ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 10, 2022

நல்லது நடக்கும் “காலமோ நேரமோ” நம்மைத் தேடி வராது… நாம் தான் அதை உருவாக்க வேண்டும்

தெய்வப் பிறவி… மனிதப் பிறவி…! என்ற பாகுபாடு எல்லாம் பிறக்கும் பிறவியில் இல்லை.

தேவனுக்கு அடுத்தது மனிதப் பிறவி என்கின்றார்கள். தேவப் பிறவியாக யாரும் பிறப்பதில்லை. உயிர் அணுக்கள் தோன்றிய நாள் முதலே சமமான நிலையில்தான் எல்லா உயிரணுக்களுமே ஜீவன் பெற்றன.

ஆண்டவனாகவும் மனிதனாகவும் பேயாகவும் மிருகமாகவும் மற்ற எல்லா ஜீவ ஜெந்துக்களாகவும் ஆனதெல்லாமே அதனதன் சந்தர்ப்பம் தான்.
1.அச்சக்தியின் அருளில் சமமான நிலையில் வந்த உயிரணுக்கள் எல்லாம்
2.அதனதன் சுவாச நிலை கொண்டு பல நிலை கொண்ட ரூபமெடுத்து ஜீவன் பெற்று வாழ்கின்றது.

உலக ஆரம்பத்தில் உயிர் பெற்ற நாம் எல்லாருமே ஆண்டவனாகவும் மனிதனாகவும் மற்ற ஜீவராசிகளாகவும் இன்றைய உலகில் ஜீவன் பெற்று வாழ்வதெல்லாம்
1.நாம் அன்று எடுத்த
2.அதே போல இன்று எடுக்கும் சுவாச நிலை கொண்டு
3.நமக்கு நாமே தேடிக்கொண்ட நிலைதான்…!

இன்றுள்ள நிலையையாவது நிலை நிறுத்தி வாழ்வதற்குத்தான் இந்த உபதேசமே கொடுக்கின்றோம்.
1.ஆண்டவன் பிறப்பு வேறு…!
2.மனிதன் பிறப்பு வேறு…! என்ற
3.மாறுபட்ட நிலை அச்சக்தியின் அருளிலிருந்து நாம் பெறவில்லை.

நாம் இன்று மனித உடல் பெற்று வாழும் வாழ்க்கையை அதிலுள்ள உண்மையை ஊன்றிப் பார்த்தால் தெய்வ நிலையில் இருந்து மனித நிலைக்கு வந்ததுதான்.

மனிதனின் நிலை கொண்டு நம் நிலையை நாம் உணர்ந்து… நாம் விட்டு வந்த தெய்வப் பிறவியை நாம் ஏற்கும் நிலையே நமக்கு முன்னாடி உள்ளது.

ஆகவே
1.தெய்வத்தின் தெய்வமாகக் கலந்துறவாடும் நிலையை ஏற்ற நாம்
2.இந்தப் பிறவியிலேயே அப்பாக்கியத்தைப் பெற்று வாழ்ந்திட வேண்டும்.
3.மனிதனின் நிலை - தன்னை அறிந்து வாழ்ந்திட வேண்டும்.
4.தன் நிலை உணர்ந்து தான் வாழும் வாழ்க்கை என்பது “காலமும் நேரமும் பார்த்து அது வருவதில்லை…!

ஏனென்றால் காலத்தையும் நேரத்தையும் பார்த்துக் கொண்டு மனிதன் தன் நிலையில் தன் சுவாசத்தையும் எண்ணத்தையும் கெடுத்துக் கொள்கின்றான்.

அப்படிக் கெடுத்துக் கொள்வதால்தான் மனிதனுக்கு அடுத்துத் தெய்வமாகும் நிலையை மாற்றி ஆவி உலகில் அல்லல் பட்டுக் கொண்டு பல ஜென்மங்கள் ஜென்மங்களாக… பல ஜீவராசிகளின் ஜென்மங்களைப் பெற்றுச் சுற்றிக் கொண்டே உள்ளான்…!

அந்த நிலையை நாம் ஏன் பெற வேண்டும்…?

உலக மாற்றம் அருகிலே வந்துவிட்டது. ஆகவே நல்ல நினைவு இருக்கும் இந்த நேரத்திலேயே மனிதப் பிறவியின் உய்வைக் காணுங்கள். அந்த நிலையை அடைந்த தெய்வ நிலைகள் பெற்ற
1.மெய் ஞானிகளுடன் ஒன்றி வாழும் தகுதியை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளுங்கள்.
2.பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளியின் சரீரம் பெறுங்கள்.
3.அகண்ட அண்டத்தில் என்றுமே நிலைத்திடும் நிலையாக வேகா நிலை அடையுங்கள்.