ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 16, 2022

அருள் ஒளி உடலுக்குள் அதிகரிக்க உடல் பெறும் அணுக்கள் கரையத் தான் செய்யும்... கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி ஒளியாக மாற முடியும்

உதாரணமாக பாம்பினை நாம் கொன்றால் அந்தப் பாம்பின் உயிரான்மா நம் உடலுக்குள் வந்துவிடுகின்றது. ஆனால் பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் இந்த விஷத்தின் தன்மை உடல் முழுவதும் பரவும் போது பாம்பின் நினைவே நமக்குள் வருகின்றது. விஷம் அதனின் நினைவுக்கே அழைத்துச் செல்கின்றது.

எத்தனையோ கோடிச் சரீரங்களைக் கடந்து இன்று நாம் மனிதனாக வந்தாலும் அதனின் உணர்வு நம்முடைய நினைவாற்றல் அனைத்தையும் மடியச் செய்து விடுகின்றது. இந்த உடலை விட்டுச் சென்றபின் அதனின் ஈர்ப்புக்குள் சென்று நாம் பாம்பாகத் தான் பிறக்க நேரிடும்.

எத்தனையோ காலம் பல உடல்களைக் கடந்து மனிதராக உடல் பெற்றாலும் இத்தகைய தீமைகளிலிருந்து மீள வேண்டும் என்றால்
1.விஷத்தை வென்ற விஷத்தை ஒளியாக மாற்றிய
2.அந்தத் துருவ மகரிஷி துருவ நட்சத்திரமான அந்த நிலைகளை நாம் நுகர்ந்தோம் என்றால்
3.பாம்பின் நினைவு மறைந்து நஞ்சினை வென்ற நினைவு வரும்.
4.அந்தப் பாம்பினத்திற்குள் போகாது தடைப்படுத்த முடியும்.

நம் உணர்வின் நினைவலைகள்
1.கண் கொண்டு கடைசியில்... எது நினைவுக்கு வந்ததோ
2.அங்கே இந்த உணர்வின் துணை கொண்டு கண்ணன் பார்த்தசாரதியாக
3.எந்தத் துருவ நட்சத்திரத்தின் வலிமை பெற்றதோ அங்கே அழைத்துச் செல்லும் நம் கண்கள்.

ஆனால் அதற்கு மாறாகப் பாம்பினத்தின் நினைவுகள் வரும் போது அது வலுவாகி விட்டால் நாம் கூர்மையாக உற்றுப் பார்க்கும் பொழுது இந்தக் கண் “இந்தப் பாம்பு தான் தன்னைத் தீண்டியது...” என்ற உணர்வுடன் அந்த விஷத்தின் தன்மை வலுவானால் இதே கண்கள் பாம்பின் உடலுக்குள் நம்மை அழைத்துச் சென்று விடுகின்றது.

அது தான் கண்ணன் அர்ஜுனனுக்குச் சாரதியாகச் சென்றான் என்று சொல்வது. பாம்பின் உணர்வுகள் நம் உடலுக்குள் வலிமை ஆகிவிட்டால் அர்ஜுனன்...! அப்போது அந்தப் பாம்பிடம் இருந்து தப்பிக்க கண்கள் எத்தனையோ உபாயங்களைச் சொல்கின்றது.

இருப்பினும் இந்தக் கண் அதனின் உணர்வை வலுவாக்கிவிட்டால் அர்ஜுனன் ஆகின்றது. அர்ஜுனன் ஆன பின் எந்த உடலின் தன்மை கொண்டதோ இந்த உடலைத் தீண்டினாலும் அதன் உடலுக்குள் நாம் (உயிரான்மா) சென்ற பின் அது பாதுகாப்பு தருகிறது.

கண்கள் எதனின் உணர்வை நுகர்ந்ததோ... அதன் வழியிலேயே நம்மை அழைத்துச் சென்று... அதன் வழியில் நம்மைப் பாதுகாக்கச் செய்கிறது.

ஒரு பாம்பு நம்மைத் தீண்டிவிட்டால் நம் நினைவுகள் அதனை வலு கொண்டு எண்ணும் பொழுது இந்த உடலில் அந்த நஞ்சு பாய்ந்தாலும் நஞ்சு கலந்த உணர்வு பாய்ந்தாலும்
1.பாதுகாப்பான இடங்களை அந்தத் துருவ நட்சத்திரத்தினை நாம் எண்ணும் பொழுது அது வலிமை பெற்று
2.இந்த உடலை விட்டு வந்தாலும் இது அர்ஜுனன் ஆகி அங்கே சப்தரிஷி மண்டலத்திற்கு அழைத்துச் சென்று நஞ்சினை ஒடுக்கச் செய்கின்றது
3.உடலை விட்டு நாம் செல்லும் பொழுது அதன் அருகில் செல்கின்றோம்
4.நஞ்சை வென்ற உணர்வுகள் பட்டபின் உடல் பெறும் உணர்வுகள் அங்கே கரைகின்றது.
5.மனிதர் என்ற அறிவின் ஒளிகள் நமக்குள் மிச்சமாகிறது.

அது தான் பிறவியில்லா நிலை என்று சொல்வது.

ஆகவே நம் வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் இந்த உடலை விட்டு நம் உயிரான்மா வெளியில் சென்றால்
1.எது நம்மைத் தாக்கியதோ அந்த உணர்வின் வலுவாகி அதற்குள் செல்வதற்கு முன்
2.துருவ நட்சத்திரத்தின் சக்தியை வைத்து அதனின் வலுவை இழக்கச் செய்து
3.அருள் ஒளியின் உணர்வைப் பெறும் தகுதியை நாம் பெற வேண்டும்.

காலை துருவ தியானத்தில் நாம் அதை வலுப் பெறச் செய்தல் வேண்டும்.

துருவ நட்சத்திரத்தின் உணர்வை நாம் இந்த உடலிலே எடுத்தாலும்
1.ஒளியின் உணர்வுகள் அதிகரிக்க இந்த உடலை உருவாக்கிய அணுக்களும் அந்த ஒளி பட்டு இது கரையத் தான் செய்யும்
2.இது கரைந்தால் தான் உயிருடன் ஒன்றி நாம் ஒளியாக மாற முடியும்.

உடலுடனே நான் இருப்பேன் என்று எந்த மகரிஷியும் இருந்ததில்லை. எதனின் உணர்வைக் கொண்டு இந்த உடலை விட்டுச் சென்றானோ ஒளியின் சரீரமாக மாறுகின்றான்.

அத்தகைய நிலையை நாம் ஒவ்வொருவரும் அடைய வேண்டும்.