ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 22, 2022

உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது மனதை மட்டும் “நான்…!” என்று ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?

தாய் தந்தையில்லாமல் குழந்தையில்லை...! நிலம் நீர் இல்லாமல் “தாவர இனங்கள் இல்லை….!” சூரியனின் ஒளிக் கதிர்கள் இல்லாமல் பூமியுமில்லை…! பல மண்டலங்களின் நிலையில்லாமல் சூரியனுமில்லை…!

சூரியனின் நிலை இல்லாமல் பல மண்டலங்களுமில்லை…! சூரியனுக்கே சக்தி தரும் பல கோடிச் சூரியன்கள் இல்லாமல் இயங்காமல் இந்த மண்டலங்கள் சூரியன்கள் எதுவுமே இல்லை…!

இந்த மண்டலங்களின் தன்மை எதுவும் இல்லாமல் காற்றும் மழையும் ஒளியுமில்லை…! இப்படி இந்த எல்லா நிலைகளையும் ஆட்டிப் படைக்கும் அத் தேவனின் சக்தி ஒன்றே தான்… ஒரே நிலை கொண்டு தனித்து வணங்கிடும் அவ்வாண்டவனின் சக்தி…!
1.அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து இயங்குபவை எல்லாமே
2.எதுவுமே தனித்து இல்லை….
3.ஒன்றை ஒன்று ஒட்டித்தான் எல்லாமே உள்ளன.

ஆனால் இன்றைய மனிதர்களில் சிலரின் நிலை “நான்…!” என்ற ஆணவத்தில் இயங்கி வருகிறது. அந்த நான் என்ற ஆணவத்தை விட்டகற்றிடும் அவன் மன நிலையை அச்சகலத்திலும் கலந்துள்ள அவ்வாண்டவனின் சக்தியிலிருந்து தான் அவன் பெற வேண்டும்.

ஆண்டவனே இல்லை என்று சொல்லும் யாராக இருந்தாலும் இதைப் படித்து விட்டுப் பதில் சொல்லட்டும்…!

1.இந்த உடலும் உயிரும் வேறு வேறாக உள்ள பொழுது
2.நம் மனதை மட்டும் “நான்…!” என்ற நிலையில் ஏன் இயங்கச் செய்ய வேண்டும்…?
3.நான் என்ற நிலை கொண்ட மன நிலையை விட்டு அகற்றிடுங்கள்.

இந்தக் கலியின் கடைசி நிலை கொண்டு நாம் எல்லோரும் வாழ்கிறோம் என்ற உண்மையை அறிந்து இனி நல்ல வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்னும் நிலையில் அவ்வாண்டவனை வேண்டி அருள் பெற்று வாழ்ந்திடுங்கள் நல் வாழ்க்கையை.

ஆண்டவனின் சக்தி… ஆண்டவனின் சக்தி… என்று சொல்லும் பொழுதே ஆண்டவனை ஆண்பாலாகவும் சக்தியினைப் பெண்பாலாகவும் கொண்டு யாம் (ஈஸ்வரபட்டர்) எதையும் தனித்துச் சொல்லவில்லை.

எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து தான் உள்ளது. அந்த ஆண்டவனின் சக்தி நிலை இயங்குவதற்கே இப்பல மண்டலங்கள் இல்லாவிட்டால் பொருளில்லை.

இந்த நிலையில் ஆண்டவன் எங்கப்பா தனித்து நிற்கின்றான்…?

1.நாம் தனியாக இயங்கவில்லை (நம் எண்ணத்தில் தான்…!)
2.அவன் ஒருவன் உள்ளான் என்ற நிலையில் நாம் வாழ வேண்டும் என்பதற்காகத்தான்
3.அவ்வாண்டவனை மட்டும் தனித்த நிலையில் வணங்கச் செய்தார்கள் ஞானிகள்.

அவ்வாண்டவனின் சக்தியில் தான் எல்லா மண்டலங்களும் எல்லா உயிரினங்களும் உள்ளன.

1.அவ்வாண்டவனே தான் எல்லாமே
2.ஆண்டவன் என்பவன் தனித்து எங்குமில்லை
3.அவ்வாண்டவன் என்பவன் தான் எல்லாமே என்ற உண்மை மட்டும் தனித்து இருக்கிறதப்பா…!

அவ்வாண்டவனின் சக்தியை நீங்கள் எந்த ரூபம் கொண்டும் எந்த நிலை கொண்டும் அவரவர்கள் மன நிலைக்கு உகந்தபடி வணங்கி வாழ்ந்திடுங்கள். நம்முள்ளே உள்ள ஈசனையே நாம் காணும் பாக்கியம் பெற்றிடலாம்.

அந்த ஆண்டவனின் சக்தி நிலையும்… எந்த நிலை கொண்டு இருக்கிறது என்பதனையும் தான் புகட்டியுள்ளோம்.

ஆண்டவன் என்பவன் யாரென்று புரிகின்றதா…?

ஆண்டவன் என்பவன் யார்…? நம் கண்ணிற்கும் நம் எண்ணத்திற்கும் புலப்படாத இந்தப் புவியிலும் மற்ற எல்லா நிலைகளிலுமே கலந்துள்ள சக்தியை யாரும் எந்த நிலையிலும் முழு உருவம் கொடுத்து ஆண்டவன் என்னும் ஒருநிலைப்படுத்திச் சொல்லும் நிலையில் ஆண்டவன் எங்குள்ளான்…?

ஆண்டவனின் நிலையையே பல மதங்களாக்கிப் பல ரூபங்கள் தந்து அவரவர்கள் வழிக்கு வணங்குகின்றார்கள். இவ்வுலகில் உதித்த எல்லாமே அச்சக்தியின் அருள் பெற்ற ஆண்டவன் தான்.

இங்கு ஆண்டவனை வணங்கும் முறையே பல உருவங்களை ஆண்டவனுக்கு அளித்து உருவ ரூபப்படுத்தி ஆண்டவனுக்குப் பல அபிஷேகங்கள் செய்து பொருள் உள்ளவர்கள் மட்டும் தான் ஆண்டவன் அருளைப் பெற முடியும் என்ற முறையையும் ஏற்படுத்தி ஆண்டவனின் சக்தியை வணங்கவே பல பல வழிகளை சாஸ்திரங்களின் பெயரால் புரியாத நிலைப்படுத்தி வணங்குகின்றார்கள்.

ஒவ்வொருவரும் அவர் எடுக்கும் சுவாச நிலையும் எண்ண நிலையும் கொண்டு ஆண்டவனாகலாம். எல்லோருமே ஆண்டவன் தான். எண்ணத்தினால் தான் நாம் ஆண்டவனாகவும் பேயாகவும் உலவி வருகிறோம்.

1.எத்தனையோ ஞானிகளும் மகான்களும் சாஸ்திரங்களாகக் கொடுத்த நற்போதனைகளை
2.அவர்கள் உடலுடன் வாழ்ந்த காலத்தில் ஏற்று நடத்திடாமல் இன்று
3.அவர்களின் பெயரைச் சொல்லிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒருவர் மேல் ஒருவர் துவேஷமும் நயவஞ்சகமும் கொண்டு வாழ்வதும் நல் உபதேசத்தை ஏற்கும் மன நிலையை மாற்றித்தான் வாழ்ந்து வருகின்றார்கள்.

நாளேடுகளிலும் சினிமா டி.வி.யிலும் மற்ற வழிகளிலும் உணர்ச்சிகளைத் தூண்டும் வகையிலும் ஆவேசம் கொண்டு வாழ்ந்திடும் படங்களைக் காட்சியாக காண்பித்து மக்களின் மனதையே பெரும் உந்துதலுக்குண்டான நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

அரசியல் என்னும் நிலையிலும் பல ஆவேச நிலை கொண்ட தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் நிலையில் தான் இன்று ஆட்சி செய்பவர்களும் உள்ளார்கள். பல கோடி நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்பதை எல்லாம் மறந்து நாம் பயத்துடனே இன்று வாழ்கின்றோம்.

அதை எல்லாம் மாற்றிவிட்டு நம் பூமியிலே தோன்றி வாழ்ந்து வளர்ந்து சூட்சம நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மகரிஷிகளின் ஞானிகளின் ஆசியுடன் வாழ்கின்றோம் என்ற பேருண்மையை உணர்ந்து ஜாதி மதம் பாவம் நயவஞ்சகம் இந்த நிலை எல்லாம் மறந்து ஒவ்வொருவரும் மனிதனாகப் பிறந்த பாக்கியத்தை எண்ணி வாழுங்கள்.

1.இது வரை நடந்தவைகளை நடந்தவையாகவே விட்டு விட்டு
2.இனி நடக்கப் போகும் காலங்களை நல்ல சுவாச நிலையுடன்
3.நம் உயிரணுவிற்கு உன்னத பொக்கிஷத்தைத் தேடித் தந்து
4.நமக்காக மட்டும் வாழாமல் நம்முடன் தோன்றிய எல்லா உயிரணுக்களுமே நம்மில் ஒன்றாக எண்ணி உயர்ந்து வாழ்ந்திடுங்கள்.

அன்றிலிருந்து இன்று வரை தோன்றிய எல்லோருமே அன்பைத்தான் ஆண்டவனாகக் காட்டினார்கள் எல்லா உயிரினங்களிலுமே கலந்துள்ள அச்சக்தியின் அன்பைச் சகலமும் போற்றி வணங்கி வாழ்ந்திடுங்கள்.

இக்கலியை கல்கியாக்கி வாழ்ந்திடுங்கள். கலியை ஆண்டவன் வந்து கலியாக்குவதில்லை. இக்கலியில் வாழ்ந்திடும் ஆண்டவன்கள் எல்லோருமே ஆண்டவன்கள் என்பது யாரென்று புரிந்ததா…?

இக்கலியில் உள்ள உயிரணுக்களான நாம் எல்லோருமே தான் கலியைக் கல்கியாக்கி வாழ்ந்திட வேண்டுமப்பா.
1.ஒவ்வொரு காலங்களும் தானாக மாறுவதில்லை
2.மனிதர்கள் மன நிலையை வைத்துத்தான் கால நிலையும் மாறுகின்றது.

ஒவ்வொரு அவதாரமும் அன்றன்று வாழ்ந்து மனிதரின் மன நிலையை வைத்துத் தான் மாறுபடுகிறது. இன்று மக்கள் மனதில் தோன்றியுள்ள பெரும் பீதிக்கு மூல காரணமே இந்த மன நிலை மாறுவதற்காகத்தான்… நம் ஞானிகளின் நிலை கொண்டே நடந்திடும் “பெரும் நாடகம்…”

நாடகத்தின் தொடரை இனிக் கண்டு வாழ்ந்திடலாம். இந்த நிலையிலிருந்து மக்களின் மன நிலையில் பெறும் மாற்றம் வந்திடுமப்பா.

அந்த நிலை நடப்பதற்காகத்தான் சூட்சம நிலையில் உள்ளவர்கள் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்ளும் காலத்தை உண்டு பண்ணி மனிதர்களின் மனதிற்குப் போதனைக்கு விட்டுள்ளார்கள்.

இன்றைய செயற்கையின் கோளத்தை அந்த நிலையின் உண்மைகளை நாமும் (எல்லோரும்) பார்த்திடலாம்.