ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 20, 2022

குருவின் அருள் பாதுகாப்பு

 

நான் (ஞானகுரு) எத்தனையோ சிரமங்கள் பட்டேன். காட்டிற்குள் சென்று பல துன்பங்களை அனுபவித்துக் குருநாதர் காட்டிய உண்மைகளையெல்லாம் அறிந்து அதை உங்களுக்குள் பதிவு செய்து அந்த உணர்வை வளர்க்கும் நிலைக்குக் கொண்டு வருகின்றோம்.

ஆனால் பற்று கொண்டவர்கள் இரவெல்லாம் சாமி...! எனக்குத் தலை வலிக்கிறது... மேல் வலிக்குதே... உடம்பு வலிக்குதே... என்னை காப்பாற்ற மாட்டீர்களா...! என்று தான் நினைக்கிறார்கள்.

சாமியைத் தான் நினைக்கின்றார்களே தவிர
1.அருள் மகரிஷிகளின் உணர்வுகள் நாங்கள் பெற வேண்டும் என்றும்
2.அது எங்கள் உடலில் படர வேண்டும் எங்கள் இரத்தநாளங்களில் கலக்க வேண்டும்
3.தீமையை வென்றிடும் அந்த அருள் சக்தி எனக்குள் வளர வேண்டும் என்று
4.ஒவ்வொருவரும் எண்ணுங்கள் என்றும் யாம் சொன்னாலும் அதை எண்ணுவதில்லை.

சாமியைத் தான் நினைக்கிறார்கள்... ஆனால் ஞான வித்தை நான் தான் உங்களுக்கு பதிவு செய்திருக்கின்றேன்.

இது போன்று ஆயிரம் பேருடைய உணர்வு என்னைத் தாக்கினால் எனக்கு எப்படி இருக்கும்...? அத்தனை பாதிப்புக்கும் நான் உள்ளாக வேண்டியிருக்கின்றது இத்தனைக்கும் நான் சமாளிக்க வேண்டி இருக்கின்றது
1.என்னையும் காக்க வேண்டும்... உங்களுக்கும் கொடுக்க வேண்டும்.
2.என்னை அந்த உணர்வுகள் சாடாதபடி பாதுகாத்துக் கொள்வதற்குக் குருநாதர் அருள் கொடுத்தார்
3.அதைப் போன்று உங்களுக்கும் அந்த அருள் பாதுகாப்பு உண்டு... என்றுமே எமது அருள் உறுதுணையாக இருக்கும்.

அதை எல்லாம் நீங்கள் எளிதில் பெற முடியும். குரு அருள் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். அது கிடைக்கச் செய்வதற்குத் தான் இதைச் சொல்வது.

இந்த வாழ்க்கை என்ன...? என்று அறிந்து கொண்டபின் இனி நாம் எப்படி வாழ வேண்டும்... என்ற நிலையில் உடலுக்குப்பின் பிறவியில்லா நிலை அடைதல் வேண்டும்.

ஆனால் ஒரு பிறவி என்று இனி வந்தாலோ நரகத்திற்குத் தான் நாம் செல்கின்றோம். இப்போது நரகலோகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
1.மனித உடல் பெற்றால் சொர்க்கலோகம் என்று சொல்வார்கள்
2.அது பண்டைய காலமாகப் போய்விட்டது.

உடலுக்குள் பல வேதனையும் நரக வேதனை உருவாக்கும் உணர்வுகளையும் நுகர்ந்து நுகர்ந்து ஒவ்வொரு நொடியிலும் போர் முறைகளே நமக்குள் வருகின்றது.

நல்ல குணங்களுக்கும்... தீமை செய்யும் குணங்களுக்கும்... மற்றவர்கள் செய்யும் உணர்வுகளை நுகர்ந்தபின் நமக்குள் பெரிய போரே நடக்கின்றது இந்த போரினால் மனக் கலக்கங்கள் வருகின்றது... உடல் நோய்கள் வருகின்றது... சிந்திக்கும் திறன் இழக்கப்படுகின்றது.

நம் உடலுக்குள் நாம் நுகர்ந்த வேதனையின் உணர்வுகள் எது அதிகமோ அதன்வழி இந்த உணர்வுகள் சென்று அந்த வழிக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது.

1.என்ன வாழ்க்கை என்றும் இனி வாழ்ந்து என்ன...? என்றும்
2.இந்த உடலையே அழித்திடும் நிலைக்குத் திருப்பி விடுகிறது.

இதை எல்லாம் நாம் செய்யவில்லை. உணர்வின் இயக்கங்கள் உயிரிலே பட்டபின் அது எதுவோ அந்த உணர்ச்சிக்கொப்ப நம்மைச் செயலாக்குவதும் இதே உயிரே தான்.

ஆகவே அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும் என்றும் இருளை அகற்ற வேண்டும் என்றும் அருள் ஞானத்தை உங்களுக்குள் பதித்தல் வேண்டும்.

பதித்த அந்த நினைவு கொண்டு காலை துருவ தியானத்தில் துருவ நட்சத்திரத்தின் சக்தியை வளர்த்துக் கொண்டால்
1.வாழ்க்கையில் வரும் போர்களை அடக்கும்.
2.அது எத்தகைய போராக இருப்பினும் நம்மைப் பாதிக்காத நிலையில் கொண்டு வரலாம்.

அத்தகைய வலிமை பெற்று விட்டால் நாம் எந்தத் துருவ நட்சத்திரத்தின் சக்தியின் வலுவைப் பெற்றோமோ உடலை விட்டுச் சென்ற பின் நம்மைப் பிறவியில்லா நிலைக்கு அழைத்துச் செல்லும்.