ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 19, 2022

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலை வரும்போது பிறவியில்லா நிலை அடையும் தகுதி இழக்கப்படுகின்றது

பல கோடிச் சரீரங்களைக் கடந்து மனிதனாக உருப்பெற்றபின் விஞ்ஞான அறிவால் பேரழிவுகள் இந்த பூமியில் இன்று பரவிக் கொண்டுள்ளது.

1.பக்தி மார்க்கங்களிலும் கடவுளை வணங்குவது எல்லாம் இந்த உடலுக்கு வேண்டிய சுகத்திற்குத் தான்.
2.இந்த உடலில் வரும் தீமைகளை மாற்ற அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற வேண்டும் என்றால் அதை யாரும் எடுப்பதில்லை.
3.அருள் மகரிஷிகளின் உணர்வுகளை நுகரும் பொழுது இந்த வாழ்க்கையில் வரும் குறைகளை நீக்கும்...
4.அதே சமயத்தில் அந்த ஞானிகளின் உணர்வுகள் நமக்குள் ஓங்கி வளரும் என்ற நம்பிக்கை யாருக்கும் வருவதே இல்லை.

விஞ்ஞான அறிவால் இன்று பல ஆடம்பரப் பொருட்களை விரும்புகின்றோம். அதன் வழி கொண்டு செயல்பட்டாலும் டி.வி. மற்ற தொலைத் தொடர்பு உபகரணங்களை நாம் உபயோகப்படுத்தும் பொழுது உலகம் முழுவதும் நடக்கும் அசம்பாவிதங்களைப் படமாக்கி அதை உடனுக்குடன் காட்டுகின்றனர்.

ஒரு கர்ப்பமுற்ற தாய் இதையெல்லாம் உற்றுப் பார்க்கும் நிலை வந்தால் குறிப்பாக... “ஒன்றிலிருந்து 90 நாட்களுக்குள் இதை நுகர்ந்தால்...” அந்த குழந்தையின் உடலிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கி விடுகின்றது.

அங்கே சிதைந்த உணர்வுகள் டி.வி. மற்ற சாதனங்கள் மூலமாக இங்கே வருகின்றது. சிதைந்திடும் உணர்வுகள் இந்தக் குழந்தையிடமும் விளைகின்றது கருவிலேயே...!

இதைப் போன்று நம்மை அறியாத நிலையில் எத்தனையோ வருகின்றது.

இவ்வாறு ஒளி ஒலி அலைகளை அடிக்கடி இப்படி ஒளிபரப்பு செய்கின்றனர். எங்கே சிதைந்த உடலிலிருந்து அந்த உணர்வலைகள் வெளிப்பட்டதோ அந்த உணர்வலைகளை நுகரும் தன்மை வருகின்றது.

இன்று எங்கேயோ நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளையும் வீட்டில் இருந்தபடியே உடனடியாக இங்கே அந்தச் செய்திகளைப் பார்க்கவும் படிக்கவும் பல பிரதிகள் (COPY) எடுக்கவும் முடிகின்றது... மற்றவருக்கு அனுப்பவும் முடிகிறது.

காரணம்... காற்றின் அழுத்தத்தால் கம்ப்யூட்டர் என்ற சாதனத்தால் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற முறைகளை வைத்து மாற்றிக் கொண்டு வருகிறார்.

எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற தொடர்வரிசை கொண்டு இதே அழுத்தங்களை எண்ணப்படும் பொழுது அந்த அழுத்த உணர்வுகள் எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்காக மனிதனுடைய படத்தையே அங்கு காட்டுகின்றது.

உலகெங்கிலும் நடக்கும் நிகழ்ச்சிகளை ஒரு நொடிப் பொழுதில் இங்கே கிடைக்கும்படி செய்கின்றார். ஆக மனிதனின் வாழ்க்கையில் இவ்வாறு நாம் செய்தாலும் அது மனிதனுக்கு “எவ்வளவு பெரிய தீங்கு விளைவிக்கின்றது...?” என்ற நிலைகளை நாம் மறந்துவிட்டோம்.

1.எலக்ட்ரிக் எலக்ட்ரானிக் என்ற நிலையில் வரும் பொழுது மனித உடலின் இச்சைதான் வருகின்றது
2.மனிதனின் கடைசி எல்லை - பிறவியில்லா நிலையை அடைய முடியாதபடி இழக்கப்படுகின்றது.

குருநாதர் காட்டிய அருள் வழிப்படி அந்த அகஸ்தியன் கண்டுணர்ந்த உணர்வின் துணை கொண்டு அவன் சென்ற பாதையில் நாம் சென்றோம் என்றால் அதன் வழிப்படி நாம் அதைப் பெற முடியும்.

அதிகாலை துருவ தியானத்தில் இதைத் தெளிவாக அதை எடுத்துக் கணவனும் மனைவியும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளை நாங்கள் பெற வேண்டும் எங்கள் இரத்த நாளங்களில் கலக்க வேண்டும் என்ற இந்த உணர்வினைத் தனக்குள் சேர்த்து
1.தன் மனைவிக்கும் அந்தச் சக்தி கிடைக்க வேண்டுமென்று என்ற நிலையைச் செயல்படுத்த வேண்டும்.
2.அதே போல் மனைவியும் தன் கணவனுக்கு அந்தச் சக்தி கிடைக்க வேண்டும் என்று செயல்படுத்தி
3.இரு உயிரும் உணர்வின் தன்மை ஒன்றிணைக்க அவசியம் பழகுதல் வேண்டும்.

கூட்டுத் தியானத்தின் மூலம் அருள் உணர்வைப் பெற்றுத் தங்களைச் சார்புடையோர் நிலைகள் உடலை விட்டுப் பிரிந்திருந்தால் அந்த ஆன்மாக்களை நாம் விண் செலுத்துதல் வேண்டும்... சப்தரிஷி மண்டலத்துடன் இணைக்க வேண்டும். அவர்கள் முன் சென்றால் நாமும் பின் செல்ல முடியும்.