ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 11, 2022

ஈஸ்வரபட்டர் சாக்கடை அருகே எம்மை (ஞானகுரு) அமர வைத்துச் சொன்னது…

1.துருவ நட்சத்திரமாக இருக்கும் அந்த அருள் உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.புருவ மத்தியில் நினைவு கொள்
3.சாக்கடை நாற்றம் உனக்குள் வருகிறதா என்று பார்..!
4.வராது… உன்னால் அதை உணர முடியாது என்று தெளிவாக்கினார்.

ஏனென்றால் துருவ நட்சத்திரத்தின் சக்தியைத் தனக்குள் எடுத்த பின் இது தீமைகளை வெளியேற்றிக் கழித்து விடுகிறது. இதைத் தான் மடி மீது இரண்யனை வைத்து நரநாராயணன் வாசல்படி மீது அமர்ந்து அவனைப் பிளந்தான்… “நரசிம்ம அவதாரம்” என்று சொல்வது.

ஆறாவது அறிவின் துணை கொண்டு அருள் மகரிஷிகளின் உணர்வை எடுத்துப் புருவ மத்தியில் உயிருடன் ஒன்றப்படும் போது வலிமையான சக்தியாக உருப்பெறுகிறது.

எப்போதெல்லாம் தீமைகளைப் பார்க்கின்றோமோ அந்தத் தீமை நமக்குள் அணுவாக உருவாவதற்கு முன் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறப் பழகிக் கொள்ள வேண்டும்.

சாக்கடையின் அருகிலே அமரச் செய்து எனக்கு நேரடி அனுபவமாகத் தான் குருநாதர் அதைக் காட்டினார்.

எனக்குக் காபியும் அவருக்கு டீயும் வாங்கி வரச் சொல்லி சாக்கடையிலிருந்து அள்ளிப் போட்ட குப்பைகளை காபியில் போட்டுக் குடிக்கச் சொன்னார். அவர் டீயிலும் அள்ளிப் போட்டு அவர் குடிக்கின்றார்.

ஈஸ்வரா என்று உன் புருவ மத்தியில் எண்ணி அதைக் அதைக் குடித்துப் பார் என்றார்… குடிக்கச் செய்தார்.
1.அவர் சொன்ன முறைப்படி எண்ணும் போது
2.அந்த நாற்றம் வரவில்லை… அந்த மணம் எனக்குள் வரவில்லை.

ஆனால் முதலிலே குடிக்க மறுத்தேன். குருநாதர் “குடி…!” என்றார். நீ நுகர்ந்த துருவ நட்சத்திரத்தின் சக்தி இந்த உணர்வின் சுவைகளை எப்படி மாற்றுகிறது…? தீமைகள் அணுகாது எப்படித் தடுக்கிறது…? என்று நேரடியாகக் காட்டுகிறார்.

1.ஒரு திரவகத்தை ஊற்றினால் அது பட்டவுடனே மற்ற தீமைகளை அது எப்படி ஆவியாக மாற்றுகின்றதோ
2.அதைப் போல் நஞ்சினை வென்ற அந்தத் துருவ மகரிஷியின் உணர்வை உனக்குள் நீ எடுக்கப்படும் போது
3.அந்த நஞ்சு உட்புகாது… புறத்தாலே கழித்துவிடுகிறது என்றார்.

முதலில் நான் மறுத்தேன். ஆனால் “அவர் குடிக்கின்றாரே…” என்ற எண்ணம் எனக்குள் வந்த பின் நீ கொஞ்சம் குடித்துப் பார் என்றார் குருநாதர்.
1.அப்போது தேவாமிர்தம் போன்று அந்த மணத்தை மாற்றுகிறது.
2.மகிழ்ச்சி ஊட்டும் உணர்வுகளை அங்கே உருவாக்குகிறது.

தீமைகளை நீ எப்படி நீக்க வேண்டும்…? நரசிம்ம அவதாரமாக நீ எப்படி ஆக வேண்டும்…? இயற்கையிலே இதை அனுபவமாகக் காட்டுகின்றார் குருநாதர்.

அருள் ஞானி அகஸ்தியன் தன் வாழ்க்கையில் தீமைகளை வென்று இன்றும் துருவ நட்சத்திரமாக இருக்கும் அவனின்று வெளி வரும் ஆற்றலைச் சூரியனின் காந்த சக்தி கவர்ந்து வருகிறது.
1.அதை நீ உற்றுப் பார்…! என்று அந்த உணர்வின் தன்மையை நினைவாக்குகின்றார்
2.அந்தத் துருவ நட்சத்திரத்துடன் என் நினைவை இணைக்கின்றார்.

அதனின்று வெளிப்படும் உணர்வுகள் எப்படிப் பரவுகிறது…? சூரியன் எப்படி அதைக் கவர்கிறது…?
1.அந்த உணர்வைப் பெற வேண்டும் என்று நீ ஏங்கிப் பெறு
2.அதை உன் புருவ மத்தியில் எண்ணி நுகரப்படும் போது ஒளிக் கதிர்கள் எப்படித் தெரிகிறது…? என்று பார்.

அந்த ஒளிக் கற்றைகள் உன் உடலுக்குள் பரவப்படும் போது அதனின் உணர்ச்சிகளைத் தூண்டுகிறது. ஒளியான அணுவின் கருவாக மாற்றும் தன்மை பெறுகிறது என்று காட்டுகின்றார்.

அதற்குத்தான் அடிக்கடி உங்கள் நினைவினை அந்தத் துருவ நட்சத்திரத்துடன் இணைக்கச் செய்து கொண்டே இருக்கின்றோம்.

அந்தச் சக்தியைப் பெறச் செய்யும் தகுதிக்குத் தான் துருவ தியானத்தில் உங்கள் நினைவினை விண்ணை நோக்கிச் செலுத்தச் செய்யும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.

1.எனது குரு எனக்கு எப்படிச் செய்தாரோ அதே போல்
2.நீங்களும் அந்தத் துருவ நட்சத்திரத்தினை நுகரும் சக்தியாக அடிக்கடி இந்த உபதேச வாயிலாக உணர்த்தி
3.கேட்டறிந்த உணர்வுகள் உங்களுக்குள் அணுக் கருவாக உருவாக்கப்படும் போது
4.மெய் ஞானிகளின் உணர்ச்சிகளைத் தூண்டி அந்த நினைவுகளைக் கொண்டு வரும்படி செய்கிறேன் (ஞானகுரு).