் தான் உருவாக்கி இயக்குகிறது. இது தான் உயிருடைய வேலை

நமக்குள் இருந்து இயக்கும்
1.அவனை (உயிரான ஈசனை) மறவாது
2.அவனால் உருவாக்கப்பட்ட மனித உடலை அழித்திடாது
3.மனித உடலில் சோர்வை விடாது அருள் உணர்வுகளை வளர்த்துப் பழகுங்கள்.

தீமைகள் வரும்போதெல்லாம் மகரிஷிகளின் அருள் ஆற்றலை உங்கள் இரத்தநாளங்களில் கலக்கச் செய்யுங்கள். தீமை என்று நுகர்ந்தாலும் அறிய அது உதவினாலும் அடுத்தகணம் நமக்குள் உருவாகாதபடி அதை மாற்ற வேண்டும்.

அதற்குத்தான் இந்த உபதேசம்...!